Tuesday 24 May 2022

எப்படியோ! இதுவும் கடந்து போகும்!


 விலைவாசி ஏற்றம் இன்று பலரையும் பிழிந்து எடுத்துக் கொண்டிருக்கிறது. அது இன்றைய நிலைமை.  ஆனால் வரும் மாதங்களில் அது இன்னும் கடுமையாக இருக்கும் என செய்திகள் வர ஆரம்பித்துவிட்டன.

அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றால் மக்களிடையே அது பிரச்சனைகளை உருவாக்கும். வியாபாரிகள் பொருள்களின் விலையை ஏற்றுவார்கள். அவர்கள் கூறுகின்ற காரணம் நிறுவனங்கள் விலையை ஏற்றிவிட்டன என்பது அவர்களது பக்கத்து நியாயத்தைச்  சொல்வார்கள். பொருள்கள் கிடைக்கவில்லை - குறைவான அளவே  பொருள்கள் கிடைப்பதால் - விற்பனைக்குப் பொருள் இல்லை.

ஆனால் இதையெல்லாம் விட நம்மை கொந்தளிக்க வைக்கும் காரணம் ஒன்று உண்டு. ஆமாம், அது தான் பதுக்கல். வியாபாரிகள் பொருள்களைப் பதுக்கி வைப்பார்கள்.  விலையேற்றத்தின் போது பொருள்களை ஒவ்வொன்றாக  அதிக விலையோடு வெளியாக்குவார்கள்!  நிறுவனங்கள் தங்களது  உற்பத்திகளைக் குறைப்பார்கள். விலையேறும் போது அவர்கள் தங்களது உற்பத்தியை அதிகப்படுத்துவார்கள். வியாபாரிகள் காலங்காலமாக கடைப்பிடிக்கின்ற யுக்தி இது!

அதனால் தான் நாம் சொல்ல வருவதெல்லாம் அரசாங்கம் இப்போதே கடுமையான நடவடிக்கைகளில் இறங்கவில்லை என்றால் பாதிக்கப்படப் போவது பொதுமக்கள் தான். பொதுவாகப் பார்த்தால் இந்த நடப்பு அரசாங்கம் பிரச்சனைகள் வந்த பின்னர் தான் செயலில் இறங்குகிறது! அதற்கு முன்னரே எந்த ஒரு விஷயத்திலும் முனைப்புக் காட்டுவதில்லை! ஏதோ நொண்டி அடித்துக் கொண்டு அரசாங்கத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்று தான் தோன்றுகிறது! ஆனால் மக்கள் பணத்தைக் கொள்ளையடிப்பதில் மட்டும் தடகள வீரர் உசேன் போல்ட் கூட தோற்றுப் போவார்! அத்துணை வேகம்!

இந்த நிலையில் நமது மக்கள் நிலை என்ன?  வரப்போகும் மாதங்களில் எப்படி பிரச்சனைகளைச் சமாளிப்பார்கள் என்கிற ஆதங்கம் நமக்குண்டு. எப்போதும் வேலை செய்து பிழைக்கும் சமுதாயம் நாம்.   குறைவான கூலி பெறும் சமுதாயம். குடிகார சமுதாயம். பொறுப்பற்ற கணவர்கள். கேட்பாரற்ற இளைஞர்கள்.இப்படியெல்லாம் முத்திரைக் குத்தப்பட்டவர்கள் நாம்.

ஆனாலும் கொஞ்சம் நம்பிக்கை இருக்கிறது.  கோவிட்-19 தொற்றின் தாக்கத்திலிருந்து இப்போது மெல்ல மெல்ல விடுபட்டுக் கொண்டிருக்கிறோம். வேலையில்லா பிரச்சனையிலிருந்து  விடுபட்டுக் கொண்டிருக்கிறோம். தொற்றின் போது ஏற்பட்ட வலிகளின் மூலம் பாடம் கற்றிருப்போம் என்கிற நம்பிக்கை எனக்குண்டு.

இனி என்ன தான் பிரச்சனைகள் வந்தாலும் சமாளிக்கக் கூடிய திறன் நமக்குண்டு. இதுவும் கடந்து போகும் என்கிற மனநிலை உள்ளவர்களுக்கு எதனையும் கடந்து போக முடியும்!

No comments:

Post a Comment