Friday 20 May 2022

வாய்ப்புக்கள் எப்போதும் உண்டு!

 

          சிறு வியாபாரங்களுக்கு எப்போதும் ஒரு சந்தை உண்டு.

அதுவும் தமிழர்களிடையே பிரபலமாக உள்ள வடை,  தோசை, இட்டிலி என்று எதை எடுத்துக் கொண்டாலும் மலேசியர்களிடையே நல்ல வரவேற்பும் உண்டு.

இது போன்ற சிறு வியாபாரங்களில் நமது பெண்கள் கவனத்தைச் செலுத்த வேண்டும்.  இப்போது ஒரு சிலர்  தங்கள் வீடுகள் அருகிலேயே  சிறு கடைகள்  போட்டு இது போன்ற வியாபாரங்களைச் செய்கின்றனர். ஒரு சிலர் இரவு சந்தைகளிலும் விற்பனை செய்கின்றனர்.

பொதுவாக எடுத்துக் கொண்டால் இந்த சிறு வியாபாரங்கள்  தான்  நமது பெண்கள்  வியாபாரத்தில் எடுத்து வைக்கும்  முதல் காலடி!  இப்படிச் செய்வதன் மூலம் அடுத்தக் கட்டத்துக்கும் அவர்கள் தங்களைத் தயார்படுத்திக் கொள்கின்றனர்.  வியாபாரம் என்று வரும் போது அவர்களுக்கு ஓர் அசாதாரண துணிச்சல் வந்துவிடுகிறது! இயல்பாகவே ஆண்களைவிட பெண்களே வியாபாரத்தில் அதிக ஈடுபாடு காட்டுகின்றனர் என்பதைத் துணிவாகச் சொல்லலாம்!

இவைகள் எல்லாம் நம்மிடையே உள்ள நல்ல அம்சங்கள். வருங்காலங்களில் வியாபாரத்துறையில் பெண்களே ஆதிக்கம் செலுத்துவார்கள் என நம்பலாம். ஆண்கள் தங்களது மனைவியர்களுக்கு போதுமான  ஆதரவு கரம் நீட்டினாலே போதும். தேவை என்றால் இருவரும் சேர்ந்தே வியாபாரங்களில் ஈடுபடலாம். 

வியாபாரம் என்னும் போது "இப்ப செய்யலாம்! அப்ப செய்யலாம்!" என்று இழுத்தடித்துக் கொண்டு போகாதீர்கள்.   இப்படி இழுத்துக் கொண்டே போகும் போது பின்னர் அதுவே ஆர்வத்தைக் குறைத்துவிடும். நம்மைச் சுற்றிருப்பவர்கள் எதையாவது சொல்லி நமது ஆர்வத்தைக் குழி தோண்டி புதைத்து விடுவார்கள். இது நமது மக்களிடமிருந்து காலங்காலமாக நமக்குக் கிடைக்கும் இலவச புத்திமதி!

நாம் சில பழக்க வழக்கங்களுக்கு அடிமையாகி விட்டோம். எதுவுமே முடியாது என்கிற மனநிலை தான் நம்மை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது. அதிலிருந்து விடுபட வேண்டும். 

இப்படி சிறு சிறு வியாபாரங்களில் நாம் ஈடுபடும் போது "முடியாது!" என்கிற மனநிலையிலிருந்து நம்மை விடுவித்துக் கொள்ளக்கூடிய மனநிலைக்கு மாறுவோம். நமக்கு இருக்கின்ற பதற்றங்களிலிருந்து  நாம் விடுபடுவோம். இப்போது நமக்கு இருப்பதெல்லாம் "பயம்!பயம்!பயம்!" அது மட்டும் தான். அது நம்மை தலைநிமிராமல் செய்து விடுகிறது!

சிறு வியாபாரமோ, குறும் வியாபாரமோ அல்லது  பெரும் வியாபாரமோ எல்லா வியாபாரங்களுக்கும் எல்லா காலத்திலும் இடமுண்டு. இப்போது நம் தமிழினத்தைற்கு முதல் தேவை: சிறு வியாபாரங்கள். இங்கிருந்துதான் நாம் அடுத்துக் கட்டத்திற்கு நாம் நகர வேண்டும்.

வாய்ப்புக்கள் எப்போதும் உண்டு! இப்போதும் உண்டு! பயன்படுத்திக் கொள்வது நமது கடமை!

No comments:

Post a Comment