வீட்டுக்கு வெளியே குப்பைகளை எரிக்கும் பழக்கம் நம்மிடம் எப்போதுமே உண்டு.
எதற்கும் காலம் நேரம் வேண்டும் என்பார்கள். சும்மா நினைத்துவிட்டால் உடனே நெருப்பைப் போடு! குப்பைகளை எரி! என்று இருந்துவிட முடியாது.
அதுவும் இப்போது நாம் வாழும் தாமான்களில் குப்பை எரிப்பதற்கென்று எந்த இடமும் ஒதுக்கப்படவில்லை. ஒதுக்கப்பட்ட இடத்தில் குப்பைகளைத் தொட்டிகளில் போட்டு வைத்து விட்டால் குப்பை லோரிகளில் குப்பைகளை எடுத்துச் சென்று விடுவார்கள். அதனால் எரிக்கின்ற வேலைகள் நமக்கு வேண்டாம் என்பதற்காகத்தான் எரிப்பதற்கு எந்த இடத்தையும் ஒதுக்கவில்லை.
ஒரு சிலர் என்ன சொன்னாலும் அடங்குவதில்லை. எரித்தால் தான் ஒரு நிம்மதி வரும். அப்படியென்றால் தீயை மூட்டிவிட்டு அது அனையும்வரை அருகிலேயே அமர்ந்து கொள்ள வேண்டும்! எந்த நேரத்தில் என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது. தீடீரென்று காற்றடித்தால் தீ வேகமாகப் பரவக் கூடிய சாத்தியங்கள் உண்டு. அந்த நேரத்தில் தீ எல்லை மீறுவதுமுண்டு! நல்ல நேரம் என்றால் ஒன்றுமில்லை! கெட்ட நேரம் என்றால் எல்லாமே வரும்!
நம்முடைய ஆலோசனை என்னவென்றால் வெய்யில் காலங்களில் தீ இடும் சம்பவங்களைத் தவிர்த்து விடுங்கள். எதுவும் ஆபத்துக்குள்ளாகலாம். பக்கத்து வீட்டுக்காரன் கார் கூட சேதமடையலாம்.வெய்யில் காலங்களில் இது போன்ற தீ விளையாட்டுகளை முற்றிலுமாகத் தவிர்த்து விடுவது நல்லது.
ஆபத்துகள் சொல்லிவிட்டு வருவதில்லை. அதுவே துரதிருஷ்டம்! ஆபத்து வரும்போது பக்கத்தில் யாரும் ஆளில்லை. அதான் சொல்லுவார்களே! கல்லைக் கண்டால் நாயைக் காணோம்! நாயைக் கண்டால் கல்லைக் காணோம்! அந்தக் கதை தான். ஆள் இருந்தால் கூட தீ பரவிவிட்டால் அப்புறம் கதை வேறு!
அதுவும் தாமான்களில் வாழ்பவர்கள், அதுவும் வெய்யில் காலங்களில், முற்றிலுமாக தீ மூட்டுவதை தவிர்த்து விடுங்கள். மழைக் காலங்களில் தீ வேகமாகப் பரவுவதில்லை. எப்படியோ தப்பித்து விடுகிறோம். அதனையே வெய்யில் காலங்களில் செய்யாதீர்கள்.
குப்பைகளை எரிப்பது நமது வேலையல்ல. அதற்கென்று ஆள்கள் இருக்கின்றார்கள். அவர்கள் எந்த இடத்திற்குக் கொண்டு சென்று எரிக்க வேண்டுமோ அங்கே கொண்டு சென்று எரிப்பார்கள். ஆளாளுக்கு எல்லா இடங்களிலும் எரிப்போம் என்றால் அப்புறம் சட்டத்தை எதிர்நோக்க வேண்டி வரும்!
No comments:
Post a Comment