Wednesday 11 May 2022

உங்கள் பணமாகவே இருக்கட்டும்!

 


நீங்கள் எதனைச் செய்தாலும்  நீங்கள் சம்பாதித்த பணத்திலிருந்து அதனைச் செய்யுங்கள். உங்கள் பணம் தான் உங்களுக்குத் திருப்தியைத் தரும்

அப்பா அம்மா பணத்தை எதிர்பார்க்காதீர்கள். அவர்கள் பணத்தில் கை வைக்காதீர்கள். நீங்கள் சம்பாதித்த பணம் உங்களுடையது. அதனை காப்பாற்றிக் கொள்ளுங்கள். தான தர்மம் செய்யச்சொல்லி யாரும் உங்களை வற்புறுத்தவில்லை!

அம்மாவின் பணம் ஊழியர் சேமநிதியில் இருக்கிறது. "இந்தா கிழவி! பணம் வந்ததும் நான் மோட்டர் சைக்கள் வாங்கனும்! வேற வாயத் திறக்காத!" மகன் சொல்லுகிறான். அவன் தான் சாப்பாடு போடுகிறான். மருமகள் கிட்ட ஏன் வம்பு? அம்மாவின் பணத்திற்கு ஆப்பு!

தோட்டப் பாட்டாளி அப்பா நன்றாகத்தான் படிக்க வைத்தார். அதில் ஒருவர் ஆசிரியர். அவரது மனைவியும் ஆசிரியர். அவர்களுக்கு வீடும் வாங்கிக் கொடுத்தார். ஒரு நாள் மகன் அப்பாவின் பணத்தில் கைவைத்தார். அப்பா நொந்து போனார்.  "நான் எல்லாமே இவனுக்குச் செய்தேன். இப்படி ஏமாற்றி விட்டானே!" அதன் பிறகு அப்பா எழவேயில்லை. இது படித்தவன் அப்பாவுக்கு வைத்த ஆப்பு!

ஒரு தாய் தனது மகனுக்கு ஊரில் கல்யாணம் செய்து வைத்தார். எல்லாம் சொந்தம் தான். தாயிடமிருந்த பணம் காலியாகிவிட்டது. மகன் காலியாக்கி விட்டான்.  ஊரிலிருந்த வந்த மருமகளுக்கு மாமியார் சொந்தமாகத் தெரியவில்லை. சோத்துக்குப் பாரம் என்று நினைத்தாள்! மாமியாரை வீதி வீதியாக பிச்சை எடுக்க அனுப்பிவிட்டாள்! மாமியாருக்கு மருமகள் வைத்த ஆப்பு!

நீங்கள் எதைச் செய்தாலும் அது உங்கள் பணமாக இருக்கட்டும். உங்கள் பணம் உங்களுக்குப் பொறுப்புணர்ச்சியைக் கொடுக்கும். "என் பணம்! நான் சம்பாதித்த பணம்!" அது பெருமையைத் தரும்.  யாரையும் ஏமாற்ற வேண்டும் என்கிற எண்ணம் எழாது.  மேலே எல்லா சம்பவங்களிலும் பாருங்கள் ஒரு மருமகள் ஒளிந்து கொண்டிருக்கிறாள்! அதே போல ஒரு சாபமும் ஒளிந்து கொண்டிருக்கிறது!

நாம் சம்பாதிக்கும் பணத்தில் தான் நமது காரியங்கள் ஆக வேண்டும். நமது முன்னேற்றம், நமது குழந்தைகளின் படிப்பு, நாம் வாங்கும் வீடு, நாம் வாங்கும் கார் - அனைத்தும் நமது பணமாகவே இருக்கட்டும்.  அப்பா அம்மா பணத்தில் குளிர் காய நினைத்தால் பிற்காலத்தில் அது வேதனையையும் கொடுக்கலாம்.

அப்பா அம்மா பணத்திற்கு மரியாதை கொடுங்கள். அவர்களின் பணத்தைக் கொண்டு அவர்கள்  விரும்புவதை செய்யட்டும். இளைய சமுதாயம் தங்களது சொந்தக்காலில் நிற்பது தான் அவர்களுக்குப் பெருமை. அப்பா அம்மா பணத்தைக் கொள்ளையடிப்பது, பறிப்பது பிற்காலத்தில் பிள்ளைகளுக்குக் கேவலத்தை உண்டாக்கும்.

உங்கள் பணம் தான் உங்களுக்குச் சாதனைகளைக் கொண்டு வரும்!

No comments:

Post a Comment