Saturday, 30 November 2024

அடித்துக் கொல்வதா?

நாய்களை அடித்துக் கொல்வது என்பது சாதாரண தினசரி வாழ்க்கையில்  ஓர் அங்கம்  என்கிற நிலைமைக்க்ப் போய்விட்டது.

மனித நேயம் இருந்தால் யாரும் இது போன்ற மிருகச் செயல்களைச்  செய்துவிட முடியாது. ஏதோ தப்பித் தவறி பள்ளியின் உள்ளே வந்துவிட்டது  என்பதற்காக இப்படி அடித்தே கொல்வது  எத்தகைய  மிருகத்தனம்?

நீங்கள் யாரும் நாய்களைக் கொஞ்சுங்கள்  என்று சொல்ல வரவில்லை.  உங்களின் அனுதாபத்தையாவது காட்டுங்கள் என்று தான் சொல்லுகிறோம். நாய்களைக் கொல்வதால்  அப்படி என்ன பெருமை உங்களுக்கு வந்துவிட்டது?

நாய்கள் அடக்கமான பிராணிகள்.  அடித்தால் வாங்கிக் கொள்ளும் அவ்வளவுதான். அதனை அடித்தே கொல்வதா?  நினைத்துக் கூட  பார்க்க முடியவில்லை.

நாய்கள், பூனைகள் நம்மைச் சுற்றி வாழ்பவை.  நம்மைச் சுற்றி வருபவை. அது ஒர் உயிருள்ள  ஜீவன் என்று நினைத்தால் போதும். அதனைத் தெரு நாய் என்கிறோம். தெருவில் தான் சுற்றித் திரிகின்றன.  அது எப்படியோ எதனையோ தின்று  வாழ்கிறது.  விரட்டினால் பயந்து ஓடிவிடுகிறது. யாருக்கு என்ன தீங்கை அது செய்கிறது?

மனிதனுக்கு யாரிடமும் எந்த அன்பும் இல்லை அக்கறையும் இல்லை. மனித நேயமும் இல்லை.  அன்பு இருந்தாலே போதும்.  எந்த மிருகத்தையும் கொல்லத் துணியாது.  மனித வக்கிரத்தோடு வாழ்பவன் எதனையும் செய்யத் துணிவான்.

அரசாங்கம் இது போன்ற செயல்களுக்குத் தக்க தண்டனை கொடுக்க வேண்டும்  என்பது தான் நமது கோரிக்கை.  அது நாயாக இருக்கலாம், பூனையாக இருக்கலாம்  அவைகளை சித்திரவதை செய்து  கொல்வதை யாராலும்  ஏற்றுக்கொள்ள முடியாது. சும்மா நூறு, இருநூறு தண்டனையெல்லாம் போதுமானது அல்ல என்பதை நாம் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம்.

இதை நிறுத்த கடுமையான தண்டனை தான் ஒரே வழி. வருங்காலங்கலில் கடுமையான தண்டனை வழி தான் இது போன்ற செயல்களைக் கட்டுப்படுத்த முடியும். 

அடித்துக் கொன்றவனை கல்லால் அடித்துக் கொல்ல வேண்டும். வேறு எதுவும்  மனதைத் தேற்றாது.

Friday, 29 November 2024

மூன்று ஆண்டு த்டையை தகர்த்தார்!

                                                  டத்தோஸ்ரீ எம்.சரவணன்

மூன்று ஆண்டு தடையை  முறியடித்தார்  டத்தோஸ்ரீ சரவணன். நெஞ்சாராப்  பாராட்டுகிறோம்.

பள்ளிவாசல்களைத் தவிர,  அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு  எந்த ஒரு வழிபாட்டுத் தளங்களுக்கும் பொருளாதார உதவி இல்லை என்று கைவிரித்தார்  துணை அமைச்சர் ஒருவர். எந்தவொரு பி.கே.ஆர். நாடாளுமன்றத் தலைவர்களோ, ஜ.செ.கெ. தலைவர்களோ   மூடிய வாயைத் திறக்கவில்லை!  வாய்க்கு  அணை போட்டுவிட்டனர்!

இந்த நேரத்தில் பொங்கி எழுந்தவர் தான் டத்தோஸ்ரீ சரவணன்.  கடுமையான கண்டனங்களைத் தெரிவித்தார். தொடர்ந்து பலர் எதிர்ப்புகளைத்  தெரிவித்து வந்தனர், இந்த நிலையில் வீடமைப்பு அமைச்சர்,    ங்கா  கோர் மிங்   மானியங்கள்  தொடர்ந்து கிடைக்கும், தடையேதுமில்லை என்கிற  அறிவிப்பைச் செய்திருக்கிறார்.  வாழ்த்துகிறோம்.

வெளியே பார்ப்பதற்கு எல்லாம் வெகு விரைவில் ஒரு முடிவுக்கு வந்துவிட்டது  என்று தோன்றலாம்.  ஒன்றை யோசித்துப் பாருங்கள்.  அரசியல்வாதிகள் கண்டு கொள்ளாத நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்விகள் எழுப்பாத நிலையில் இந்தப் பிரச்சனை  என்ன ஆகியிருக்கக் கூடும் என்று  யோசித்துப் பாருங்கள்.  அதுவும் இந்து கோவில்கள் மட்டும் தான் என்கிற நிலை இருந்திருந்தால்......? இந்நேரம் மூட்டையே கட்டியிருப்பார்கள்!  எல்லா வழிபாட்டுத் தளங்கள்  என்பதால்  எதுவும் செய்ய முடியவில்லை.

ஆனாலும் இது ஓர் எச்சரிக்கை மணி என்பதாகத்தான் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். பிரதமர் அன்வாரின் பட்டியலில் இதுவும் ஒன்றாக இருக்கலாம். யார் கண்டார்?

நல்ல வேளை சரவணன் அவர்கள் எந்தப்பதவியுலும்  இல்லை. அதனால் இந்தச் சமுதாயம் தப்பித்தது!

Thursday, 28 November 2024

பணிப்பெண்கள் என்ன கேவலமா?


வீட்டு வேலை செய்யும் பணிப்பெண் ஒருவரைத் துன்புறுத்தியதாக ஒரு தம்பதி கைது செய்யப்பட்டு இப்போது சிறை தண்டனையும் கொடுக்கப்பட்டிருக்கிறது.

இதில் ஆச்சரியம் என்னவேன்றால் குடும்பத்தலைவர் காவல்துறையில் உள்ளவர்.  அது தான் நம் மனதைச் சங்கடப்பட வைக்கிறது.  இப்படிக் காவல்துறையில் உள்ளவர்களே சட்டத்தை மீறினால்  யாரை நொந்துகொள்வது?

காவல்துறையில்  உள்ளவர்கள் சட்டத்தை  மீறும்போது  தண்டனை அதிகமாகத்தான் இருக்கும்; இருக்க வேண்டும். அதனால் தான் அதிகாரியான அவருக்குப் பன்னிரெண்டு ஆண்டுகளும் அவரது மனைவிக்குப் பத்து ஆண்டுகளும்  சிறைத்தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது.

அதில் ஏதும் தவறு இருப்பதாகத் தோன்றவில்லை.  அதிகாரத்தில் உள்ளவர்களே  குற்றங்களைப் புரியும் போது  அவர்களுக்குக் கடும் தண்டனை அளிக்கப்படும்  என்பது அவர்களுக்குத் தெரியும்.  ஆனாலும் பலர் காலம்பூராவும் ஏமாற்றியே கல்லந்தள்ளிவிடுகின்றனர்.  அதுவே ஒரு சிலருக்கு முன்னுதாரணமாகப்  போய்விடுகிறது.  தவறான நுன்னுதாரணம்,  தவறான வழிகாட்டி அனைத்தும் தவறில் போய் முடியும்.

காவல்துறை இலஞ்சத்திற்குப் பேர் போனது.  அவர்களுடைய அடிதடியெல்லாம்  சிறைகளின் உள்ளே தான் இருக்க வேண்டும்.  வெளியே  வீட்டுப் பணிப்பெண்களிடம்  தங்களது வீரத்தைக் காட்டுவது  காட்டுமிராண்டித்தனம்.  ஒரு அப்பாவிப் பெண்ணை  அடித்து உதைத்து நாற்பதுக்கு  மேற்பட்ட  தையல்களைப் போட வைத்து - இறைவா இவர்களை என்ன செய்யலாம்?  ஓர் ஆண் தான் மிருகத்தனமாக நடந்து கொள்கிறான் என்றால் ஒரு பெண்ணுமா அப்படி?

நம்மால் இவர்களை ஒன்றும்  செய்யும் முடியாது.  நீதிமன்றம் கொடுத்த தண்டனை போதுமானதா  என்று நம்மால் முடிவுக்கு வரமுடியாது.  நீதியின் கண்களில் அது சரியாகத்தான் இருக்க முடியும்.

ஒன்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன். பணிப்பெண்களைக் கேவலமாக நினைக்க வேண்டாம். அயோக்கியத்தனம் பண்ணாதவரை எந்த வேலையும் உயர்வானதுதான்.

Wednesday, 27 November 2024

இதுவும் ஒரு காரணம்!

இது மழை காலம். எட்டு மாநிலங்கள் வெள்ளத்தால் பெரும் பாதிப்புகள்  ஏற்பட்டிருக்கின்றன.  பிரச்சனை என்னவென்றால் இது ஒன்றும் நமக்குப் புதிதல்ல.  நீண்ட காலமாக நடந்து கொண்டு தான் இருக்கின்றது.

இதற்குத் தீர்வு இல்லையென்றும், எல்லாம் கடவுளின் செயல் என்று கடவுளின் மீது பழி போடுவதும்  தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கின்றது.  கடவுள் நம்பிக்கை தேவை தான்.

சமீபத்தில் வீடமைப்பு ஊராட்சித்துறை துணை அமைச்சர் ஒரு கருத்தைக் கூறியிருக்கிறார்.  மலேசியர்களின்  பொறுப்பற்ற செயல்களும் திடீர் வெள்ளத்திற்குக் காரணம்  என்பதாகக் கூறியிருக்கிறார்.  ஆம், நாம் அனுதினமும் பார்க்கிறோமே  அதுவே தான்.  நமது இருப்பிடம் அருகே  கால்வாய்கள் அல்லது ஆறுகள்  இருந்தால் என்ன செய்கிறோம்?  வீட்டில் இருக்கும் அத்தனை  தேவையற்ற பொருள்களையும் அங்கே கொண்டு கொட்டுகிறோம். 

இதுவே  நாளடைவில் தீடீர் வெள்ளத்தை ஏற்படுத்துகிறது  என்பது தான்  அமைச்சர்  வைக்கின்ற குற்றச்சாட்டு. அதில் உண்மை இல்லை என்று சொல்ல முடியாது.  நாம் செய்கின்ற தவறுகள் நமக்கே பெரும் தீங்காக திரும்ப வருகிறது என்பது தான் உண்மை.

குப்பைகளை ஏன் ஆறுகளில் கொட்ட வேண்டும்?  குப்பைகளை அள்ளிக்கொண்டு போவதற்கு  'இண்டா வாட்டர்'  நிறுவனம்  செயல்படுகிறது.  அங்கே கொட்டாமல் ஏன் ஆற்றினில், கால்வாய்களில் கொட்டி நிரப்ப வேண்டும்?  அது ஆபத்தைக் கொண்டு வரும் என்பதை நாம் அறியாதவர்களாகவே  இருக்கிறோம்?

நாம் போடுகிற குப்பைகளின் அடைப்பினால்  தான் திடீர் வெள்ளம்  வருகிறது  என்பதை நாம்  எப்போது புரிந்து கொள்ளப் போகிறோம்? அமைச்சர் சொல்லுவது போல பெரும்பாலான திடீர் வெள்ளம் கால்வாய்களின் உள்ள அடைப்பினால் தான் வருகின்றது என்பதை  உறுதிப்படுத்தி  விட்டார்.

நாம் சொல்ல வருவதெல்லாம் மழைக்காலங்களில்  வரும் பெரும் வெள்ளத்தை நம்மால்  ஒன்றும் செய்ய முடியாது தான்.  ஆனால் திடீர் வெள்ளத்தை ஏற்படுத்தும் இந்த கால்வாய் அடைப்புகளை நம்மால்  தவிர்க்க முடியும்.  அதற்குத் தேவை எல்லாம் கொஞ்சம் பொறுப்புணர்வு தான்.

நாட்டின் நலன் கருதி  நம்மால் முடிந்ததைச் செய்வோம்.

Tuesday, 26 November 2024

Hai! Hai! Hai! No UPSR, No PT3!

  `````````````````````````````                    Hey! Hey!  Hey! No UPSR!

மாணவர்களுக்கு மகிழ்ச்சி!  பெற்றோர்களுக்குப் பிறழ்ச்சி!

கல்வி அமைச்சு அவர்களின் பாரத்தைத் தூக்கி  அப்படியே பெற்றோர்களிடம் ஒப்படைத்துவிட்டது!   பெற்றோரே! இனி உங்கள் பாடு. ஆசிரியர்கள்,  அதுவும் தேசிய மொழி பள்ளி ஆசிரியர்கள்  கொஞ்சம்  அதிகமாகவே சுதந்திரமாக செயல்படுவார்கள்!

ஆனால் தாய்மொழி பள்ளிகளுக்கு இனி சுமைகள் அதிகம்.  எப்படியாவது மாணவர்களை  அடுத்த வகுப்புகளுக்குப் போகும் முன்னர்  அவர்களைத் தயார் செய்ய வேண்டும்.   இப்போதே மாணவர்களைத் தயார் செய்யா விட்டால்  எஸ்.பி.எம். தேர்வில்  அவர்கள் படுபாதாளத்திற்குப் போக வேண்டி வரும்! அந்தப் பொறுப்பு  தாய்மொழி பள்ளிகளுக்கு உண்டு.

மாணவர்கள் கோட்டா முறை அல்லது  மெரிட்  என்கிற தகுதி முறை  எதுவும் நம் மாணவர்களுக்குக் கை கொடுக்காது. நமது மாணவர்கள் தங்களது பாடங்களைப் படித்தே ஆக வேண்டும். கடுமையான உழைப்பைப் போட வேண்டும்.

பள்ளிகளும் முடிந்தவரை ஒவ்வொரு ஆண்டும் நல்லதொரு பாடத் திட்டங்களை வகுத்து  செயல்படத்தான் செய்வார்கள்.  ஆனால் மாணவர்கள் பாடங்களில் கவனம் செலுத்தாமல் இருந்தால்  ஆசிரியர்களும் லண்டு கொள்ளமாட்டார்கள்! அதனால் பெற்றோர்கள் பிள்ளைகளின் கல்வியில் அக்கறை காட்டத்தான் வேண்டி வரும். எல்லாப் பழிகளையும்  பள்ளிகளின் மீது சுமத்தாமல்,  "வேலை செய்வதால்  எங்களுக்கு நேரமில்லை" என்று சொல்லாமல் பிள்ளைகள் கல்வியில் வெற்றி பெற வேண்டுமென்றால் பெற்றோர்கள் அக்கறை காட்டத்தான் வேண்டும். 

இப்படி ஒரு கல்வி முறை தேவைதானா என்கிற குரல்களும்  ஒலித்துக் கொண்டு தான் இருக்கின்றன. கல்வி அமைச்சும் புதிதாக ஒன்றும் செய்துவிடவில்லை.  மற்ற நாடுகளில் இது போன்ற கல்விமுறை வெற்றியளித்தால்  அதனை  இங்கு அறிமுகம் செய்வதால்  எதுவும்  கெட்டுப் போவதில்லை.  நல்லதை நினைத்துத்தான்  செய்கின்றனர். 

நல்லதே நடக்கும் என எதிர்பார்ப்போம்!

Monday, 25 November 2024

ஆனந்த கிருஷ்ணன் மறைந்தார்!

                                            Malaysian Billionaire: T.Ananda Krishnan

மலேசிய கோடிஸ்வரர்  ஆனந்த கிருஷ்ணன், இன்று (28.11.24   காலமானதாக   அவரது  நிறுவனம்  அறிவித்தது.  அவருக்கு வயது 86. 

மலேசியாவின் பெரும் செல்வந்தர்களில் ஒருவர். பணக்காரர்களில்  பட்டியலில் இரண்டாவது இடத்தில் நீண்ட நாள்  இருந்தவர்,  மலேசியாவின் முதல் பத்து பணக்கரர்களில் ஒருவர்.

அவர் ஒரு தமிழர் என்பதில் நமக்கும் பெருமை.  அந்தப் பெருமையில் நாமும் பங்குப் போட்டுக் கொண்டோம்.  அதனைப் பெருமையாகவும்  சொல்லி வந்தோம். ஆனால் இனி.......? முடியுமா?

அந்த இரண்டாவது அல்லது மூன்றாவது  அல்லது முதல் பத்து இடத்திலாவது யாரேனும் தமிழர் வர முடியுமா என்பது சந்தேகம் தான். அல்லது ஓர் இந்தியராக இருந்தால் கூட நமக்குப் பெருமை தான். வாய்ப்பு உண்டா என்பதே  சந்தேகம். 

ஆனந்தாவின் இடத்தைப்  பிடிக்க  சமீபகாலங்களில்  யாரும் ஆளில்லை என்றே தோன்றுகிறது.              

அவர் மறைந்தாலும் அவர் தொடர்ந்து  நம் மனதில் நிலையாகவே நிற்பார்.

Sunday, 24 November 2024

தீபாவளி விருந்து!

தீபதீ
த்கீ
அரசியல்வாதிகளின் தீபாவளி விருந்து என்பது  ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி வருவது போல  அவர்களும் "நாங்கள் இன்னும் உயிரோடு இருக்கிறோம்"  என்பதைக் காட்டிக் கொள்ளுவதற்காக ஒவ்வொரு ஆண்டும்   அவர்களுக்குத் தீபாவளி தேவைப்படுகிறது!

மற்ற நாள்களில் இவர்கள் எங்கே என்பது யாருக்கும் தெரியாத இரகசியம்.  அவர்கள் மக்கள்  பிரதிநிதிகள் தான்.  ஆனால் மக்கள் கண்களுக்கு அகப்படாத ஆந்தை போன்றவர்கள். இரவு நேரங்களில்  மக்களைச் சந்திப்பவர்கள்.

அவர்கள் என்ன தான்  நேரமில்லாது பணி செய்பவர்களாக இருந்தாலும்  மக்களுக்காக மட்டும் அவர்கள் மக்கள் முன்னால் காட்சியளிப்பது அந்த ஒரு நாள் தான்.  அது தான் தீபாவளி மற்றும் ஏனைய பெருநாள்கள் காலத்தில்.   அது அவர்களுக்கு அவசியம்.  நாங்கள் உங்களுக்கான சேவையில் இருக்கிறோம் என்பதைக் காட்டிக்கொள்ள.

அந்தப் பெருநாள் காலங்களின் செலவு கூட அவர்களின் 'பாக்கெட்டில்' இருந்து வருவதில்லை.  எல்லாம் மக்களின் வரிப்பணம்.  எப்படியோ நாம் இது பற்றியெல்லாம் குறை சொல்லவில்லை.  மக்கள் உங்களுக்குக் கொடுத்த பணி என்ன?  அதை ஏன் செய்ய மறுக்கிறீர்கள்?  உங்களை எங்கே தேடுவது.  தேவையான நேரத்தில் உங்களைப் பார்ப்பது எங்கே?  எதுவும் தெரிவதில்லை.   தீபாவளி நேரத்தில்  உங்களிடம் மக்கள் தங்களது பிரச்சனைகளைக் கூறலாமா?  மனு கொடுக்கலாமா?

மற்ற நாள்களில் மக்களைச் சந்திக்கவே பயப்படுகிறீர்கள்.  அவர்களுக்கு உதவிகள் தேவைப்படுகின்றன.  நீங்கள் உதவி செய்யத் தயாராக இல்லை. உங்களுடைய முகவரி தெரிவதில்லை. தெரிந்தாலும் அங்கு நீங்கள் இருப்பதில்லை.

அடாடா! மக்களுக்குச் சேவை செய்ய  என்ன மாதிரி  மக்கள்  பிரதிநிதிகள்! இவர்களைப் பிரதிநிதிகள் என்று  இவர்களுக்கு நாம் மதிப்பு கொடுப்பதே  பெருந்தவறு. இவர்களுக்கு நாம் ஆயிரம் ஒய்பி, ஆயிரம் டத்தோ - தேவை தானா சொல்லுங்கள்?  மாலை, மரியாதைகள் - இவைகள் தேவைதானா? என்று நாம் அவர்களுக்கான மரியாதையைக் குறைக்கிறோமோ அப்போது தான் அவர்கள் திருந்துவார்கள். அதுவரை நம்மை அவர்கள் மதிக்கப்போவதில்லை!

Saturday, 23 November 2024

மூன்று ஆண்டுகள் தடை!

பள்ளிவாசல்கள் அல்லாத மற்ற வழிபாட்டுத் தளங்களுக்கு  அடுத்து மூன்று ஆண்டுகள்  எந்த நிதி உதவியும் அளிக்கப்படாது என்பது தான் ஆகக்டைசியான பக்காத்தான் அரசாங்கத்தின்  கொள்கையாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அரசாங்கத்தின் முடிவு தான் என்றாலும் சொல்லப்படுவதோ  பிரதமர் அன்வார் தான் இதனைச் செய்கிறார் என்கிற குற்றச்சாட்டு  தொடரத்தான் செய்யும்.  அந்தக் குற்றச்சாட்டிலும் உண்மை இல்லை என்று சொல்லிவிட முடியாது.  அவரின் செயல்பாடுகள் அனைத்தும் இஸ்லாம் சார்ந்தே இருப்பதும்  ஒரு காரணம்.

இனி நிதி இல்லை என்றால் என்னதான் காரணமாக இருக்க முடியும்? நிதிச் சுமை தான் வேறு காரணம் எதுவுமில்லை.  பள்ளிவாசல்கள்  அனைத்தும் அரசாங்கத்தால் கட்டப்பட்டவை. ஒரு செங்கல் கூட  பொது மக்கள் கொடுக்க வேண்டும் என்கிற கட்டாயமில்லை.  அரசாங்கம் செய்யாவிட்டால்  அதனை யாரும் செய்யப்போவதில்லை.  மற்ற வழிப்பாட்டுத் தளங்களின் நிலை வேறு. பொது மக்களின் உதவியோடு தான் பல வழிபாட்டுத் தளங்கள்  இயங்குகின்றன.   நூறு விழுக்காடு அரசாங்க உதவி என்பதாக எதுவுமில்லை.

நூறு விழுக்காடு நிதி உதவி  பெறாத நிலையிலும் கூட பிற வழிப்பாட்டுத் தளங்கள்  இப்போது  பிரச்சனைகளை எதிர்நோக்கத் தொடங்கியிருக்கின்றன.  வருகின்ற மூன்று ஆண்டுகளுக்கு உங்களுக்கு 'நிதி உதவி இல்லை!' என்று அறிவித்துவிட்டது அரசாங்கம்.  இத்தனை ஆண்டுகளில் இது போன்ற அறிவிப்பை எந்தவொரு அரசாங்கமும் இது போன்ற அதிர்ச்சித் தாகவல்களைக் கொடுத்ததில்லை.  

வழக்கம் போல பிரதமர் அன்வார் இந்தியர்களுக்கு எதிரானவர், இந்துக்களுக்கு எதிரானவர்  என்று பழிபோடத்தான் செய்வர். காரணம் இந்தியர்களுக்கு அனைத்தும்  பாதகமாக அமையும் போது  வேறு என்ன சொல்ல  முடியும்? 

இந்த மூன்று ஆண்டு தடை உத்தரவை  மீட்டுக்கொள்ள வேண்டும் என்பதே  நம்முடைய  வேண்டுகோள்.  எங்கெங்கோ கைவைத்தாகி விட்டது  இப்போது  கோவிலிலுமா என்கிற கேள்வி எழத்தான் செய்யும்.  அதற்கு ஏன் இடம் கொடுக்க வேண்டும்?

Friday, 22 November 2024

பகடிவதையை தடை செய்யுங்கள்!


 பகடிவதை எங்கு நடந்தாலும் அதனைத் தடை செய்ய வேண்டும் அது எந்த நாடாக இருந்தால் என்ன?

நம் நாட்டில் பகடிவதை வரம்புக்கு மீறிவிட்டது என்பதை சமீபகாலமாக நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

பகடிவதை என்பது நம் நாட்டிற்குப் புதிதல்ல/   எல்லாகாலங்களிலும் உள்ளது தான்.  உயர்கல்விக் கூடங்களில் நடப்பவை தான.  ஆரம்ப காலங்களில்  பகடிவதைக்கு மிகவும் கெட்ட பெயர் ஏற்படுத்தியவர்கள்  நமது இந்தியர் மாணவர்கள் தான்.  அப்போது தொடங்கப்பட்ட  இந்த வன்முறைகள் அதன் பின்னர்  மலாய் மாணவர்களிடையே தொற்றிக் கொண்டது என்று தான் சொல்ல வேண்டும்.

ஆரம்பகாலங்களில் வெறும்  விளையாட்டாகவே இருந்த பகடிவதை  இப்போது மாணவர்கள் ஒருவருக்கு ஒருவர் அடித்துக் கொண்டு சாகும் அளவுக்கு  அதன் எல்லை மீறிவிட்டது.

அதுவும் கட்டொழுங்குப் பேர் போன  இராணுவப் பயிற்சி மையங்களில் பகடிவதை இன்னும் அதிக வன்மத்தைத் தான் கொண்டிருக்கிறது  என்பது அங்குள்ள மாணவர்கள் மெய்பித்துக் கொண்டிருக்கின்றனர். ஒரு சில மரணங்களும் நிகழ்ந்திருக்கின்றன.  சமீபத்தில் கூட ஒரு மாணவன் மிகவும் தீவிரமாக தாக்கப்பட்டிருக்கிறான்.  இந்திய மாணவர்கள் பெரும் அளவில் தொடர்ச்சியாகத் தாக்கப்படுகின்றனர்.

பொதுவாக பல வன்முறைகள் வெளியே சத்தமில்லாமல்  மறைக்கப்படுகின்றன.  அதனால் தான் இன்று பூதாகரமாக  இந்தச் செயல்கள் இன்று வளர்ந்து நிற்கின்றன.   ஆண் மாணவர்கள் தான் இது போன்ற செயல்களில்  ஆர்வம் காட்டுகின்றனர் என்ரால் பெண்களும்  அதைத்தான் செய்கின்றனர்.

பகடிவதை கண்ணியமாக நடக்கும் போது எந்த ஒரு பிரச்சனையும்  எழவில்லை.  ஆனால் கண்ணியம் தவறும் போது, அளவு மீறும் போது,  பிரச்சநைகள் வெடிக்கும் போது,  காவல்துறை நடவடிக்கை எடுக்கும் அளவுக்குப் பிரச்சனை  விஸ்வரூபம் எடுத்து விடுகிறது.

எல்லை மீறிவிட்ட நிலையில்  இனி பகடிவதையைத் தடை செய்வது தான் ஒரே வழி.   ஒருவரை ஒருவர் தாக்கும் நிலைக்கு  மாணவர்கள் போய்விடுகிறார்கள். ஏதோ தனிப்பட்ட தாக்குதலாகவே தோன்றுகிறது.

பகடிவதையைத் தடை செய்யுங்கள் என்பது தான் நமது நிலை!


Thursday, 21 November 2024

என்ன பண்ணி கிழிச்சீங்க?


பொதுவாக நம நாட்டு இந்திய அரசியல்வாதிகளைப் பற்றி நிறையவே தெரிந்து வைத்திருக்கிறோம்!

இவர்கள் எல்லாம் உலகிலேயே மிக  மிக யோக்கியமானவர்கள்  என்று நாம் நினைத்ததில்லை.  அவர்களுக்கும் அந்தத் தகுதி இல்லை  என்பது அவர்களுக்கே தெரியும்.

ஆளுங்கட்சியில் இருக்கும் போது தலை நிமிராமல் தரையைப் பார்ப்பதும் எதிர்கட்சியில் இருக்கும் போது  தலைநிமிர்ந்து  ஆகாயத்தைப் பார்ப்பதும்,, மார்தட்டுவதும் அவர்களுக்குக் கைவந்த கலை என்பதையும் நாம் புரிந்து வைத்திருக்கிறோம். 

நஜிப், அவருடைய பதவி காலத்தில்,  மலேசிய இந்தியர் பெருந்திட்ட்த்தை வரைந்து  அதன்வழி  இந்திய மாணவ்ர்கள்   உயர்கல்வி நிலையங்களில் 7 விழுக்காடு  ஒதுக்கீடும்  அத்தோடு  உத்தரவாதமும் வழங்கப்பட்டது என்பதையறிய நமக்கும்  மகிழ்ச்சியே.  அத்தோடு அந்தத் திட்டத்தின் வழி  பொதுச்சேவைத்துறையில்  7 விழுக்காடும், மெட் ரிகுலேஷன்  கல்வியில் 2200 இடங்களும் ஒதுக்கப்பட வேண்டும்  என்கிற அறிவிப்பும் இடம் பெற்றிருந்தது.  அதிலும் நமக்கும் மகிழ்ச்சியே!

இந்த அளவு திட்டங்கள் வரைந்தும் ஏன் எதுவும் எடுபடவில்லை? செயல்படுத்தப்பட முடியவில்லை?  இவைகள் எல்லாம் அரசாங்கத்தின் ஏமாற்று வேலை என்பதைக் கூடவா  அந்த அரசியல்வாதிகள் புரிந்து கொள்ள முடியவில்லை? பல ஆண்டுகளாக பிரதமர் சொல்லுவதும்  நாம் கேட்டு மகிழ்ச்சியடைவதும் நமக்கு என்ன புதிதா?  இவைகளெல்லாம் நடைமுறைக்கு வரப்போவதில்லை என்பது  இவர்களின் தலைவர்களுக்குத்  தெரியும்.  அதனால் குரல் எழுப்புவதில்லை!

இந்த அளவுக்கு அக்கறை காட்டும் இவர்கள் அந்தப் பெருந்திட்டம்  பயன்பாட்டுக்கு வரவேண்டும் என்கிற அக்கறையை ஏன் இவர்கள் காட்டவில்லை?  பயன்பாட்டுக்கு வரவேண்டும் என்பது மட்டும் இவர்களுக்கு எப்படித் தெரியாமல் போகும்?  ஆனால் ஆண்டுக் கூட்டங்களில்  மட்டும் சிறுந்திட்டம், பெருந்திட்டம்  என்று பிரதமரிடம் மகஜர் கொடுப்பது  மட்டும் வாடிக்கையாக வைத்திருக்கிறார்களே அந்த அளவு வெட்கங்கெட்ட ஜென்மங்களா இவர்கள்?

என்னா படிச்சீங்க,  என்னா கிழிச்சீங்க என்று நாம் தான் தலையில் அடித்துகொள்ள வேண்டியிருக்கிறது!

Wednesday, 20 November 2024

இது சரியான முடிவே!

RON 95 பெட்ரோல்  மலேசியர்களுக்குக் குறைவான விலையில், அரசாங்க மானியத்துடன்  விற்கப்படுகிறது என்பது மலேசியர்கள் உணர்ந்திருக்கிறோம். அதன் குறைந்த விலை மலேசியர்களுக்கு மட்டுமே.

குறைந்த விலையில்  மலேசியர்களின் நலனுக்காக  விற்கப்படும் அந்தப் பெட் ரோலை பிற நாட்டினர் பங்கு போடுவது ஏற்கக் கூடியது அல்ல. பிற நாட்டினர் என்னும் போது அது சிங்கப்பூர், தாய்லாந்து அந்த இரு நாட்டினரைத்தான் குறிக்கும்.

சிங்கப்பூர் போன்ற மிக மிக வளர்ச்சியடைந்த நாடுகளில் வாழ்பவர்கள் அங்குள்ள வளங்களைத்தான்  பயன்படுத்த வேண்டும்.  அங்கு அதன் விலை கூடுதலாக  இருந்தாலும்  சம்பளமும் கூடுதலாகத்தானே  வாங்குகிறீர்கள்.  அங்குள்ள அரசாங்கமும்  அனைத்தையும் கூட்டிக் கழித்துப் பார்த்துத் தான் விலையை நிர்ணயம் செய்திருக்கிறது. அங்கு விலை கூடுதல்  என்று சொல்லி இங்கு வந்து வாங்குவது  இன்னொரு நாட்டின் வளத்தைச்  சுரண்டுவது என்பது தான் பொருள்.  அதுவும் ஒரு வகை  திருட்டு தான்

 இந்தத் திருட்டு என்பது நீண்ட நாள்களாக நடந்து கொண்டிருப்பது  என்பது இரகசியம் அல்ல.   ஆனால் எந்த நடவடிக்கையும் அவர்கள் மீது எடுக்கப்படவில்லை என்பது ஏன் என்று தெரியவில்லை.  அல்லது எந்தவித கட்டுப்பாடும்  விதிக்கப்படவில்லை. என்ன செய்ய? நல்ல காலத்தில் யாரும் கண்டு கொள்வதில்லை. கஷ்ட  காலத்தில் ஒவ்வொன்றையும் கணக்குப் பார்க்க  வேண்டிய நிலைமை!

முடிந்து போன கதையை விடுவோம்.  இனி அந்த இரு நாட்டினரும் கொஞ்சம் எச்சரிக்கையாகவே இருப்பர் என நம்பலாம். விதிமுறைகள் இனி  கடுமையாகவே இருக்கும்.  அதனை எப்படி மீறுவது என்பதையும் அவர்கள் புரிந்து வைத்திருப்பார்கள்!  இதெல்லாம் அவர்களுக்குப் புதிதா!

இத்தனை ஆண்டுகள் அனுபவித்தீர்கள். அது போதும். இது அரசாங்கத்தின் முடிவு.. மதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.  அது தான் அனைவருக்கும் நல்லது!

Tuesday, 19 November 2024

கல்வி அமைச்சரை சந்தித்தனரா?

 

                            கல்வி மறுக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் பெண்கள்

சமீபத்தில் ஆப்கானிஸ்தான் நாட்டின் குழு ஒன்று நமது நாட்டின் கல்வி அமைச்சரைச் சந்தித்திருக்கிறது.

அந்தச் சதிப்பு ஏன் இரகசியமாக வைக்கப்பட்டிருந்தது  என்பதில் தெளிவில்லை.  ஏன்,  அவரின் துணை அமைச்சருக்கே  அவர்களின் வருகைத் தெரிவிக்கப்படவில்லை  என்பதும்  கேள்விக்குறி.  ஒரு வேளை மக்களின் எதிர்ப்புக்குரல்  ஒலிக்கலாம்  என்கிற தயக்கம் அரசாங்கத்திற்கு இருந்திருக்கலாம். ஆனால் இஸ்லாமிய நாடு என்றால்  பிரதமர் அவர்கள் பக்கம் தான் இருப்பார் என்பதும்  நமக்குத் தெரியும். 

