Tuesday 10 May 2022

எதற்கு பணம் தேவை?


பணம் எதற்குத் தேவை? நமது வாழ்க்கையைச் செழிப்பாக மாற்றிக்கொள்ள நமக்குப் பணம் தேவை.

நமது வளர்ச்சி, நமது குடும்பத்தின் வளர்ச்சி, நமது பிள்ளைகளின் வளர்ச்சி அனைத்துக்கும் அடிப்படை பணம் தான். பணம் இல்லாமல் எதுவும் நகராது! இதை நாம் புரிந்து வைத்திருக்கிறோம். 

இவ்வளவு விஷயங்களைப் புரிந்து  வைத்திருக்கும் நமக்கு அந்தப் பணத்தை நமது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள மட்டும் அலட்சியமாக இருந்து விடுகிறோம்! 

குறிப்பாக எடுத்துக் கொண்டால் தமிழர்களாகிய நாம்  பணம் என்று வரும்போது மிகவும் பலவீனர்களாக மாறிவிடுகிறோம்! அதனை இறுக்கிப்பிடிப்பதில் அலட்சியம் காட்டி விடுகிறோம்.

பணம் இல்லாவிட்டால் என்ன ஆகும் என்பதைப் புரிந்து வைத்திருக்கிறோம். ஆனாலும் பணத்தை வைத்துக் கொண்டு எந்த அளவுக்கு அந்தப் பணத்தை வீணடிக்க முடியுமோ அந்த அளவுக்கு விணடிக்க நாம் தயாராக இருக்கிறோம்.

குழந்தைகளுக்குப் பிறந்த நாள் என்று சொல்லிக் கொண்டு நாம் ஆடாத ஆட்டமா! அப்படியென்றால் மற்ற இனத்தவர்கள் பிறந்தநாள் கொண்டாடுவது இல்லையா? நாம் அளவை மிஞ்சி விடுகிறோம். பிறந்தநாள் நமது நெருங்கிய உறவுகளோடு கொண்டாடினாலே போதுமானது. நாம் என்ன செய்கிறோம்? ஒரு திருமணத்தைற்கு ஆகும் செலவை நாம் செலவு செய்கிறோம்.

இது போன்ற குடும்பங்கள் தான் கோரோனா தொற்றின் போது பிரச்சனைகளுக்கு உள்ளான குடும்பங்கள். வேலை இல்லை. அதனால் கையில் காசு இல்லை.  இவர்கள் தான்  மற்றவர்களின் உதவியை எதிர்பார்த்த குடும்பங்கள். அரசாங்கத்தின் உதவியை நாடிய குடும்பங்கள். ஆனால் உதவியவர் யார்?  பெரும்பாலும் தமிழர் அமைப்புக்கள் தான். அவர்கள் தமிழர்களுக்கு மட்டும் அல்ல அனைத்து இனங்களுக்கும் உதவினார்கள். அது தான் நமது மாண்பு.

ஆனால் ஒன்று. நாம் பிறரை எதிர்பார்த்து வாழ்கின்ற  மக்களாக என்றுமே  வாழக் கூடாது. பிறர் கையை எதிர்பார்க்கும் நிலைமை நமக்கு வரக்கூடாது. நமது கைகள் தான்  மற்றவர்களுக்குக் கொடுத்து  உதவ வேண்டுமே தவிர, நமது கைகள் பிறரிடம் கையேந்தக்  கூடாது.

எதற்குப் பணம் தேவை? ஒவ்வொரு நகர்தலுக்கும்  பணம் தேவை. பணமின்றி எதுவும் அசையாது! பணத்தோடு வாழ்வோம். பண்போடு வாழ்வோம்!

No comments:

Post a Comment