வாழ்த்துகள் மகேன்!
தொடங்குவதற்கு முன் ஒரு வார்த்தை சொல்லிவிடுகிறேன். நான் BIG BOSS இரசிகன் அல்ல. முதல் பருவத்திலிருந்து மூன்றாவது பருவம் வரை நான் பார்க்கவில்லை. உண்மையைச் சொன்னால் அந்தத் தொடரை நான் வரவேற்காதவன். மக்களுக்குப் பயன்படாத எதனையும் நான் வரவேற்பதில்லை.
இம்முறை நம்ம ஊர் இளைஞர் ஒருவர் வெற்றி பெற்றிருக்கிறார் என்று அறியும் போது அந்த வெற்றியை நான் வரவேற்கிறேன்.
அதுவும் நம்மைப் போன்று சராசரி குடும்பங்களிலிருந்து ஒருவர் வெற்றி பெறுகிறார் என்றால் அது சாதாரண விஷயம் அல்ல. ஏதோ ஒரு வகையில், குறிப்பாக பொருளாதார ரீதியில், அவர் உயர கை கொடுக்கிறது. அதோடு சேர்ந்து புகழ், சினிமா பட வாய்ப்புக்கள், விளம்பர வாய்ப்புக்கள் என்று பல வரலாம். நல்லதே நடக்கட்டும் என வாழ்த்துவோம்!
மகேன் நல்ல பாடகர் என்று சொல்லப்படுகிறது. நான் கேட்டதிலை. அதனாலென்ன? இப்போதைய இளையர் பட்டாளம் உள்ளூர் பாடகர்களின் பாடல்களை விரும்பிக் கேட்பதை நான் அறிவேன். அது தான் தேவை. இப்போது இளைஞர்கள் யாருடைய பாடல்களை விரும்பிக் கேட்கிறார்களோ அந்தப் பாடகர்கள் தான் வெற்றி பெறுகிறார்கள். இசைத் துறையிலும் அவர் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.
ஆனால் அவர் எதிர்காலம் என்ன, எதனை நோக்கி அடி எடுத்து வைக்கப் போகிறார் என்பது நமக்குத் தெரியாவிட்டாலும் அவர் இந்நேரம் ஒரு முடிவுக்கு வந்திருப்பார். கவர்ச்சிகரமான சினிமாத் துறையாக இருக்கலாம். அங்குப் பணமும் கொட்டலாம், கொட்டாமலும் போகலாம், காணாமலும் போகலாம்!
மகேன் ஒரு நிதானமான இளைஞர். தடாலடியாக எதையும் செய்யமாட்டார் என நம்பலாம். தனக்கு ஏற்றது எதுவோ அதனையே அவர் தேர்ந்தெடுப்பார் என நம்பலாம்.
ஏழ்மை நிலையிலிருந்து தீடீரென ஓர் உயர்ந்த நிலைக்குப் போகும் போது கொஞ்சம் அதிகமாகவே நிதானம் தேவை. இது கூட இருந்தே குழி பறிக்கும் உலகம்! அனைத்தையும் வென்று அவர் வெற்றி பெற வேண்டும்.
எது எப்படி இருப்பினும் அவரது வருங்காலம் சிறப்பாக இருக்க வேண்டும் என வாழ்த்துகிறேன்!
மீண்டும், வாழ்த்துகிறேன் மகேன்!
No comments:
Post a Comment