Wednesday 4 May 2022

மிகவும் துயரமான சம்பவம்!

 

சமீபத்தில் பினாங்கு மருத்துவமனையின் மருத்துவ  பயிற்சியாளர் ஒருவர் தான் குடியிருந்த கட்டடத்தின் 23-வது மாடியிலிருந்து விழுந்து மரணம் அடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியளிக்கிறது.

இதற்கு முன்னரும்,  இந்த இரண்டு ஆண்டுகளுக்குள், இதே போல ஒரு மருத்துவ பயிற்சியாளர் மாடியிலிருந்து விழுந்து இறந்த  சம்பவமும் நிகழ்ந்திருக்கிறது.

இருவருமே சுமார் 25, 26 வயதுக்கு உட்பட்டவர்கள் தான். மருத்துவமனையில் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் என்ன, இந்த தற்கொலை சம்பவங்கள் ஏன் நடக்கின்றன  போன்ற  விபரங்களை போலீஸார் ஆராய்ந்து வருகின்றனர். மருத்துவமனையும் பிரச்சனைகளை ஆராய்ந்து வருகிறது.

நமக்குள்ள ஆதங்கள் எல்லாம் இந்த இளம் வயதில்  இப்படி இவர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்களே என்று மனதிற்குள் ஏற்படுகின்ற வருத்தம் தான். ஆனால் அவர்கள் பிரச்சனைகள் என்ன என்பதே நமக்குத் தெரியவில்லை. நம்மால் ஒரு முடிவுக்கும் வரமுடியவில்லை.

படித்த இளைஞர்கள் இப்படி கோழைத்தனமாக நடந்து கொள்வதை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தற்கொலை கோழைத்தனம் தான். மருத்துவமனையில் ஏகப்பட்ட நெருக்குதல்கள் இருக்கலாம். அதற்கெல்லாம் தற்கொலை தான் தீர்வா? படிக்காதவன் தான் அடங்கிப் போகிறான். படித்தவனுக்கு என்ன? வேறு மாற்றுத்தீர்வை நோக்கித்தான் பயணிக்க வேண்டுமே தவிர தற்கொலை தீர்வாகாது.

ஒரு மருத்துவரை உருவாக்க அவனது குடும்பம் எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கிறது, எவ்வளவு கடனில்  மாட்டியிருக்கிறது, எவ்வளவு பணத்தை இழந்திருக்கிறது என்பது சாதாரண விஷயமல்ல. அது பலருடைய உழைப்பு. குடும்பமே உழைத்திருக்கிறது.  அந்த குடும்பத்தின் எத்தனையோ ஆண்டுகால உழைப்பு. ஆனால் அத்தனையும் விழலுக்கு இறைத்த நீராகிப்போனது.  இழப்பு என்பது குடும்பத்திற்கு மட்டும் அல்ல. அது சமுதாயத்துக்கும் தான்.

 மருத்துவம்  தாங்கள் விரும்பாத தொழிலாக இருக்கலாம். பெற்றோரின் வற்புறுத்தலால் அவர்கள் அந்தத் தொழிலை தேர்ந்தெடுத்திருக்கலாம். விரும்பாத அந்தத் தொழிலில் நெருக்கடிகள் வரும் போது, என்ன செய்வது என்று புரியாமல், இது போன்று தற்கொலை முயற்சிகளில் ஈடுபட கூட வாய்ப்புண்டு.

எதையும் சொல்வதற்கில்லை. இது மிகவும் துயரமான செய்தி என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடில்லை. ஆழ்ந்த அனுதாபங்கள் என்பதைத்தான் சொல்ல முடியும்.

No comments:

Post a Comment