Wednesday, 13 July 2016
90 + 10% = 100%
தம்பதியர் விட்டுக் கொடுத்து வாழ வேண்டும் என்பதைப்பற்றி முன்னரே ஏழுதியிருக்கிறேன். இன்னும் எத்தனை முறை வேண்டுமானாலும் எழுதலாம். காரணம் இளம் தம்பதியினர் இது பற்றியெல்லாம் கவலைப்படுவதாக இல்லை! 'பிடிக்கலியா விவாகரத்துப் பண்ணியிடுவோம்!' என்று சாதாரணமாக எடுத்துக் கொள்ளுகின்றனர்! ஆனால் அதனைப் புரிந்து கொள்ளுவதற்கு காலம் வரும். அப்போது அது காலம் கடந்த கதையாகிவிடும்!
கணவர்-மனைவியர் விட்டுக்கொடுத்து வாழவேண்டும் என்னும் போது எவ்வளவு விட்டுக் கொடுக்க வேண்டும்? யார் விட்டுக் கொடுக்க வேண்டும்? என்றெல்லாம் இரு பக்கமும் கேள்விகள் வருகின்றன!
வாழ்க்கை நடைமுறைகளை வைத்துப் பார்க்கும் போது பெரும்பாலான குடும்பங்களில் கணவனே அதிகம் விட்டுக் கொடுக்கிறான். எப்படிப் பார்த்தாலும் அது அப்படித்தான் நடைமுறையில் இருக்கிறது!
நான் ஏற்கனவே சொன்னது போல கணவன் தொண்ணுறு விழுக்காடும் மனைவி பத்து விழுக்காடும் விட்டுக் கொடுத்துத் தான் வாழ்க்கை நகர்ந்து கொண்டிருக்கிறது! ஆனாலும் இதனை மறுக்கும் கணவர்களும் இருக்கிறார்கள். தொண்ணூறு என்பதெல்லாம் சும்மா சப்பைக்கட்டு! நூறு விழுக்காடு கணவன் விட்டுக் கொடுக்கிறான் என்பது தான் உண்மை என அனுபவப்பட்டவர்கள் சொல்லுகிறார்கள்!
அது உண்மை என்று தான் தோன்றுகிறது! காரணம் இப்போது கணவன் - மனைவி இருவருமே படித்தவர்களாக இருக்கிறார்கள். இருவருமே வேலை செய்பவர்களாக இருக்கிறார்கள். யாரையும் நம்பி யாரும் இல்லை! கணவனை நம்பித்தான் மனைவி வாழ வேண்டும் என்னும் நிலைமையில் மனைவி இல்லை! காலங்காலமாக அடுப்பூதும் பெண்களாகவே அடிமைப் பெண்களாகவே - அவர்களை நாம் வைத்திருந்தோம்! இப்போது எல்லாம் மாறிவிட்டது. இப்போது அவர்கள் தங்களது குரலை உயர்த்த ஆரம்பித்திருக்கிறார்கள்! அவர்கள் எடுக்கும் முடிவுகள் சரியாகவே இருக்கின்றன. ஒரு ஆணைவிட பெண் சரியான முடிவு எடுக்கிறாள் என்பது நடைமுறையில் சரியாகத்தான் இருக்கிறது!
சரி, என்னதான் முடிவு? விட்டுக் கொடுத்துத்தான் வாழவேண்டும்! இருவரும் கலந்தாலோசித்து முடிவுகளை எடுக்க வேண்டும்.
உங்கள் மனைவி பத்து விழுக்காடு விட்டுக் கொடுத்தால் நீங்கள் பேறு பெற்றவர்! அது போதுமே!
Labels:
கோடிஸ்வரர்கள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment