Minister of Education: Fadhlina Sidek
பொதுவாக ஆசிரியர் தொழிலில் இருப்பவர்களுக்கு சுயமரியாதை, கௌரவம் என்பது முக்கியம். ஆசிரியர் ஆணோ பெண்ணோ இருபாலருக்கும் பொருந்தும்.
சமீபத்தில் பெண் ஆசிரியை ஒருவர் ஒரு மாணவனுடன் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக வெளியான செய்தி இப்போது காவல்துறை, கல்வி அமைச்சின் விசாரிப்பில் இருக்கின்றது. அவர் குற்றவாளியா என்பது விசாரணைக்குப் பின்னரே தெரிய வரும். ஒரு வேளை அந்த ஆசிரியை அந்த மாணவனை "நானே திருமணம் செய்து கொள்கிறேன்" என்று சொன்னால் பிரச்சனையே திசை மாறிவிடும்!
இங்கு நாம் சொல்ல வருவதெல்லாம் கல்வி அமைச்சு இது போன்ற பிரச்சனைகளில் கடுமையாக நடந்து கொள்ள வேண்டும் என்பது தான். பெரும்பாலான பள்ளிகளில் ஆண் மாணவர்களைவிட பெண் மாணவிகளே அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இதனை நாம் தொடர்ந்து பார்த்துக் கொண்டு தான் வருகிறோம்.
இது போன்ற பிரச்சனைகளில் சிக்கும் ஆசிரியர்களை வேறு பள்ளிகளுக்கு மாற்றுகிறோம் என்று கல்வி அமைச்சின் நிலைப்பாடு ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல. ஒரே வழி அவர்கள் ஆசிரியர் பணியிலிருந்து நீக்கப்படுவது தான். அவர்கள் தொடர்ந்து ஆசிரியர் பணியில் இருப்பது எதிர்காலத்தில் மாணவர்களுக்குப் பாதிப்பைத்தான் ஏற்படுத்தும்.
அவர்கள் ஜாலியாக இருப்பதற்கும் கூத்தடிப்பதற்கும் அரசாங்கத்தில் வேறு துறைகளா இல்லை? அங்கே அவர்கள் எக்கேடு கெட்டாலும் யாருக்கும் கவலையில்லை! ஆனால் கல்வி என்பது வேறு. அது அறிவு சார்ந்தத் துறை. நல்ல ஒழுக்கமான மாணவர்களைத் தயார் பண்ணும் துறை. அறிவில் குறைந்தவர்களை வைத்துக் கொண்டு, அடாவடித்தனம் பண்ணுபவர்களை வைத்துக் கொண்டு, மாணவர்களின் எதிர்காலத்தை வீணடிப்பதை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. கல்வி அமைச்சு இதனைக் கொஞ்சம் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்.
இது போன்று தவறு செய்பவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். வேலையிலிருந்து நீக்கப்பட வேண்டும். 'அங்கே மாற்றுகிறோம், இங்கே மாற்றுகிறோம்' என்கிற பேச்சுக்கே இடமில்லை!
No comments:
Post a Comment