Thursday 12 May 2022

குடிகாரர்களும் திருந்துவார்கள்!

 


குடிகாரர்களைத் திருத்தவே முடியாதா? அப்படியும் சில ஜென்மங்கள் உண்டு என்பதை மறுப்பதற்கில்லை.

பலர் திருந்தக் கூடியவர்கள் தான். ஆனால்  கவலை எல்லாம் நமது இளைஞர் சமுதாயம் இப்படி அழிவை நோக்கிப் போகிறதே என்பது தான்.

ஒரு குடிகார நண்பனிடன் பேசக் கூடிய வாய்ப்பு ஒன்று கிடைத்தது.  அவன் பெரிய மொடாக்குடியன்!

நான் வேலை செய்த அந்தத் தோட்டத்தில் சுமார் முந்நூறுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர்.  பெரும்பாலும் இந்தோனேசியர்கள். அதில் மூன்று குடும்பங்கள் தான் இந்தியக் குடும்பங்கள். அதில் இந்த மொடாக்குடியனின்  குடும்பமும் ஒன்று. அங்குள்ள அடிதடிகள், சண்டைசு சச்சரவுகள் என்றால் இந்த மூன்று குடும்பங்களில் மட்டும் தான்!

இந்த மொடாக்குடியனுக்கும் அவன் மனைவிக்கும் தினசரி சண்டை. நடக்கும்! அவன் குடும்பத்திற்கு எந்த பணமும் கொடுப்பதில்லை. பள்ளி போகும் ஒரு மகள். இவர்களைப்பற்றி அவன் கவலைபடுவதாகவும் தெரியவில்லை. அந்த அளவுக்கு அவன் போதையிலேயே மிதப்பவன்! அவன் எவ்வளவு சம்பளம் வாங்குகிறான் என்பது அவன் மனைவிக்குத் தெரியும்.  அதனால் பணத்தைக் கேட்டு நச்சரிப்பாள்.

இந்த நிலையில் தான் நான் அவனைச் சந்திக்க நேர்ந்தது. உண்மையைச் சொன்னால் அவன் பாவப்பட்ட மனிதன். அவன் சகோரர்கள் யாரும் அவனை மதிப்பதில்லை. அதற்குக் காரணம் அவன் குடிப்பழக்கம். அந்தப் பழக்கத்திலிருந்து அவனால் விடுபடவும் முடியவில்லை.

பிரச்சனையைத் தீர்ப்பதற்கு ஒரு வழி சொன்னேன். அவன் மனைவி குடும்பத்தை நடத்த ஒரு மாதத்திற்கு எவ்வளவு தேவை என்பதைக் கேட்டேன். அவன் சொன்னான். அந்தப் பணத்தை அவளிடம் கொடுத்து விட்டால் அவள் பிரச்சனை பண்ணப்போவதில்லை. அவன் மகளுக்காக ஒவ்வொரு மாதமும் நூறு வெள்ளி சேமிப்பில் போட்டுவிடும்படி சொன்னேன். மீதமுள்ள பணத்தில் எதையாவது செய்துவிட்டுப் போ. உன் மனைவி எந்தப் பிரச்சனையையும் ஏற்படுத்தப் போவதில்லை. அவன் வேலையில் அவனுக்கு நல்ல ஒவர்டைம் சம்பளம் கிடைக்கும். அது எவ்வளவு என்பது அவன் மனைவிக்குத் தெரியவாய்ப்பில்லை. நீ குடிப்பதற்கு அந்தப் பணத்தைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கூறினேன்.

தான் அப்படியே செய்வதாகக் கூறினான். நான் அவனை நம்புகிறேன். காரணம் யாரும் அவனை மனிதனாகக் கூட மதிப்பதில்லை. நான் ஒருவன் தான்  அவனை  மனிதனாக  மதித்து அவனிடம் பேசினேன்.

பின்னர் மாற்றலாகி  நான் வேறு தோட்டத்துக்குப் போகும் போது அவனே என்னைப் பார்க்க வந்தான்.  நான் அவனிடம் எதுவும் கேட்கவில்லை. அவனே என்னிடம் "நீங்கள் சொன்னபடியே நான் செய்கிறேன். என் மகளுக்கும் மாதாமாதம் சேமிக்கிறேன்". என்று கூறினான்.

அது உண்மையோ பொய்யோ எனக்குத் தெரியாது. அவன் சொல்வது உண்மை என்றே நான் நம்புகிறேன். பொய்யென்றால் அவன் என்னைப் பார்க்கவே வந்திருக்க மாட்டான். நான் மறந்து போனதை அவன் நினைவு படுத்தியிருக்க மாட்டான்.

குடிகாரர்கள் திருந்துவார்கள். அவர்கள் மீது அக்கறைக்காட்டி  அவர்களைத் திருத்த வேண்டும்.

No comments:

Post a Comment