Saturday 28 May 2022

சிந்தனை மாற்றம் தேவை!

 


பொதுவாக நாம் அனைவருமே ஒரே மாதிரியான சூழலில் வளர்ந்தவர்கள்.

அதனால் தான் நம்மால் எந்த புதிய சூழலுக்கும், புதிய மாற்றங்களுக்கும் தயார் நிலையில் இருக்க முடிவதில்லை. நமது முன்னோர் போட்ட பாதையில் நடப்பதே நமக்கு நல்லது என்று நாமும் அதே பாதையில் கடுகு அளவு பிசகாமல் நடந்து கொண்டிருக்கிறோம்.

புதிய முயற்சிகளை நம்மால் எதனையும்  ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. சுருக்கமாகச் சொன்னால்:  "படித்தவனாக இருந்தால் உத்தியோகம் பார். படிக்காதவனாக இருந்தால் ஏதோ ஒரு வேலையைச் செய்து பிழைத்துக் கொள்!"  இப்படித்தான் பெரும்பாலான நமது பெற்றொர்களின் அறிவுரை.

இதுவே நமது நாட்டின் சீனப் பெற்றோர்களின் அறிவுரை வேறு மாதிரியாக இருக்கும். "நல்லப்படிப்பை படி!  பெரிய வேலைக்குப் போ! உன்னால் படிக்க முடியவில்லை என்றால் ஏதாவது வியாபாரம் செய்து பிழைத்துக் கொள்!"

நமது பெற்றோர்கள் யாராவது  வியாபாரம் செய்து பிழைத்துக் கொள் என்கிற வார்த்தையையே உச்சரிப்பார்களா? அது மட்டும் அவர்களால் முடியாது! என்ன காரணமாக இருக்கும்?  அது பாவப்பட்ட ஒரு சொல்லாக அவர்கள் பார்க்கிறார்கள்! "நமக்கு வியாபாரம் வராது!  அதற்குச் சரியானவர்கள் சீனர்கள் தான்! ஏமாற்றுவது அவர்களுக்குக் கை வந்த கலை! நம்மால் அதெல்லாம் முடியாது!" இப்படித்தான் அவர்களது எண்ண ஓட்டங்கள் அமைந்திருக்கின்றன!

வியாபாராம் செய்யாதவன் நம்மை ஏமாற்றாமலா இருக்கிறான்? நம்மூர் அரசியல்வாதியே பொதுமே! கொஞ்சம் நஞ்சமா  நம்மை ஏமாற்றினார்கள்! ஆக, எமாற்றுவது, ஏமாறுவது  என்பதெல்லாம் மனித வாழ்க்கையில் என்றும் நடப்பது தான். ஏமாற்றிப் பிழைப்பவர்கள் சீனர்கள் என்றால்  ஏமாற்றாமல் அந்த வியாபாராத்தை நம் இனத்தவர் செய்யலாமே! யார் வேண்டாம் என்கிறார்கள்?  நாம் பொத்தாம் பொதுவாக சீனர்கள் ஏமாற்றுக்காரர்கள் என்று முத்திரை  குத்துவது  சரியல்ல! எல்லா இனத்தவரிலும் ஏமாற்றுபவர்கள் உண்டு.

வியாபாரம் செய்வதன் நோக்கம் என்பது மற்றவரை ஏமாற்றிப் பணம் கொள்ளையடிப்பது அல்ல. நேர்மையான வியாபாரம் செய்து பணம் சம்பாதிப்பது தான்.  நமது பெற்றோர்கள் அல்லது பெரியவர்கள் பிள்ளைகள் வியாபாரம் செய்வதை ஊக்குவிக்க வேண்டும்.  பெரிய அளவில் பணம் போடாமல் சிறிய முதலீட்டில் வியாபாரம் செய்ய ஊக்குவிக்க வேண்டும். அதுவும் வேண்டாம் என்று நினைத்தால் பிள்ளைகள் வேலை செய்து தங்கள் சொந்தபணத்தில் வியாபாராம் செய்ய ஆதரவு கொடுக்க வேண்டும்.

இப்போது உள்ள இளைஞர்கள் துடிப்பு மிக்கவராய் இருக்கிறார்கள். அவர்கள் வியாபாரம் செய்கிறேன் என்றால் விட்டுவிடுங்கள். அவர்கள் செய்யட்டும். தடுக்க வேண்டாம்! முட்டுக்கட்டைப் போட வேண்டாம்!

நமது சமுதாயம் முன்னேற ஒரே ஒரு வழி தான். எல்லாக் குடும்பங்களிலும் ஒருவராவது வியாபாராத்தில் ஈடுபடுவதை கட்டாயமாகக் கொள்ள வேண்டும். இப்போது உள்ள இளைஞர்கள் படித்தவர்கள், அறிவுள்ளவர்கள், ஆற்றல் உள்ளவர்கள் - அவர்களை நம்ப வேண்டும். வெற்றி பெற ஊக்குவிக்க வேண்டும்.

அதற்கு நமது பெரியவர்களுக்குச் சிந்தனை மாற்றம் தேவை! நமது இளைஞர்களுக்கும் தேவை!

No comments:

Post a Comment