Monday 9 May 2022

எவ்வளவு சேமிக்கலாம்?


 பொதுவாக எவ்வளவு சேமிக்கலாம் என்று கேட்கும் போது ஒவ்வொருவரும் வேவ்வேறு விதமான பதிலைக் கொடுப்பார்கள். எந்த வரையரையும் இல்லை!

ஆனால் சேமிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு இது போன்ற கேள்விகளுக்கு  இடமில்லை.. அது இயல்பாகவே அவர்களிடம் உள்ளது. இரத்தத்தில் கலந்துவிட்ட ஒன்று.

சேமிப்பு பழக்கம் இல்லாதவர்களுக்கு ஒரு வழிகாட்டல் தேவைப்படுகிறது. மாதசம்பளம் வாங்குபவர்கள் எவ்வளவு  சேமிக்க வேண்டும், மாதசம்பளம் வாங்காதவர்கள் எவ்வளவு சேமிக்க வேண்டும், தொழிலில் உள்ளவர்கள் எவ்வளவு சேமிக்க வேண்டும் - அனைவருக்குமே வழிகாட்டல் தேவைப்படுகிறது.

தங்களால் முடிந்தவரை சேமிக்கலாம் என்பது நல்ல விஷயம் தான். ஆனால் ஒரு விஷயத்தை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். நிறைய சேமிப்பதும் அதன் பிறகு சேமித்ததை எடுத்துச் செலவு செய்வதும்  நாம் ஆதரிக்கவில்லை.

ஒரு புத்தகத்தில் படித்தது. படித்ததில் பிடித்தது. அந்த இளைஞர் தனது வருமானத்திலிருந்து பத்து விழுக்காடு சேமிக்கும் பழக்கம் உள்ளவர். சேமிப்பு என்றால் அது சேமிப்பு. அந்தச் சேமிப்பிலிருந்து பணத்தை எடுக்கக் கூடாது என்பதில் அவர் கண்டிப்பாக இருந்தார்.  இடை இடையே பண நெருக்கடிகள் வரும். ஆனால் அந்த சேமிப்பில் அவர் கை வைப்பதில்லை. தான் திருமணம் செய்து கொள்ளும் போது பண நெருக்கடியில் இருந்தார். இல்லை! அவர் சேமிப்பில் கை வைக்கவில்லை! கடன் வாங்கித் தான் பண நெருக்கடிகளைச் சந்தித்தார்! 

அப்படியென்றால் எதற்குச் சேமிக்க வேண்டும் என்கிற கேள்வி நமக்கு இயல்பாகவே எழும். அவரிடம் பெரிய திட்டம் இருந்தது.  சேமிப்பில் கணிசமான தொகை சேர்ந்ததும் அந்தப் பணத்தைக் கொண்டு நிறுவனங்களில் முதலீடு செய்ய வேண்டும் என்கிற நோக்கம் இருந்தது. அதைத்தான் அவர் செய்தார். பின் நாட்களில் அவர் மிகப்பெரிய பணக்காரராக வாழ்க்கையை மாற்றி அமைத்துக் கொண்டார்.

பத்து விழுக்காடு சேமிப்பு அவரை எந்த அளவுக்கு உயர்த்தியது என்பதை நாம் புரிந்து கொண்டால் போதும். 

எந்த அளவுக்குச் சேமிக்கலாம் என்கிற கேள்வி எழும்போது இருபது விழுக்காடு என்பது சரியாக இருக்கும் என்பதே நிதி ஆலோசகர்கள் நமக்குக் கொடுக்கும் செய்தி. இதனையே  மறை நூலான விவிலியம் உறுதிப்படுத்துகிறது.

இருபது விழுக்காடு என்பதையே வழிகாட்டியாக எடுத்துக் கொள்வோம். ஆனால் ஒன்று. சேமிப்பு என்பது எடுத்து எடுத்து செலவு செய்வதற்கு அல்ல! ஒரு சொத்து வாங்குவதற்கோ, வீடு வாங்குவதற்கோ பயன்படுத்திக் கொள்வோம்.  வங்கிகள் தேவை இல்லை. நமது சேமிப்பையே நமது வங்கிகளாக மாற்றி அமைத்துக் கொள்வோம்.

No comments:

Post a Comment