எப்படியோ வந்தார்கள் போனார்கள்  அவ்வளவு தான்.  பெரிதாகப் பேச ஒன்றுமில்லை. ஆனாலும் நமக்கும் சில கேள்விகள் உண்டு.  ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசாங்கம் பெண்களை மதிக்காத ஒரு நாடு என்பது நமக்குத் தெரியும்.  பெண்களுக்குக் கல்வி வேண்டாம் என்று  நினைப்பவர்கள் அவர்கள்.  பெண் குழந்தைகளுக்கு ஆரம்ப கல்வியோடு சரி அதற்கும்  மேல் வேண்டாம், தேவை இல்லை என்பது தான் அவர்கள் கொள்கை.   அதனால் இடைநிலைக் கல்வியே பெண்களுக்கு மறுக்கப்பட்ட  ஒரு நாடு.

ஒரு காலகட்டத்தில்  ஆப்கானிஸ்தானில் பெண்கள், கல்வி கற்று, உயர்ந்த நிலையில் இருந்தவர்கள். விமானிகளாக இருந்திருக்கிறார்கள் இன்னும் டாக்டர்களாக, வழக்கறிஞர்களாக - இப்படி கல்விகற்ற சமுதாயமாக இருந்தவர்கள்.  இன்று அவர்களுக்குக் கல்வியே மறுக்கப்பட்ட  ஒரு நிலைமையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இது தான் தலிபான் அரசாங்கத்தின்  கொள்கையாக வைத்திருக்கிறார்கள்.

இன்று கல்வி அமைச்சரை அவர்கள் சந்திருப்பது  ஒரு வேளை நல்ல நோக்கத்தோடு கூட இருக்கலாம். எத்தனை நாள்களுக்குத்தான் பெண்களைப் பூட்டி வைக்க முடியும்?   எல்லாவற்றுக்கும் ஓர் எல்லை உண்டு. அது இப்போது ஒரு முடிவுக்கு வருகிறது  என்று எடுத்துக் கொள்ளலாம். 

நம் நாட்டில் பெண் கல்வி என்பது முக்கியத்துவம் வாய்ந்தது.  கல்வி கற்பதற்கு எந்த எல்லையும் இல்லை.  தடையும் இல்லை.  இந்நாட்டின்  கல்வி முறைகளை தெரிந்து கொண்டு அவர்கள் நாட்டில் அதனை   நடைமுறைக்குக் கொண்டுவர  நினைக்கலாம். அப்படி ஓர் எண்ணம் அவர்களுக்கு வந்தாலே  அதுவே பெரிய வெற்றி!

ஏதோ ஒரு நல்ல நோக்கத்துக்காகத் தான் அவர்கள் கல்வி அமைச்சரைச் சந்தித்திருக்கிறார்கள்.  கல்வியில் மாற்றம்  வரும் என்றால் நமது பாராட்டுகள்!

Monday, 18 November 2024

தகுதி தான் அடிப்படை!

உயர் கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ  ஸம்ரி அப்துல் காதிர்,  உயர் கல்விக் கூடங்களில் மாணவர்களின் சேர்க்கைப் பற்றிய விளக்கத்தைக் கொடுத்திருக்கிறார். 

அதுவும் மருத்துவ மாணவர் சேர்க்கையில் எந்த இனப்ப்பாகுபாடும்  காட்டப்படுவதில்லை என்று வேறு கூறியிருக்கிறார்.  அமைச்சரின் விளக்கத்திற்கு நன்றி கூறுகிறோம்.

நம் இந்திய மாணவர்களைப் போலவே  மலாய் மாணவர்களும்  மருத்துவம்  பயில வாய்ப்பில்லாமல்  பலர் இருப்பதாகக் கூறியிருக்கின்றார் அமைச்சர்.  அவர்கள் அனைவரும்  ஆனைத்துப் பாடங்களிலும் "ஏ" பெற்ற மாணவர்கள்.  இருப்பினும் அவர்களுக்கும் வாய்ப்பில்லை என்பதாகக் கூறியிருக்கிறார். 

இன்றைய நிலையில் மருத்துவம், மருந்தகம் ஆகிய படிப்புகளுக்கு   ஏகப்பட்ட கிராக்கி என்பதில் ஐயமில்லை.   இவைகள் இரண்டுமே பணம் சார்ந்த படிப்புகள்.    அதனால் போட்டிகள் அதிகம் இருக்கத்தான் செய்யும். 

அமைச்சரே சொன்னது போல மருத்துவம் பயில ஒவ்வொரு ஆண்டும்  சுமார் 700 இடங்கள் உள்ளன.  பயில்பவர்கள்  நமது மலேசிய மாணவர்கள்  அப்படியிருந்தும்  நாட்டில் மருத்துவர் பற்றாக்குறை  என்பது எல்லாருக்கும் தெரிந்த விஷயமாகிவிட்டது.  நம் நாட்டில் சேவை செய்ய வருடந்தோறும் 700 மருத்துவர்கள் வெளியாகின்றனர் என்பதால்  மருத்துவர் பற்றாக்குறை எங்கிருந்து வந்தது.?   இந்த 700 "ஏ" பெற்ற மாணவர்கள் கடைசிவரை 700 ஆகத்தான் இருக்கிறார்களா?   அல்லது 70 ஆக குறைந்து விடுகின்றனரா?  அவர்கள் உண்மையில் "ஏ" பெற்றவர்களா அல்லது  மருத்துவம் பயில தகுதியற்றவர்களா? இப்படிப் பல கேள்விகள் உள்ளன.

இந்திய மாணவர்களைப் பொறுத்தவரை மருத்துவம் அவர்கள் விரும்பும் துறை. அதனால் அவர்கள் பாதியில் ஓடுகின்ற பழக்கம் இல்லை. தகுதி தான் அடிப்படை என்றால்  மாணவர்கள் கல்வி முடியும்வரை  இருக்கத்தான் செய்வார்கள்.  அவர்களைப் பிடித்து இழுத்து வந்து படிக்க வைத்தால் அது தோல்வியில் தான் முடியும்.

இதனையெல்லாம் ஒரு  காரணமாக வைத்து இந்திய மாணவர்களை  'ஒதுக்கிவிடுவது'  சரியான போக்கு அல்ல என்பதை அமைச்சருக்கு நினைவூட்டுகிறோம்.  தகுதி தான் அடிப்படை என்றால் தகுதியான மருத்துவர்கள்  ஒருசில ஆண்டுகளில் உருவாகிவிடுவார்கள். அதுவரை பொறுத்திருப்போம்!

Sunday, 17 November 2024

அவைகளும் உயிர்கள் தானே!


பாலஸ்தீன மக்களின் உயிர் முக்கியம் என்பது தவறல்ல. அவர்களுக்காகப் போராடுவது என்பது கூட  தவறல்ல.  அதனையெல்லா யாரும் குறைசொல்லுவதில்லை.

ஆனால் ஒரே ஒரு குறை முக்கியமாக ஒரு சிலருக்குப் பெருங்குறையாகத் தெரிகிறது. தெரு நாய்களுக்கு உணவளிப்பது  பெருங்குறையாம். அது இஸ்லாமிய மதத்திற்கு எதிரானதாம்.  இப்படியெல்லாம் பேசுவதற்கு நம்மிடையே மக்கள் வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றனர்!

உணவகம் நடத்தும் இஸ்லாமியப் பெண் ஒருவர்  இதனையெல்லாம் சொல்லி அழுகின்றார்.   உணவகத்தில் மிஞ்சிப்போகும் உண்வுகளை நாய்களுக்குப் போடுவதை ஒரு சிலர் விரும்புவதில்லை. அவர்கள் அதனை வெறுக்கின்றனர். அவர்களைப் பொறுத்தவரை நாய்கள் என்பது உயிரற்ற ஜடமாக அவர்கள் கருதுகின்றனர்.  அவைகளுக்குச் சோறு போடுவதா என்று அவரை வெளுத்து வாங்குகின்றனர்.

அந்தப் பெண்மணி அவர் வீட்டில் 50க்கும் மேற்பட்ட பூனைகளை  வளர்க்கிறாராம்.  குறை சொல்பவர்கள் அந்தப் பூனைகளுக்கு ஏதேனும் உணவு பொட்டலங்களைக் கொடுக்கிறார்களா அல்லது பணம் தான் கொடுக்கிறார்களா? எதுவுமில்லை!  ஆனால் குறை சொல்ல முன்னுக்கு வந்து நிற்கிறார்கள்!  

பிராணிகளை விரும்புவர்களுக்கு  எல்லாமே உயிர்கள் தான்.  அவர்கள் எதனையும் பிரித்துப் பார்ப்பதில்லை. ஒன்றை நன்றாகக் கவனித்தால் இந்தக் குறைகளை அள்ளி விடுபவர்களிடம் ஒரு  குணம் உண்டு.  பூனைகளை வளர்ப்பார்கள். அவைகளிடம் அளவற்ற அன்பைச்  செலுத்துவார்கள்.  கொஞ்சம் சலிப்பு ஏற்பட்ட பின்னர் தூக்கி,  குழந்தைகளைப் போல் வளர்த்த அந்தப் பூனைகளை,    ஏதோ ஒரு தாமானில் வீசிவிட்டுப் போய்விடுவார்கள்! இதை நாங்கள் அடிக்கடி பார்க்கிறோம். பாவம் அந்தப் பூனைகள். 

மதம்,  நாய்களை வளர்க்கக் கூடாது என்கிறதாம். ஆனால் மதம் விரும்பும் அந்தப் பூனைகளை  ஏன் தெருக்களில்  விட வேண்டும்?  அதற்கு மதம் எதுவும் சொல்லுவதில்லையோ? அந்த உயிர்களை அப்படியே வீசிவிட்டுப் போவதை மதம்  ஏற்றுக்கொள்கிறதா?  பூனைகளோ தெரு நாய்களோ யாரும் வதம்  செய்தால் நீதிமன்றம் நடவடிக்கை எடுப்பதை நாம் பார்க்கிறோம்.  அவைகளுக்குச் சாப்பாடு போடாமல்  கொல்வதும் குற்றம் தான். அனைத்து உயிர்களும் சமம்.

கடவுள் படைத்த தெரு நாய்களின் உயிரும்  நம் மனித உயிர் போன்றது தான்!  அவைகளுக்கு உணவு அளிக்கும் அந்தப் பெண்மணியும் கடவுளின் உயர்ந்த படைப்பு தான்!

Saturday, 16 November 2024

காந்தி! மண்டேலா!

                                            Rajaji  Sanisvara  Nethaji  Rayar
சமீபத்திய ஹீரோ என்றால் அது வேறு யாருமல்ல நமது மாண்புமிகு பினாங்கு,  ஜெலுத்தோங் நாடாளுமன்ற  உறுப்பினர்  ஆர்.எஸ்.என். ராயர் அவர்கள் தான்.

அவர் தான் இப்போது கல்லடிபட்டுக் கொண்டிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்.  அவர் பிரதமர் அன்வாரை, மகாத்மா காந்தி, நெல்சன் மண்டேலா ஆகியோருடன்  ஒப்பிட்டுப் பேசியதை பலர் கடுமையாக விமர்சித்திருக்கின்றனர்.

ஆனால் ஒன்றை பலர் மறந்துவிட்டனர்.   இன்றைய நிலையில் பிரதமர் அன்வார் இந்தியர்களிடமிருந்து கடுமையான விமர்சனத்திற்கு  ஆளாகியுள்ளார். உண்மை தான். இல்லையென்று சொல்லிவிட முடியாது. காந்தி, மண்டேலா ஆகியோருடன் ஒப்பிடும் போது குறைந்தபட்சம் பிரதமர்,  அந்த ஒப்பீடு  தனக்கு ஏற்றதல்ல என்பது அவருக்கே தெரியும். ஆனால் அதுவே அவரின்  தேர்தலுக்கு முன்னர் தனது எம்.ஜி.ஆர். வேடமும் பிரதமர் ஆன பின்னர் தனது நம்பியார் வேடமும்  ஞாபகத்திற்கு  வரத்தான் செய்யும். 

