Monday 16 May 2022

சேமிப்பு என்பது என்றென்றும்!

சிறு பிள்ளைகளுக்கு ஏன் சேமிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துங்கள் என்று சொல்லுகிறார்கள்? அநாவசியமான, தேவையற்ற  செலவுகளைச் செய்யக் கூடாது என்பதற்காகத்தான்.

ஒரு காலகட்டத்தில் பள்ளி மாணவர்களின் சேமிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காக அஞ்கலகங்களிலிருந்து அதிகாரிகள் வருவார்கள். அவர்கள் ஒவ்வொரு மாணவரிடமும் அட்டை ஒன்றைக் கொடுப்பார்கள்.  அதில் நமது விபரங்களை எழுத வேண்டும். அந்த அட்டையில் கட்டங்கள் கொடுக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு கட்டத்திலும்  பத்து காசு தபால்தலை ஒட்ட வேண்டும். அதில் நூறு கட்டங்கள் இருக்கும். நூறு கட்டங்களிலும் தபால்தலை ஒட்டிய பின்னர் அது மொத்தம் பத்து வெள்ளியாக  ஆகி இருக்கும். அந்த பத்து வெள்ளி நமது கணக்கில் வரவு வைக்கப்படும். இப்படித்தான் அஞ்சலகத்தில் எனது முதல் கணக்கை நான் திறந்தேன்.  பின் நாள்களில் பி.எஸ்.என். வந்த பிறகு தான் அந்தக் கணக்கு எண் மாற்றப்பட்டது.

அதன் நோக்கம் என்பது மாணவப் பருவத்திலேயே சேமிப்பை ஊக்குவிக்க வேண்டும் என்பது தான்.

இன்றைய காலகட்டம் என்பது கொஞ்சம் சிரமமானது  என்பது  உண்மை. இப்போது எப்படி சேமிக்க முடியும் என்கிற கேள்வி எழுவது இயல்பு. ஆனால் சேமிக்கத்தான் வேண்டும். இது நாள்வரை நீங்கள் பெருந்தொகையாகச் சேமித்துக் கொண்டு வந்திருக்கலாம். வருமானம் குறையும் போது உங்கள் சேமிப்பைக் குறைத்துக் கொள்ளுங்கள்.  ஆயிரம் வெள்ளி சேமிப்பவராய் இருந்தால் அதனை ஐநூறு வெள்ளியாக மாற்றிக் கொள்ளுங்கள். அதுவும் முடியவில்ல என்றால் அதனை நூறு வெள்ளியாக மாற்றிக் கொள்ளுங்கள். பின்னர் அதனை அதிகரிக்க வேண்டுமென்றால் அதிகரித்துக் கொள்ளுங்கள்.  எல்லாம் ஒரு ஒழுங்கு முறை தான். நம் காரியங்களைச் சரியாக ஒழுங்காக செய்கிறோம் என்பதற்கான அடையாளம் அது.

சேமிப்பு என்பதை எந்தக் காலத்திலும் நாம் அலட்சியம் செய்யக் கூடாது. தமிழர்கள் மட்டுமே அதிக அலட்சியம் காட்டுபவர்களாக இருக்கிறோம். பின்னர் அதிகம் அவதிப்படுகிறோம்.

அதற்கு கோவிட்-19 தொற்றே மிகப்பெரிய எடுத்துக்காட்டு. அப்போது எந்த சமூகம் சிரமத்தை எதிர்நோக்கியது? சாப்பாடு இல்லாமல், பிள்ளைகளுக்குப் பால் மாவு இல்லாமல், உணவு இல்லாமல் நமது சமூகம் தான் மிகவும் அவதிப்பட்ட சமூகம். அதே சமயத்தில் குடும்பத்தலைவன்  ஒரு பக்கம், எந்தக்கவலையும் இல்லாமல், கும்பலோடு  கும்பலாக குடித்து கும்மாளம் அடித்துக் கொண்டிருக்கிறான்!  நல்ல வேளை நமது குடும்பப் பெண்கள் தான் குடும்பங்களைக் காப்பாற்றினார்கள்.

சேமிப்பு என்பது நமது பணம். அது தான் நம்மைக் காப்பாற்றும். அண்ணன் தம்பியெல்லாம் ஒரு சில நாள்கள் தான் காப்பாற்ற முடியும்.

சேமிப்பு என்பது  ஒவ்வொரு குடும்பத்திற்கும் தவிர்க்க முடியாத ஒன்று. அதனை அலட்சியம் செய்யாதீர்கள்.

No comments:

Post a Comment