Saturday 21 May 2022

இதுவே சரியான தருணம்!


வியாபாரம் செய்வதற்கு என்று ஏற்ற தருணத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றீர்களா? 

அதனாலென்ன?  நாம் செய்வது சிறு வியாபாரமாக இருந்தாலும் அது காலங்காலமாக நிலைத்து நிற்க வேண்டுமென்று தான் நாம் ஆசைப்படுகிறோம்.  அப்படியே சிறு வியாபாரமாக ஆரம்பித்து அதனைப் பெரிய அளவில் கொண்டு செல்வது தான் நமது நோக்கம். அப்படித்தான் எல்லா வியாபாரங்களும் சிறிதாக ஆரம்பித்து பெரிதாக வளர்ந்திருக்கின்றன.

நல்ல தருணம் என்பதைவிட வியாபாரத்தை ஆரம்பிக்கும் முன்  இஷ்ட தெய்வத்தை வணங்கிவிட்டு வியாபாரத்தை ஆரம்பியுங்கள். தெய்வத்தை விட சக்தி வாயந்தது உலகத்தில் வேறு எந்த சக்தியும் இல்லை. அதனால் "தெய்வம் உதவும்" என்கிற நம்பிக்கையோடு உங்கள் கடமைகளைச் செய்ய ஆரம்பியுங்கள்.

சிறு  வியாபாரங்கள் நம்மை எட்டா உயரத்திற்குக் கொண்டு செல்லும். அதில் சந்தேகம் வேண்டாம். தோட்டப்புறங்களில் வேலை செய்தவர்களில் ஒரு சிலரை நான் பார்த்திருக்கிறேன். தோட்டத்தில் வேலை செய்வார்கள். வீட்டில் மளிகைச் சாமான்களை வைத்துக்கொண்டு வியாபாரம் செய்வார்கள். இவர்களால் எப்படி முடிந்தது?  பணம் பண்ண வேண்டும் என்கிற ஆர்வம் தான். இன்னும் சிலர் ஓமப்பொடி போன்ற பலகார வகையறாக்களை வீட்டிலேயே செய்து வியாபாரம் செய்து கொண்டிருப்பார்கள். காலையில் வேலைக்குப் போவதும் மாலையில் இது போன்ற வியாபாரங்களில் ஈடுபட்டிருப்பார்கள். பணத்திற்காகத்தானே உழைக்கிறோம்? அதில் ஏன் கஞ்சத்தனம்! இன்னும் கொஞ்சம் அதிகமாகவே உழைத்துக் குடும்பத்தைக் கரை  சேர்ப்போமே என்கிற அக்கறை தான்.

என் இளம் வயதில் எங்கள் பக்கத்து வீட்டுப் பாட்டி தினசரி காலையில் தேங்காப்பால் அப்பம் சுட்டு விற்பார்கள். நல்ல வியாபாரம் ஆகும். இதெல்லாம் எப்படி நடந்தது? இன்னொரு பக்கம் இடியாப்பம்,  தோசை என்று ஒரு பாட்டி வியாபாரம் செய்தார். வீட்டிலிருந்த வேலை செய்யாத பாட்டிகள் இப்படியெல்லாம் உழைத்து தங்களது குடும்பத்தின் பொருளாதாரத்தை உயர்த்திக் கொண்டார்கள்.


இதெல்லாம் நடந்தது சுமார் எழுபது ஆண்டுகளுக்கு முன்னர்.  அந்தக் காலத்தில் அந்த பாட்டிகளுக்கு இருந்த பொருளாதார விழிப்புணர்வு இப்போது ஏன் நமக்கில்லை? ஆண்களுக்கும் இல்லை! பெண்களுக்கும் இல்லை! சாப்பாடு கிடைத்தால் போதும், வயிறு நிறைந்தால் போதும் என்கிற ஒரு மனநிறைவுக்கு  வந்து விட்டோமோ?  இன்று ஒவ்வொரு நிகழ்வுக்கும் மற்றவர்களை எதிர்பார்க்கிறோம். குடும்பத்தில் ஒருவர் இறந்துவிட்டார் பணமில்லை! மகள் நன்றாகப் படிக்கிறாள் மேலே படிக்க பணவசதியில்லை! சரி வேலைக்கு அனுப்பு! - இப்படி ஒவ்வொன்றுக்கும் யாரோ ஒருவர், சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர் வந்து தான் நமது குறைகளைத் தீர்த்து வைக்க வேண்டியிருக்கிறது!

தோட்டங்களில் வாழ்ந்த போது இருந்த அந்த அடிமை மனோபாவம் நம் இரத்தத்தில் ஊறிவிட்டது போலும்!  அதனை நாம் தொடரவே விரும்புகிறோம்! உலகம் எவ்வளவோ மாறிவிட்டது! நமது அடிமை மனோபாவம்  இன்னும் மாறவில்லை!

அதற்குத்தான் நாம் இங்கு வலியுறுத்துவது உங்களது பொருளாதாரத்தை உயர்த்துங்கள். அது உங்கள் அடிமைத்தனத்தை மாற்றிவிடும். மற்றவர்களோடு சமமாக வாழ வைக்கும். பணம் தலைநிமிர வைக்கும். கூனிக்குறுகி வாழ உங்களை யாரும் வற்புறுத்தவில்லை.

வியாபாரம் செய்ய எல்லாமே ஏற்ற தருணம் தான். இதுவும் சரியான தருணம் தான். இன்றே செய்வோம்! நன்றே செய்வோம்!

No comments:

Post a Comment