Friday 27 May 2022

தயாராக இருக்கிறீர்களா?

 

வரும் சில மாதங்களில் பொருள்கள் விலையேற்றம் என்பது தவிர்க்கமுடியாதது என்று கணிக்கப்படுகிறது.

பொருள்களின் விலை குறைந்தபட்சம் 60% விலையேறும் என்று இப்போதே பேச ஆரம்பித்துவிட்டார்கள். விலையேறும் என்பது ஒரு பக்கம். இன்னொன்று பொருள்கள் கிடைக்குமா என்பதும் இன்னொரு பக்கம். அப்படியே பொருள்கள் கிடைத்தாலும் பழைய விலைக்குக் கிடைக்காது என்பதையும் ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது.

ஆனால் மக்களிடையே உள்ள பிரச்சனை என்பது "சம்பளம் ஏறவில்லை! பொருள்கள் விலை மட்டும் இப்படி அனாவசியமாக ஏறுகிறதே!" என்கிற புலம்பல்.  அரசாங்கத்தில் பணிபுரிபவர்களுக்கு ஒரு வேளை சம்பளம் கூடுதலாகக் கிடைக்கக் கூடிய வாய்ப்புகள் உண்டு. இவர்களின் சம்பளத்தை நம்பி தான் வியாபாரிகளே இருக்கின்றனர். "அப்ப தான் அரசாங்கம் கொடுப்பதில் நமக்கும் பங்கு கிடைக்கும்!" என்கிறார்கள் வியாபாரிகள்!

தனியார் துறைகளில் உள்ளவர்களின் குடும்பமே சேர்ந்து உழைத்தால் தான் சாப்பாட்டுப் பிரச்சனையைத் தீர்க்க முடியும்.  அது மட்டும் போதுமா?  பெரும்பாலானோருக்கு ஏதாவது ஒரு வகையில் மாதா மாதம் கார், இரு சக்கரவாகனங்கள், வீட்டு வாடகை அல்லது வீட்டுத் தவணை  - இப்படி தவணைகளாகக் கட்ட வேண்டிய சூழல் இருக்கும். வங்கிக்குக் கட்ட வேண்டிய தவணையைக்  கட்டவில்லை என்றால் பல சிக்கல்களை உருவாக்கும்.

இவைகளையெல்லாம் யோசித்துத் தான் இப்போது பணத்தை செலவழிக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் அனைவரும் உள்ளோம். பயனீட்டாளர் சங்கங்கள் கூட மலேசியர்களுக்கு நல்ல அறிவுரையைக் கூறியிருக்கின்றனர். ஆமாம், பார்த்து பார்த்து உங்கள் பணத்தைச் செலவு செய்யுங்கள்  என்கிறார்கள்.  தேவையற்ற ஆடம்பரம் வேண்டாம். அளவாக, சிக்கனமாக உங்கள் பணத்தைச் செலவு செய்யுங்கள் என்பது தான் அவர்களது அறிவுரை.

அது நல்ல அறிவுரை. ஏற்றுக்கொள்ளத்தான்  வேண்டும். அது உங்கள் பணம். அதனை இப்போது நீங்கள்  இறுக்கிப் பிடித்து வைத்தால் தான் நாளை உங்கள்  பணம் உங்களுக்கு உதவும். மற்றவர்கள் பணம் எந்த வகையிலும் உங்களுக்கு உதவப் போவதில்லை. 

அப்படி நீங்கள் இறுக்கிப்பிடித்து வைக்கவில்லை என்றால் வீடு பறி போகலாம், கார் பறி போகலாம் வீட்டிலிருந்து விரட்டி அடிக்கப்படலாம், சாப்பாடு இல்லாமல் தடுமாறலாம் - இப்படி பலவற்றை எதிர்நோக்க வேண்டி வரும்.

இதில் பாதிக்கப்படுபவர்கள்  பெரும்பாலும் நம் மக்கள் தான். அதனால் தான் கொஞ்சம் எச்சரிக்கையாய் இருங்கள் என்று சொல்ல வேண்டியிருக்கிறது. பயப்பட வேண்டாம்!  துணிவோடு பிரச்சனைகளை எதிர்நோக்குங்கள்! நம்மால் முடியாது என்றால் வேறு யாரால் முடியும்! இதுவும் கடந்து போகும் என நம்புங்கள்!

No comments:

Post a Comment