இப்போது அவருக்கு வந்திருக்கும் காந்தி, மண்டேலா பாராட்டு  அவரை கொஞ்சமாவது யோசிக்க வைக்கவே செய்யும்.  நாம் பழையபடி எம்.ஜி.ஆர். ஆகவே மாறுவோம். இந்திய சாமுதாயத்திற்கு நாம் சொன்ன சொல்லை காப்பாற்றுவோம் என்று அவர் யோசிக்கலாம்.  வாய்ப்புண்டு.  உலகின் இரு  மாபெரும் தலைவர்களான  காந்தியையும்,  மண்டேலாவையும் இந்நாட்டில் உள்ள ஒரு நாடாளுமன்ற உறுப்பினரான ராயர்  ஒப்பிட்டுப் பேசுகிறார் என்றால் அதற்காகவாவது தான் இந்திய சமுதாயத்திற்கு நல்லதை செய்ய வேண்டுமே  என்கிற ஊக்குவிப்பாகக் கூட  அதுவும் அமையலாம்.  அவர் தானே நமது பிரதமர், நமது முன்னேற்றமும் அவரின் பொறுப்பு தான். அதனை அவர் தட்டிக்கழிக்க முடியாது அல்லவா?

கெடுதலிலும் நல்லது உண்டு என்பார்கள்.  கசப்பிலும்  இனிப்புண்டு என்கிறார்கள் வைத்தியர்கள்.  ஆக ராயர் சொன்ன  "காந்தி, மண்டேலா"  எடுத்துக்காட்டு   நல்லதாகவே அமையும் என எதிர்பார்ப்போம். 

Friday, 15 November 2024

வேப் சிகிரெட்டுகள் தடை செய்யப்பட வேண்டும்



சிகிரெட்டுகள் எந்த வடிவில் வந்தாலும் அவைகள் விஷத்தைக் கக்குபவைகள் தான். அதில் எந்த கருத்து வேறுபாடில்லை.

வேப் சிகிரெட்டுகள் மாணவர்களிடையே அதிகப் பயன்பாட்டில் இருப்பது ஒன்றும் புதிதல்ல. சமீபத்தில் ஒரு மாணவன் அதனைப் புகைக்கப் போக அவன் மயக்கமடைந்து கீழே விழ,  அது  நாடெங்கும் தீயாய் பரவிவிட்டது. மற்றபடி மாணவர்களுக்கு வேப் என்பது புதிதல்ல.

ஆனால் சமீபகாலமாக வேப் சிகிரெட்டுகள தடை செய்யப்பட வேண்டும் என்கிற குரல்  ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது. அதனை நல்ல நேரத்தில் நல்ல சகுனத்தில் ஒலிக்கும் குரலாகவே பார்க்கிறேன்.  பகாங், சுல்தான் அவர்கள்   வேப் அல்லது மின்னியல் சிகிரெட்டுகள்  தடை செய்யப்பட வேண்டும்  என்று  அந்தப் பிரச்சாரத்தை தொடங்கி வைத்திருக்கிறார். அவரின் அந்தக் கருத்துக்கு  மலேசிய மருத்துவ சங்கமும் ஆதரவு கரம் நீட்டியிருக்கிறது.

மருத்துவர் சங்கம் இந்த சிகிரெட்டுகள் மூலம் மக்களுக்கு   நிறைய  உடல் சார்ந்த பிரச்சனைகள் எழுவதாகக் கூறியிருக்கிறது. சிகிரெட்டுகள் பிடிப்பதில் இது உயர்ந்தது, அது தாழ்ந்தது என்கிற பேதம் எதுவுமில்லை. எல்லாமே நமது உடம்பில்  ஏதோ ஒரு நோயை நோக்கி நகர்கின்றது.  உடனடியாக அது தெரியாவிட்டாலும் நாளடைவில் அது  புற்று நோயாக மாறலாம், இதய நோயாக மாறலாம் - எப்படி வேண்டுமானாலும் மாறலாம்.  அந்த நிலையில் நம்மால் எதுவும் செய்ய முடியாது. மருத்துவர்கள் சொல்லுவதைக் கேட்டுத்தான் ஆக வேண்டும்.

சிகிரெட்டுகளைத் தடை செய்ய  முடியாது.  அது பல்லாண்டுகளாக நம்மிடையே ஒட்டிக்கொண்டு விட்ட  ஒரு விஷம்.  புதிதாக வந்த இந்த நவீன எமன்களைத்  தடை செய்யலாம்.  வேப், மின்னியல் சிகிரெட்டுகள்  நாட்டிற்குத் தேவையற்ற நஞ்சு.  ஒழிக்கப்பட வேண்டிய நஞ்சு.  அதுவும் இளைய சமுதாயத்தினரிடையே உள் புகுந்துவிட்ட நஞ்சு.

எப்படியோ "தடை செய்க" என்று நாம் சொன்னாலும், கத்தினாலும் அதைவிட நாமே அதற்குத் தடை செய்வது தான் பொறுத்தமாக இருக்கும். தடை செய்தால் அது கள்ளத்தனமாக நாட்டுக்குள் புகுந்துவிடும்.

ஆக சிறப்பு,  நம்மை நாமே திருத்திக் கொள்வது தான்!

Thursday, 14 November 2024

D மதிப்பெண் சரியா?


டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் பிரதமர் ஆகி  இதோ வருகிற 24.11.24, ஞாயிற்றுக் கிழமையோடு   இரண்டு ஆண்டுகள் பூர்த்தியாகின்றன.

இந்த இரண்டு ஆண்டுகளில் அவர் தலைமை தாங்கும்  ஒற்றுமை அரசாங்கத்தின் அடைவுநிலை என்ன நிலைமையில் இருக்கிறது   என்கிற விவாதமும் நடந்து கொண்டு தான்  இருக்கிறது.  

தேர்தல் சீர்திருத்தங்களுக்கான அமைப்பு - பெர்சே - (BERSIH)  பிரதமர் அன்வார் தலைமையிலான அரசாங்கத்திற்கு  "D"    என்னும்  மதிப்பெண்ணைத்தான்   கொடுத்திருக்கிறது. அதாவது  ஏதோ பிழைத்துப்போ என்பது போல  45.8 என்னும்  புள்ளிகளைக் கொடுத்திருக்கிறது.

ஆனால் நம் நாட்டில் 45.8 புள்ளிகள் என்றால் மிக உயர்ந்த படிப்புகளையெல்லாம் படித்துவிட முடியும். அதனால் நமது மலேசிய மதிப்பீட்டில்  அது உயர்ந்த மதிப்பெண் தான்.   குறைந்த மதிப்பெண் என்று சொல்லிவிட முடியாது.

பெர்சே யை விட்டு,  மக்களிடையே உள்ள மதிப்பெண்கள் என்னவாக இருக்கும்? ரொம்பவும் மோசமாகத்தான் இருக்கும்.  மக்களைப் பொறுத்தவரை இதுவரை இருந்த அரசாங்கங்களைவிட  இதுவே  மிக மோசமான நிர்வாகத்தைக் கொண்ட அரசாங்கம் என்பது தான்  மக்களின் தீர்ப்பாக இருக்கின்றது. 

பிரதமர் செய்யும் சில நல்ல விஷயங்கள் எதுவும் மக்களுக்குச் சென்றடையவில்லை. அவர்களைப் பொறுத்தவரை  அன்றாடப் பிரச்சனைகள் தான் அவர்களை அழுத்துகின்றன.  குறிப்பாக வேலையில்லாப் பிரச்சனை,  உணவுப்பொருள்களின் விலையேற்றம் - இவைகள் முக்கியமானவை -  மக்களைப் பெரிய அளவில்  பாதிக்கின்றன.

இந்த அளவு பாதிப்பு உள்ள போது  அவர்கள் எப்படி ஒற்றுமை அரசாங்கத்திற்கு  45,8  புள்ளிகள் கொடுப்பார்கள்?   நேரடியாக மக்களிடம் கேட்டால் பெர்சே கொடுக்கும் புள்ளியைவிட அதில் பாதியைத்தான் மக்கள்  கொடுப்பார்கள்!  இது தான் கீழ்மட்ட நிலவரம்.

பிரதமர் செய்துவரும் மாற்றங்கள் மக்களுக்குச் சென்றடைய ஒரு சில ஆண்டுகள் பிடிக்கும்.  அது வரை மக்களிடமிருந்து   தேர்ச்சி பெறும் அளவுக்கு அதிகப்  புள்ளிகளை ஒற்றுமை அரசாங்கம்  எதிர்பார்க்க முடியாது!

Wednesday, 13 November 2024

அதிகார துஷ்பிரயோகம்!

வேலியே பயிரை மேய்கிறது என்று சொன்னால் அது  காவல் துறையினருக்குத்தான்  பொருந்தும்.

நாட்டை அமைதியாக வைத்திருப்பவர்கள்  காவலர்கள்.  காவல் துறையினர் இல்லாவிட்டால்  நாட்டில் சட்டம், ஒழுங்கு என்பதெல்லாம்  கனவாகப் போய்விடும்.

அப்படிப்பட்ட காவல்துறையினரைப் பற்றி பொதுமக்களின் கருத்து என்னவாக இருக்கும்?   இலஞ்ச, ஊழல் மிகுந்த ஒரு துறை என்றால்  அது காவல்துறை தான்.   இன்று பலவகைகளில் காவல்துறை  பழி சுமத்தப்படுகிறது. 

உள்நாட்டினரை விடுங்கள் வெளிநாட்டினர் கூட கையில் காசு இருந்தால் மலேசியாவில் எதையும் சாதிக்க  முடியும் என நம்புகின்றனர்!  காவல்துறை அந்த அளவுக்குப் பேரும் புகழும் பெற்றிருக்கின்றது!

ஆனாலும் காவலர்களைப் பற்றிய கருத்து  இப்போது மாற்றமடைந்து வருகிறது சமீப காலமாக பல காவல்துறையினர் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு  ஆளாகி வருகின்றனர்.    குற்றம் செய்பவர்கள் யாராக இருந்தாலும்  குற்றம் குற்றமே என்று சொல்லுவது போல அவர்களும் தண்டனைக்கு உட்பட்டவர்களே என்று  நடவடிக்கைகள் அவர்கள் மீதும் பாய்கின்றன.  நல்ல செய்தி தான்.

தேசிய போலிஸ் படையின் துணைத்தலைவர் டத்தோஸ்ரீ அயூப்கான்  மைடீன் பிச்சை  அவர்களின் அறிவிப்பின்படி  ஜனவரி முதல் செப்டம்பர் வரை சுமார் 45  போலீஸ்காரர்களும்  அதிகாரிகளும் மலேசிய ஊழல் தடுப்பு  ஆணையத்தால் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். 45 பேர் தானா என்று  நினைத்தாலும் இது ஆரம்பம் தானே என்பதில் மகிழ்ச்சி கொள்ளலாம் இன்னும் கைது நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன.

அதே சமயத்தில்  காவல்துறையினர் அனைவருமே  ஊழல்வாதிகள் என்று முத்திரை குத்திவிட முடியாது.  இலஞ்சம், ஊழலை விரும்பாத சாதாரண நிலையில் இருப்பவர்களிலிருந்து  அதிகாரிகள்வரை  பலர் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களில் கறைபடாத காவல்துறையினர் சுமார் 51 பேருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.

