Friday 22 July 2016

ஐயா! நான் தான் ஆண்டவன்!



"வணக்கம்! நான் தான் ஆண்டவன்!" என்று சொல்லிக்கொண்டே நல்ல ஒரு பெரிய கும்பிடு போட்டுக்கொண்டே  கடையினுள் நுழைந்தார் ஒரு நண்பர். நல்ல ஒரு வசிகரமான முகம். குங்கமப் பொட்டு அவர் நெற்றிக்கு அழகாகத்தான்  இருந்தது. வயது எப்படியும் 50-க்கு மேல் இருக்கும். நல்ல களையானத் தோற்றம்.


முதலில் அவர் தன்னை "ஆண்டவன்" என்று அறிமுகப்படுத்திதிக் கொண்ட போதே நான் கொஞ்சம் அதிர்ந்து போனேன்! காரணம் யாரும் ஆண்டவன் என்னும் பெயர் வைத்திருப்பார்கள் என்று நான் யோசித்தது கூட இல்லை! முதலில் என்னால் அவருடன் பேச முடியவில்லை!  அந்தப் பெயரைப் பற்றித்தான் எனது சிந்தனை சிறகடித்துக் கொண்டிருந்தது! இப்படியெல்லாம் தமிழில் பெயர் வைக்கும் பழக்கம் உண்டா?  ஒரு முடிவுக்கு என்னால் வர  முடியவில்லை!


தீடீரென அந்த நண்பரே பேச ஆரம்பித்தார். "ஐயா! அவசரமாக ஒரு ஐந்து வெள்ளி வேண்டும். கொஞ்சம் உதவி செய்வீர்களா?"  பேச்சு பணிவாக இருந்தது. கனிவாகவும் இருந்தது. சிரித்த முகம் அப்படியே இருந்தது.


அவரை என்னால் எடை போட முடியவில்லை.யாசகம் செய்யும் மனிதராகத் தோன்றவில்லை!  ஏதோ ஒரு அவசரமாக இருக்கலாம் அல்லது ஏதோ தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கலாம்! என்னால் மறுக்க முடியவில்லை!

அதன் பின்னர் எனது நண்பர்களிடம் விசாரித்தேன். நமது சுற்றப்புறத்தில் "ஆண்டவன்" என்னும் பெயருடையவர்கள் யாராவது இருக்கிறார்களா என்று கொஞ்சம் தேடிப் பார்த்தேன். ஏதோ ஒர் உந்துதல்!. ஏதோ ஓர் ஆர்வம்! ஆண்டவன்  ஆயிற்றே! ஊகும் ....!  அப்படியும் அகப்படவில்லை! அது போன்ற பெயர் உடையவர் சுற்று வட்டாரத்தில் யாரும்  இல்லை!


இந்த நிகழ்ச்சி நடந்து நீண்ட நாட்களாகிவிட்டன. அதன் பின்னர் அந்த மனிதரை நான் பார்க்கவில்லை. அது போன்ற பெயரையும் நான் கேள்விப்படவில்லை. புதிதாக எந்த ஒர் ஆண்டவனையும் நான் பார்க்கவுமில்லை!


என்னுடைய கேள்வி எல்லாம் தமிழர்களிடையே "ஆண்டவன்" என்னும் பெயர் வைக்கும் பழக்கமுண்டா என்பது தான். நான் பல இடங்களில் பணிபுரிந்திருக்கிறேன். அப்படி ஒரு பெயரை நான் கேள்விபட்டதில்லை. "பிச்சைக்காரன்" என்னும் பெயரைக் கூட கேள்விப்பட்டிருக்கிறேன். அதற்கு ஒரு காரணம் சொல்லுவார்கள்: நாங்கள் பிச்சை எடுத்து பிறந்த பையன் அதனால் "பிச்சைக்காரன்" என்று பெயர் வைத்தோம் என்பார்கள்!


ஆனால் ஆண்டவன் என்னும் பெயர் வைக்க என்ன காரணமாக இருக்கும்? அதற்கும் காரணங்கள் இருக்கும். போகிற போக்கில் ஏதாவது ஒரு காரணம் அகப்படத்தான் செய்யும்.


அதுவரை, "வணக்கம்! ஐயா! நான் தான் ஆண்டவன்!"








No comments:

Post a Comment