இந்தோனேசிய மாணவர்கள்
இந்தோனேசியாவைப் பற்றி நம்மிடையே பல்வேறு கருத்துகள் உலவுகின்றன.
ஒரு காலத்தில் அவர்களை நாம் ஏளனமாக பார்த்த நாள்கள் உண்டு. ஒரே காரணம் தான். அந்தக் காலத்திலிருந்து அவர்கள் இங்கு பலவேறு வேலைகளில் ஈடுபட்டிருக்கின்றனர். அப்போது நாம் பார்த்ததெல்லாம் அவர்கள் கட்டுமானத் தொழில்களில் தான் அவர்களைப் பார்க்க முடிந்தது. இங்குள்ள பெரும்பாலான கட்டடங்கள் அவர்களால் கட்டப்பட்டவைகள் தாம். ஆனால் இன்று நிலைமை மாறிவிட்டது.
இன்றைய நிலையில் அவர்கள் இல்லாத துறையே இல்லை. எல்லாவற்றிலும் அவர்களின் பங்குண்டு.
ஒரு காலத்தில் அவர்கள் நாட்டைக் கொஞ்சம் கீழாகப் பார்க்கும் போக்கு இருந்தது. முன்னேறாத நாடு என்பது தான் நமது பார்வை. ஆனால் இன்று இந்தோனேசியா அன்று நாம் எடைபோட்டது போல இன்று அந்த நாடு இல்லை. அது தான் இப்போதுள்ள வேறுபாடு.
உண்மையைச் சொன்னால் அவர்களுக்கு அடுத்த நிலையில் தான் நாம் இருக்கிறோம்! இதில் தாய்லாந்து நாட்டையும் சேர்த்துக் கொள்ளலாம்! நமது நிலை அந்த இரு நாடுகளைவிட கீழ்நிலை தான்!
இன்று நமது மாணவர்கள் மருத்துவம் படிக்க இந்தோனேசியா போகிறார்கள். இதுவே நமக்கு ஒரு தண்டனையாகத்தான் கருத வேண்டும். ஒரு காலத்தில் நமது மருத்துவமும் அவர்களது மருத்துவமும் சமமான படிப்பாகக் கருத முடிந்ததா? இப்போது பாருங்கள். அனைத்தும் தலை கீழாக மாறிவிட்டது! மருத்துவக் கல்வியில் அவர்கள் உயர்ந்து நிற்கிறார்கள். நாம் தாழ்ந்து நிற்கிறோம்!
நமது நாட்டு கல்வி முறை அவர்களது கல்வி முறையைவிடத் தாழ்ந்து நிற்கிறது! நாம் உயர்வதற்கு எந்த முயற்சியும் செய்யவில்லை. இருப்பதே போதும் என்கிற மனநிறைவு நமக்கு ஏற்பட்டுவிட்டது! நமது மாணவர்களால் அதற்கு மேல் படிக்க முடியாது என்கிற நிலைக்கு நாம் வந்துவிட்டோம். நமது விரிவுரையாளர்கள் அதற்கு மேல் எங்களிடம் சரக்கு இல்லை என்கிற நிலைக்கு வந்துவிட்டார்கள்! இது போதும் என்கிற மனநிறைவு வந்துவிட்டதால் வெளிநாடு போய் படிக்க வேண்டும் என்றால் போய்ப் படியுங்கள் என்று அரசாங்கமே கூறுகிறது.
ஆக மலேசியர்கள் நல்ல கல்வி வேண்டுமென்றால் வெளிநாடு போங்கள் என்று சொல்லுகின்ற நிலைமை ஏற்பாட்டுவிட்டதாகத்தான் கருதுகிறேன். அதற்கு எப்போது விடிவு காலம் வரும் என்று தெரியவில்லை. இப்போதைக்கு மருத்துவக் கல்வியைப் பற்றி கூறியிருக்கிறேன். நான் கல்வியாளன் அல்ல. மேலோட்டமாக ஒரு பார்வை. அவ்வளவு தான்.
கல்வி மட்டும் அல்ல வேறு துறைகளிலும் நாம் பின் தங்கித்தான் இருக்கிறோம். ஏதாவது மாற்றங்கள் வருமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
No comments:
Post a Comment