ஆக வருங்காலங்களில் காவல்துறையில் பல சீர்திருத்தங்கள்  நிகழும் என்று எதிர்பார்க்கலாம். நல்லது நடக்கும் எனவும் எதிர்பார்க்கலாம்.

                                                                                                                                         

Tuesday, 12 November 2024

இது ஆபத்து என்பதைத்தவிர வேறு என்ன?

பள்ளி மாணவர்கள் எதனை நோக்கி நகர்கின்றனர்?  ஒன்றும் புரியவில்லை.

செனற வாரம் தான் ஒரு மாணவன் பள்ளி  மேல் தளத்திலிருந்து  கீழே விழுந்ததைப் படித்தோம்  அது வேப் சிகிரெட் பிடித்ததனால் வந்த விபத்து.  அதுவும் பள்ளி மாணவர்களுக்கு ஏதோ  ஒரு சமிக்ஞையைக் காட்டுகிறது என்று தான் சொல்ல வேண்டும். 

இதோ இப்போது ஒரு பள்ளி மாணவி, இரண்டாம் பாரம் படிக்கின்ற மாணவி,  அவளுக்கு என்ன துன்பமோ துயரமோ, தெரியவில்ல  பள்ளியின் எட்டாவது மாடியிலிருந்து விழுந்து தற்கொலை செய்து கொண்டாள்.  அவள் எழுதி வைத்த கடிதத்தில்  தனது பள்ளி பாடங்களில் ஏற்பட்ட மன அழுத்தம்  காரணமாகவே தான் இந்த முடிவுக்கு வந்ததாக அவள் எழுதியிருந்தாள்.

நமக்குள்ள கவலை எல்லாம்  இது போன்ற செயல்கள் எல்லாம் மற்றவர்களுக்கு, மற்ற மாணவர்களுக்கு, ஓர் எடுத்துக்காட்டாக  அமையுமோ என்கிற பயம் தான்.  இத்தோடு முடிந்தால் அதனை மறந்துவிடலாம். ஆனால் தொடர்ந்தால்?    அது தான் நமக்குப் பயத்தை ஏற்படுத்துகிறது.

பள்ளியின் சுற்றுச்சூழல் எப்படியோ நமக்குத் தெரியவில்லை.  எங்களது காலத்தில்  அப்படியெல்லாம் ஏதோ  குறைகள்  இருந்ததாக நாம் சொல்ல முடியாது.  ஆனால் அப்போதெல்லாம் இப்போது உள்ளது போல் மிக உயர்ந்த மாடி கட்டடங்கள் இருந்ததில்லை.   அதனால் தற்கொலை எண்ணங்கள் வந்ததில்லை.  இன்றைய நிலையோ வேறு. எட்டு மாடி கட்டடம் என்பது கூட இப்போது தான் எனக்குத் தெரிய வருகிறது. இது கூட ஏதோ ஒன்று இரண்டு தான் நாட்டில் இருக்கும் என நம்புகிறேன்.

எது எப்படி இருந்தாலும்  மாணவர்களின் இது போன்ற செயல்கள் நாட்டிற்கு நல்லதல்ல.  மன அழுத்தம் என்று சொல்லி தொடர்ந்து நடக்கலாம். அல்லது பலவேறு காரணங்களைச் சொல்லியும் நடக்கலாம்.

இதற்குப் பள்ளிகள் தான் பொறுப்பு ஏற்க வேண்டும்.  மாணவர்களின் தேவைகளை அறிந்து, அவர்களைப் புரிந்து  நடந்து கொள்ள வேண்டும். பாடங்கள் கடினம் என்பதைவிட அதனைச் சுலபமாக்க  வழிவகைகள் காண வேண்டும்.  பள்ளிகளின் சுற்றுச்சூழல் சரியாக இருந்தால்  இப்படியெல்லாம் நடக்க வாய்ப்பில்லை.

எப்படியோ மாணவர்களின்  எதிர்காலம் நமக்கு முக்கியம். நல்லதே நடக்கும் என நம்புவோம்.


கங்குவா படத்திற்கு ஏன் இந்த நிலைமை?


 கங்குவா என்பது ஒரு தமிழ் திரைப்படம்  அவ்வளவு தான். பிடித்தால் பாருங்கள் பிடிக்காவிட்டால் பார்க்காதீர்கள்!  ஒரு சினிமா படத்தைப் பற்றி வேறு ஏதும் அபிப்பிராயம்  சொல்லுவதற்கு  என்ன உண்டு? 

ஆனால் ஒரு சிலரின் நடவடிக்கைகள் நம்மை ஆச்சரியப்படுத்துகின்றது என்பது மட்டும்  உண்மை. நாம் என்ன சினிமாவிற்குப் புதியவர்களா?  நாம் சினிமா பைத்தியங்கள் என்பதை ஊரே அறியும்.  அதனால் தான் சினிமா நடிகர்களையே  முதலமைச்சர்களாக  மாற்றி வைத்திருக்கின்றோம்.

அப்படிப்பட்ட நாம் எத்தனையோ சினிமா படங்களைப் பார்த்திருக்கின்றோம். அதில் தோல்விப் படங்களுக்கு என்ன கணக்கா வைத்திருக்கிறோம்?  தோல்வி என்றால் தோல்வி தான். தோல்விப் படங்களை ஏற்றுக்கொண்டு தானே இருக்கிறோம்.

எந்த ஒரு தோல்விப்படத்திற்கும்  வராத கோபம் ஏன் இந்தப் படத்திற்கும் மட்டும் வந்திருக்கிறது?  படம் வந்து முழுமையாக ஒரு நாள் கூட ஆகாத நிலையில் அப்படி என்ன தான் இந்தப்படத்தின் மீது  அப்படி ஒரு கோபம்? படம் தோல்வி என்றால் உண்மையில் படத்தை தயாரித்த நடிகர் சூரியாவுக்குத் தான் கோபம் வரவேண்டும்.   ஆனால் பாவம் படம் பார்க்கும் இரசிகனுக்குக் கோபம் வரவேண்டிய அவசியமில்லையே!

ஆனால் இந்த அளவு வன்மத்தைக் கக்கிய இரசிகனுக்குக் கோபம் வரவேண்டிய அவசியம் என்ன?  இதன் பின்னணியில் ஏதேனும் அரசியல் உண்டோ என்று தான்  நாம் சந்தேகிக்க வேண்டியுள்ளது.  அதுவும் சூர்யா என்றாலே அவருடைய ஜாதிக்காரர்களே அவருக்கு எதிரிகளாக இருக்கின்றனர். அது ஒரு வகையான அரசியல்! நமக்கு அது விளங்காது! அந்த அரசியல் நாற்றம் நமக்கு வேண்டாம்!

நாம் சொல்ல வருவதெல்லாம் எந்தப்படமாக இருந்துவிட்டுப் போகட்டும். படத்தை ஒரு வாரமாவது ஓட விடுங்கள். விமர்சனம் செய்யுங்கள். சரியோ தவறோ மக்களுக்குப் பிடித்தால்  பார்க்காட்டும். பிடிக்காவிட்டால் படம் தியேட்டரிலிருந்து  தூக்கப்படும். அவ்வளவு தானே?  இதில் என்ன ஆர்ப்பாட்டம் வேண்டியுள்ளது.   இன்னொன்று படம் பார்த்தவர்கள் அனைவருமே  ஒரு கலவையான  விமர்சனத்தைத் தானே வைத்திருக்கிறார்கள்? சிலர் நன்றாக இருக்கிறது என்கிறார்கள் சிலர் நன்றாக இல்லை என்கிறார்கள். இரசிகர்களே முடிவு செய்யட்டுமே.

ஆனால்  ஆர்ப்பாட்டம் செய்பவர்களின்  நோக்கம் சரியாக இல்லை. யாரும் தியேட்டர் பக்கம் வரக்கூடாது  என்பது தான் அவர்களின் நோக்கமாக இருக்கிறது!  சரியில்லையே!

வெகு விரைவில் இவர்களின் அரசியல் வெளிவரும். அதுவரை காத்திருப்போம்!

Monday, 11 November 2024

மாநில அளவில் செயல் படலாமே!

 


இந்திய சமூகத்தில் உருமாற்றத்தைக்  கொண்டுவர அமைக்கப்பட்ட மித்ராவைப் பற்றி தொடர்ந்து சர்ச்சைகள்  வருவதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.

மித்ரா  என்று ஆரம்பிக்கப்பட்டதோ அப்போது இருந்தே சர்ச்சைகளும் ஆரம்பித்துவிட்டன. நாம் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும்.  ஆரம்ப காலத்தில் மித்ரா அல்லது செடிக்  என்கிற பெயரில் இருந்தாலும்  அப்போது அதன் செயலபாடுகள் எதுவும் நிறைவளிக்கவில்லை என்பது நமக்குத் தெரியும்.  ஏதோ ஊழல் ஊழல் என்கிற சத்தம் கேட்டதே தவிர அதனையெல்லாம் நம்மால் உறுதிப்படுத்தப்பட முடியவில்லை.

அதனால் தான் இப்போது பலவகைகளில் இந்தியர்கள் மித்ராவுக்கு நெருக்குதல்கள் கொடுக்க ஆரம்பித்துவிட்டனர். சும்மா இருந்தால் எதுவும் நடவாது என்பதைப் புரிந்து கொண்டனர்.  இப்போது நாலாபுறமிருந்தும்  குறைகூறல்கள் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கின்றன. நல்லது தான். இல்லாவிட்டால்  இவர்கள் எதையும் அசைக்கப் போவதில்லை.

இப்போது உள்ள மித்ரா நடைமுறையை மாற்ற வேண்டும் என்றே தோன்றுகிறது.  மித்ரா ஒவ்வொரு மாநிலத்திலும் தனது கிளைகளை அமைக்க வேண்டும். அப்போது தான் மக்கள் எளிதாக மித்ராவை அணுக வழி பிறக்கும்.  தொலைபேசிகளை ஒரு புறம் ஒதுக்கவிட்டு நேரடியாக இந்திய வியாபாரிகளை மித்ரா சந்தித்து அவர்களுக்கு ஏற்றவாறு  செயல்பட முடியும்.  

இந்திய வியாபாரிகளுக்கு உதவுவது தான் மித்ராவின் நோக்கம். கோலாலம்பூரிலிருந்து கொண்டு மக்களைச் சந்திப்பது என்பது ஆகாத காரியம்.  மாநிலங்களிலிருந்து செயல்படுங்கள்.வியாபாரிகளும் உங்களைத் தேடி வருவார்கள். நீங்கள் ஒரே ஒரு இடத்தில் தலைமையகத்தை அமைத்துக் கொண்டு   "அனைவரும் இங்கே வாருங்கள்" என்று அழைத்தால்  எதுவும் ஆகப்போவதில்லை.  மாநில ரீதியில் என்றால் வியாபாரிகளின் நிலையை நீங்கள் புரிந்து கொள்ளலாம்.

மித்ரா வியாபாரிகளுக்காகத்தான்  உருவாக்கப்பட்டது.  நீங்கள் உதவ வேண்டும் என்கிற அக்கறை உங்களுக்கு இருந்தால்  நீங்கள் கொஞ்சம் கீழே இறங்கித்தான் வரவேண்டும். இடையே துணை அமைச்சர் ரமணன் மித்ராவின்  பாதையையே  மாற்றிவிட்டார். எப்படியோ இப்போதே நீங்கள் மாற்றிக்கொள்ள வாய்ப்புண்டு. இந்தியர்கள் வியாபாரத்தில்  வளர வேண்டும் என்கிற நோக்கத்திலிருந்து மித்ரா தனது பாதையை மாற்றிக்கொள்ளக் கூடாது.

