Friday 24 November 2023

என்ன? கடவுளையும் கைவிடவேண்டுமா!

 

தேசிய அளவில் நடைப்பெற்ற செந்தமிழ் விழாவில்  கடவுள் வாழ்த்துக்குத் தடை  என்கிற செய்தி எழுதி, பேசி ஓரளவு ஒரு முடிவுக்கு வந்துவிட்டது

கல்வி அமைச்சின் சிறப்பு அதிகாரி தியாகராஜன் சங்கரநாராயணன்  அவர்களும் கல்வி அமைச்சு என்ன பதில் சொல்ல வேண்டுமோ அதனை அவர் கல்வி அமைச்சர் சார்பில் "ஏற்பாட்டாளர்களின் அறியாமையே" காரணம்   என்று சொல்லிவிட்டார்.   இது போன்ற பதில், ஒவ்வொரு  பிரச்சனையின் போதும் அவர்கள் வாடிக்கையாகக் கொடுக்கும் பதில் தான்
 
கோப்புகளைப் புரட்டினால் இது போன்ற நகல் எடுத்த பதில்கள்  ஏற்கனவே அவர்களிடம் உண்டு.!

இதுபற்றி கல்வி அமைச்சு அனைத்தையும் விசாரித்த பின்னர்    நடவைடிக்கை  எடுக்கும் என்று தியாகராஜன் கூறியிருக்கிறார்.  அப்படியெல்லாம் அவர் யார் மீதும் நடவடிக்கை எடுக்கமாட்டார் என நம்பலாம். இதற்கு முன்னர் அப்படி நடந்ததாக  எந்த வரலாறும் இல்லை.

அது சரி, அந்த நிகழ்வு நடந்த போது  எத்தனையோ பேர் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாக செய்திகள் கூறுகின்றன.  இதில் என்ன அதிர்ச்சியான செய்தி என்றால் ஏன் ஒருவர் கூட வாய்திறந்து அவர்களது எதிர்ப்பைத் தெரிவிக்கவில்லை என்பது தான்.

அரசாங்கத்தில் அங்கம் வகிப்பவர்கள்  வாய் திறக்க மாட்டார்கள்.  அது நமக்குப் புரிகிறது. ஆனால் அங்குக்  கலந்து கொண்டவர்களில்   பலர் தனியார் துறைகளில் பணிபுரிபவர்களாக இருக்கலாம். அல்லது பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர்களாக இருக்கலாம்.  இவர்கள் ஏன் வாயைத் திறக்காமல்  அமைதி காத்தார்கள்? வெளியே வந்து பத்திரிக்கைகளில்  அறிக்கைவிடுவதால் என்ன பயன்? அந்த இடத்திலேயே  நமது எதிர்ப்பைத் தெரிவித்திருந்தால்  அடுத்தமுறை இப்படி நடக்க வாய்ப்பு இல்லாமல் போயிருக்கும் அல்லவா?

ஒன்று தெரிகிறது. நமக்குள்ளேயே காட்டிக் கொடுக்கும்   எட்டப்பர்கள்  இருக்கத்தான் செய்கிறார்கள்  என்பது தெரிகிறது.  ஏதோ ஒரு கூட்டம் தமிழர்களுக்கு எதிராக சதி செய்கிறது   எத்தனை நாளைக்கு  இந்த ஆட்டம் பாட்டம் பார்ப்போம்.

நமக்குத் தெரிந்ததெல்லாம் ஒன்று தான்.  இது போன்ற புறக்கணிப்புகள் ஏற்படும் போது நமது எதிர்ப்பைத் தெரிவித்து தான் ஆக வேண்டும். வன்முறை  வேண்டாம்.   அந்த இடத்திலேயே நமது எதிர்ப்பைத் தெரிவித்தால்  இனி நடக்காமல் பார்த்துக் கொள்ளலாம். இப்போது தான்  ஒவ்வொன்றாக வெளியாகிக் கொண்டிருக்கின்றது.  மாற்றத்திற்கு ஏற்ப நாமும் மாற வேண்டும் என்கிற கட்டாயத்தில் இருக்கிறோம்.

ஒவ்வொன்றாகப் பறிபோகிறது என்றால் , கடவுளுமா?

No comments:

Post a Comment