அட! அன்று ஒரு மலாய் உணவகத்திற்குப் போனால் அங்கேயும் பிரியாணி! ஒன்று மட்டும் நிச்சயம். இப்போது இங்கு விற்கப்படும் பிரியாணிகளைச் சாப்பிட்டால் அதன்மீது உள்ள ஆசையே போய்விடும்!
பிரியாணி என்பது ஒரு விசேஷமான தயாரிப்பு. யார் வேண்டுமானாலும் அந்த உணவைத் தயாரித்து விடலாம் என்று நினைப்பது பெரிய கற்பனை! அதற்கென்று பல படிநிலைகள் உண்டு. அதனை வரிசையாகக் கடைப்பிடித்து ஒவ்வொரு படியாகச் செய்யும் போது தான் அது பிரியாணியாக இருக்கும்.
நினைத்தால் உடனடியாகப் பிரியாணி செய்துவிட முடியும் என்பதெல்லாம் வீண். எந்த ராணி செய்தாலும் அது பிரியாணியாக இருக்காது. நமது நாட்டைப் பொறுத்தவரை நல்ல பிரியாணிக்கு வாய்ப்பில்லை. நான் பிரியாணி விரும்பி அல்ல. ஆனால் நான் இது நாள் சாப்பிட்டவரை எனக்குத் திருப்தி இல்லை. பெரும்பாலோரைப் பொறுத்தவரை தமிழ் நாட்டுப் பிரியாணிக்கு ஈடில்லை என்பது தான். அதுவும், பிரியாணியைப் பொறுத்தவரை, இஸ்லாமிய சகோதரர்களுக்குத் தான் முதலிடம். முற்றிலுமாக பிரியாணி நூறு விழுக்காடு அவர்களின் தயாரிப்பு தான்.
சமீப காலங்களில் ஏகப்பட்ட தமிழக உணவகங்கள் இங்கு கிளைகளைத் திறந்து வருகின்றன. ஆனால் அங்கும் கூட பிரியாணி தயாரிக்கும் நல்ல சமையலர் இல்லை என்பது தான் சோகம். அங்குப் போகிறவர் எல்லாம் "நல்லா இல்லே" என்று தான் சொல்லுகிறார்கள். நல்லா இருக்கு என்று யாரேனும் சொன்னால் அந்த உணவகத்தின் சமையல்காரர் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர் என்று பொருள். அல்லது இன்னொரு குற்றச்சாட்டையும் சொல்லலாம். உணவில் சேர்க்க வேண்டிய பொருள்களைக் குறைத்தோ அல்லது தவிர்த்தோ அவர்கள் சமைக்கலாம். எதைக் குறைத்தாலும் கூட்டினாலும் விலையில் எந்த மாற்றமுமில்லை! விலை குறையும் என்று கனவு காண்பதோடு சரி!
நமக்கு ஒரு வருத்தம் உண்டு. மலேசியாவைப் பொறுத்தவரை எல்லா உணவகங்களுமே பிரியாணி செய்கிறார்கள். பழையவர்களோ, புதியவர்களோ எல்லா உணவகங்களுமே பிரியாணி உணவைத் தயாரிக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் தரமான பிரியாணிகள் கிடைப்பதில்லை. கிடைக்க வழியில்லை! செய்யத் தெரியாதவர்களிடம் பிரியாணி எப்படி இருக்கும்?
நம்முடைய உணவகங்கள் முறையாகக் கற்றுக்கொண்டவர்களை வைத்து பிரியாணி செய்ய வேண்டும். இல்லாவிட்டால் இங்கு எந்தக் காலத்திலும் நல்ல பிரியாணி கிடைக்க வழியில்லை!
No comments:
Post a Comment