Thursday 19 May 2022

சிறு வியாபாரங்களை ஊக்குவிப்போம்!

இன்றைய குடும்பத் தலைவிகளில் பலர் சிறு சிறு வியாபாரங்களில் ஈடுபட்டிருப்பதைப் பார்க்கும் போது நமக்கும் மகிழ்ச்சியாக இருக்கிறது!

கணவர்கள் நிறுவனங்களில் வேலை செய்வதும் மனைவியர் சொந்தமாக வியாபாரங்கள் செய்வதும் நல்லதொரு வளர்ச்சியாகவே  நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஆமாம், இதில் நமது கடமை என்ன?  நாம் எப்போதும் அவர்களுக்கு நல்ல வாடிக்கையாளர்களாக இருக்க வேண்டும்.

சீனர்களிடம் ஒரு பழக்கம் உண்டு.  அது பத்துக் காசாக இருந்தாலும் அவர்களது பணம் சீன வியாபாரிகளுக்குத் தான் போக வேண்டும். அதாவது அவர்கள் சொல்ல வருவது பத்துக் காசாக இருந்தாலும் சரி பத்துக் கோடி சொத்தாக இருந்தாலும்  சரி அவர்களுடைய சொத்துக்களை அவர்களது இனத்தினர் வாங்குவதற்குத் தான்  முன்னுரிமை கொடுப்பார்கள். அதனால் தான் அவர்களுடைய சொத்துரிமை குறைய வாய்ப்பில்லாமல் போகிறது.

நாம் இதனைச் செய்ய முடியாதா?  எல்லா விடயங்களிலும் இதனை நாம் செய்யலாம். ஒரு செய்தித்தாள் வாங்குவது  கூட   நம் வியாபாரிகளாக இருக்கட்டும்.. நம் சகோதரிகள் பலர் பல வகையான உணவு பொருள்களை தயாரித்து விற்பனை செய்கின்றனர். அவர்களிடம் நாம் வாங்கி ஆதரவு கொடுப்போம்.. மளிகை சாமான்கள் கூட நமது இந்தியர்களின் கடைகளாகவே  இருக்கட்டும். இப்படி செய்வதன் மூலம் நமது பணம் நம் இனத்தவரிடையே சுழன்றுக் கொண்டிருக்கும். அது நமது வளர்ச்சிக்கு நல்லது.

இப்படியெல்லாம்  ஆதரவு கொடுத்தால் தான் நமது வியாபாரிகள் பயன் அடைவார்கள். சிறு வியாபாரமாக இருந்தாலும் அவர்கள் வளர்ச்சி காண முடியும்.  அப்படி வளர்ச்சி அடையும் போது அவர்களது சிறிய வியாபாரம்  பெரிய வியாபாரமாக  மாறும்.  இப்படித்தான் நாம்  நம்மிடையே ஒருவருக்கொருவர் உதவுபவர்களாக  இருக்க வேண்டும். அதுவே நமது வளர்ச்சிக்கு உதவும்.

எல்லாக் காலங்களிலும் நம்மிடையே  போட்டி, பொறாமை என்று போய்க் கொண்டிருந்தால் நமது சமுதாயம் முன்னேற்றம் காண வழியில்லாமல் போய்விடும். மற்ற இனத்தவரை எப்படி நாம் ஆதரிக்கின்றோமோ அதே போல நம் இனத்தவருக்கும் நாம் ஆதரவு கரம் நீட்ட வேண்டும்.

ஒருவர் முன்னேறினால் அவரைப் பாராட்டுங்கள். பொறாமைப்படாதீர்கள். சீனர்கள் முன்னேறினால் நாம் பொறாமைப்பட வில்லையே!  நமக்குள் மட்டும் ஏன் போட்டி பொறாமை?

சிறு வியாபாரிகளைப் பார்த்தீர்களானால் அவர்களுக்கு ஆதரவு கொடுங்கள். அவர்களை ஊக்கப்படுத்துங்கள். நமது சமுதாயத்தின் வருங்கால பெருமைக்குரியவர்கள் அவர்கள் என்பதாக நினைத்து செயல்படுங்கள்.

No comments:

Post a Comment