Tuesday 12 March 2024

பள்ளி சிற்றுண்டிச்சாலை மூடப்பட வேண்டுமா?

 

புனித ரம்லான் மாதத்தில் பள்ளி வளாகங்களில் செயல்படும்  சிற்றுண்டிசாலைகளின்  நிலைமை என்ன?

இத்தனை ஆண்டுகளாக அது மூடப்பட்டு சீன, இந்திய மாணவர்கள் தங்களது உணவுகளை கழிவறைகளில் சாப்பிடுகின்ற நிலை ஏற்படுத்தப்பட்டது.

இந்த ஆண்டு கல்வி அமைச்சர்  புதிய அறிவிப்போடு  வந்திருக்கிறார்.  சிசா  திறந்திருக்கும். சீன, இந்திய மாணவர்கள்  சிசாக்களில்  தங்களது உணவுகளைச் சாப்பிடலாம் என்று அறிவித்திருக்கிறார். யார் கண்டார்? மாணவர்கள் கணிசமான அளவு இருந்தால்  சிசாக்களில் சிற்றுண்டிகளும்  விறகப்படலாம்.  தவறு ஒன்றுமில்லையே.

பள்ளிக்கு வெளியே உணவுகளோ, உணவகங்களோ திறக்கப்படாமலா இருக்கின்றன?  எல்லாமே திறக்கப்படுகின்றன.  சாப்பிடுபவர்கள் சாப்பிட்டுக்கொண்டு தான் இருக்கின்றனர். பள்ளியில் மட்டும் முற்றிலுமாக அடைத்துவிட வேண்டுமென்று சொல்லுவது ஏற்றுக்கொளவதாக இல்லை.

ரம்லான் மாதம் என்பது இஸ்லாமியர்களுக்குப்  புனிதமான மாதம்.  அதனை யாரும் மறுக்கவில்லை.  கிறித்துவர்களும் ஈஸ்டருக்கு முன் நாற்பது நாள்கள்  மாமிசம்  உண்ணுவதைத் தவிர்க்கிறார்கள். அதுவும் புனிதம் கருதி தான்.  இந்துக்கள்  வெள்ளிகிழமைகளில்  நோன்பு இருப்பவர்கள் இப்போதும் உண்டு.  மாமிசம்  உண்ணுவதையும் தவிர்க்கிறார்கள்.  எல்லாமே புனிதம் கருதி தான்.  எல்லா மதங்களுமே ஏதோ ஒரு வகையில் நோன்புக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.  ஆனால்  யாரும்   "நாங்கள் சாப்பிடவில்லை. நீங்கள் சாப்பிட வேண்டுமென்றால்  கழிவறை பக்கம் போங்கள்"  என்று  மாணவர்களிடம் சொன்னதில்லை.

எப்படியோ இன்றைய அரசாங்கம், பிரதமர் அன்வார் தலைமையில் உள்ள அரசாங்கம்,  இத்தனை ஆண்டுகள் புரிந்த தவற்றினைச் சரி செய்திருக்கிறது.  பல மதத்தினர் வாழ்கின்ற ஒரு நாடு இது. அரசியல்வாதிகள் முதலில் அதனைப் புரிந்து கொள்ள வேண்டும்.  ஏதோ அனைத்தையும் குத்தகைக்கு எடுத்துக் கொண்டோம்  என்பது போல செயல்படக் கூடாது என்பதுதான்  கற்க வேண்டிய பாடம்.

கல்வி அமைச்சரின் இந்த அறிவிப்பை மகிழ்ச்சியுடன்  அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

நன்றி! நன்றி! நன்றி!

No comments:

Post a Comment