மித்ரா மாநில அளவில் செயல்பட்டால் இந்தியர்களின் ஆத்ரவு பெருகும்  என்பதில் சந்தேகமில்லை.

Sunday, 10 November 2024

இனி வாய்ப்பில்லை ராஜா!

                                                                   கல்வி அமைச்சர்
கல்வி அமைச்சு இத்தனை ஆண்டுகாலமாக நடைமுறையில் இருந்த பரிட்சை முறைகளை மாற்றி அமைத்துவிட்டது என்று தான்  நாம் நம்ப வேண்டியுள்ளது.

பரிட்சைகளே வேண்டாம் கடைசி ஐந்தாம் பாரம் வரை படித்துக் கொண்டே போங்கள், அது தான் சிறந்த  கல்வி  முறை  என்கிறது கல்வி அமைச்சு.  நாம் 'படி படி'  என்று பிள்ளைகளை வற்புறுத்திப் படிக்க வைக்கும் முறையை காலம் காலமாக கையாண்டு வருகிறோம்.  

இதோ கல்வி அமைச்சர் "இனி பரிட்சைகள் இல்லை"  என்று கல்வி அமைச்சர் அறிவித்துவிட்டார்.  கல்வியாளர்கள் தான் இது போன்ற முடிவுகளுக்கு வருகிறார்கள்.  அதனை வைத்துத்தான் கல்வி அமைச்சும் செயல்படுகிறது.

யார் யாரையும் குற்றம் சொல்ல வழியில்லை.  கல்வியாளர்கள் தான் வழிகாட்டுகிறார்கள்.  நமக்கு எது அறிவுகெட்டத்தனமாகத் தெரிகிறதோ அதுவே கல்வியாளர்களுக்கு  அறிவார்ந்த செயலாகத்  தெரிகிறது.

பல நாடுகளில் உள்ள கல்வி முறைகளை வைத்துத்தான்  நம் நாட்டிலும் அதே முறைமைகளை  அறிமுகப்படுத்துகின்றனர்.  ஆனால் மற்ற நாடுகளில்  உள்ள நிலைமை வேறு.  இங்கோ 'கோட்டா' என்று சொல்லிக் கொண்டு  பூமிபுத்ரா மாணவர்கள் அனைத்துத் துறைகளிலும் கல்லூரிகளை அடைத்துக் கொள்வார்கள்!   ஆனால் இந்திய மாணவர்கள் தகுதி அடிப்படையில்  மட்டுமே வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவார்கள்.  எத்தனை தான் கல்வியில் மாற்றங்கள் வந்தாலும்  பூமிபுத்ராக்களின் நிலைமையில் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை.. ஆனால் இந்திய மாணவர்கள் தகுதி அடிப்படையில் தான்  தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இங்கு தான் இந்திய மாணவர்கள் பின்தள்ளப்படுவார்கள்  என்று அச்சமுற வேண்டியுள்ளது.

எப்படியோ கல்வியாளர்கள் எடுக்கும் முடிவை நாம் ஏற்றுக்கொள்ளத் தான்  வேண்டும்.  அதே வேளையில்  பெற்றோர்களின் ஆலோசனைகளையும்  கல்வி அமைச்சும் செவிமடுக்கத்தான் வேண்டும். நம்மால் எது சரி, எது பிழை  என்று தீர்மானிக்கும் நிலைமையில்  நாம் இல்லை.

Saturday, 9 November 2024

கல்வி கடன் கட்டியபாடில்லை!


இன்றைய காலகட்டத்தில் கல்வி என்பது பெரும் வியாபாரமாக மாறிவிட்டது  என்பது நமக்குத் தெரியும்.

ஏழைகளுக்கு எட்டாத கனியாக  கல்வி மாறிவிட்ட நிலையில்  அரசாங்கமே அந்த நிலையை மாற்ற எடுத்த முயற்சி தான் கல்விக் கடன் என்பது.  அரசாங்கம் கொடுத்த  கடன் உதவியியால்  தான்  இன்று  பல ஏழை மாணவர்கள் பட்டதாரிகளாக மாறி இருக்கின்றனர்  வாழ்க்கையை வளப்படுத்திக் கொண்டனர். தங்கள் நிலையை உயர்த்திக் கொண்டனர்.

ஆனால் அப்படிக் கடன் பெற்று, இன்று நல்ல நிலையில் இருக்கும் அந்த மாணவர்கள் கல்விக்காக வாங்கிய அந்தக் கடனைத் திரும்பக் கட்டுகிறார்களா என்று பார்த்தால்  நமக்கும் வருத்தம் தான்  வருகிறது. பலர் கட்டுவதில்லை என அறியும் போது  நமக்கும் வேதனை  அளிக்கத்தான் செய்கின்றது.  

இது பொறுப்பற்றத் தனம்  என்று சொல்லுவதைத் தவிர  வேறு என்னவென்று சொல்லுவது?  தனது நிலையை உயர்த்திக் கொண்ட பின்னர் ஏறி வந்த ஏணியை உதைத்துத் தள்ளுவது தான்  இன்றைய வாழ்க்கை முறை. அதைத்தான் தவறாமல் செய்கின்றனர்  இன்றைய தலைமுறை.  இவர்களுக்கு மாபெரும் வழிகாட்டி என்றால் அது அரசியல்வாதிகள் தான்!

அவர்கள்,  ஒரு கணம் சிந்தித்துப் பார்த்தால் இப்படிச் செய்வது மாபெரும் குற்றம்  என்பது அவர்களுக்கே புரியும். வருங்காலங்களில் உயர்கல்வி கற்க வரும் இன்னும் பல  ஏழை மாணவர்களுக்கு உதவுவது அரசாங்கத்தின் கடமை.  ஆனால் மாணவர்கள் இப்படிக் கடனைத் திரும்ப செலுத்தாமல்  இருந்தால் அரசாங்கம் எப்படி உதவ முடியும்?  உயர் கல்வி அமைச்சர்   ஸம்ரி அப்துல் காடிர் நாடாளுமன்றத்தில் கொடுத்த பதிலில் சுமார் 320 கோடி வெள்ளி கடன் இன்னும் திரும்பச் செலுத்தப்படவில்லை  என்பதாகக்  கூறியிருக்கிறார்.

மாணவர்கள் என்ன கல்வி கற்று என்ன பயன்? அவர்கள் திரும்பச் செலுத்தவில்லை என்றால் இன்னும் வருங்காலங்களில் பல ஏழை மாணவர்கள் உயர் கல்வி கற்பதில் சுணக்கம் ஏற்படுமே என்கிற அக்கறை அவர்களுக்கு இல்லையே.  வருத்தமாகத்தான் இருக்கிறது.  அவர்கள் கற்ற கல்வி பயனிக்கவில்லையே என்று தான் தோன்றுகிறது!

நாம் சொல்ல வருவது எல்லாம்: கற்ற கல்வியின் கடனைக் கட்டுங்கள். கட்டுப்பாடோடு வாழுங்கள். அவ்வளவு தான்!

Friday, 8 November 2024

வேப் புகைத்ததால் வந்த வினை!


 பொதுவாகவே புகைத்தல் என்பது கேடு.  அது வேப் ஆக இருந்தாலும் சரி, சாதாரண சிகிரெட்டாக இருந்தாலும் சரி அல்லது விலை உயர்ந்த   ஹவானா சுருட்டாக இருந்தாலும் சரி,  உடலுக்குக் கேடு கேடு தான். அதில் எந்த சமரசமும் செய்துகொள்ள வாய்ப்பில்லை.

கேடு என்று  சொல்லுகின்ற மருத்துவர்களே  புகைப்பதை விட்டுவிடத் தயாராக இல்லை  என்கிற போது   மற்றவர்களைச் சொல்லிப் பயனில்லை.

அதுவும் மாணவரிடையே இப்படி  ஒரு பழக்கம் இருந்தால் யார் என்ன செய்ய முடியும்?  சில  மாணவர்கள் தெரிந்தே செய்கிறார்கள், பலர் மறைவாகச் செய்கிறார்கள்.  ஆசிரியரே செய்யும் பொழுது  மாணவர்கள் செய்யலாமலா இருப்பார்கள்?

இன்று பள்ளிகளில் மாணவரிடையே புகைப்பது என்பது  சர்வ சாதாரணமாக  நடப்பது தான். பெர்லீஸ், கங்காரில் நடந்த சம்பவமும் எப்போதும் போல நடப்பது தான்.  ஆனால் அந்த மாணவன்  மேல் தளத்திலிருந்து  கீழே விழுந்தான்  என்பதால் தான் செய்தியாயிற்று. மற்றபடி  மாணவர்கள் புகைப்பது ஒன்றும் புதிதல்ல.

இது போன்ற சம்பவங்கள் பல வெளியே வருவதில்லை.  நிர்வாகங்கள் அனைத்தையும் மறைத்து விடுகின்றன. பள்ளிகளுக்குக் கெட்ட பெயர் வரும்  என்பதை மறைக்க விரும்புகிறார்களே தவிர மணவர்களைத் திருத்துவதற்கான முயற்சிகள் எதுவும் நடப்பதில்லை மாணவர்கள் திருந்துவார்கள் என்கிற நம்பிக்கையும் நிர்வாகத்திற்கும் இல்லை!

எப்படிப் பார்த்தாலும் புகைப்பிடிப்பது என்பது சிறியவர்கள், பெரியவர்கள்  அனைவருக்குமே ஆபத்தானது.  புற்றுநோய் வருவதற்கான சாத்தியங்கள் உண்டு  என்கிறார்கள் மருத்துவர்கள்.  அதுவும் பள்ளிகாலத்திலேயே புகைப்பிடித்தால்  அவர்களுக்கு எந்த வயதில் எந்த வியாதி வரும் என்று அனுமானிக்கக் கூட வழியில்லை.

புகைப்பிடிப்பதின் ஆபத்தைப்பற்றி இன்னும் அதிகம் விழிப்புணர்வு மாணவர்களுக்குத் தேவை  என்பதைத்தான் கங்கார் பள்ளியில் நடந்த சம்பவம் நமக்கு நினைவுறுத்துகிறது. அந்த மாணவன் புகைப்பிடித்தான் அதனால் மயங்கி கீழே விழுந்தான்.  அவனுக்கு இது முதல் முயற்சியாக இருக்கலாம்.

பள்ளிகள் அலட்சியம் காட்டாமல் இன்னும் அக்கறையோடு செயல்பட வேண்டும்  என்பதே நமது பிரார்த்தனை.

Thursday, 7 November 2024

அரசியல் வேண்டாம், நண்பரே!

                                      சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர்

sசமீபகாலமாக சுங்கை சிப்புட், நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு கேசவன் பற்றியான செய்திகள் பரவலாகப் பேசப்படுகின்றன.

இத்தனை நாள்கள் இவர் எங்கிருந்தார், என்ன செய்தார் என்கிற சத்தமே இல்லாமல்  திடிரென  "இவருக்கு என்ன ஆயிற்று?"  என்று அனைவரும்  கேள்வி கேட்கின்ற நிலைமைக்கு உள்ளாகியுள்ளார்.

சுருக்கமாகச் சொன்னால்  நாடாளுமன்றத்தில் இவர் பேசிய பேச்சு அனைவரின் பேசுபொருளாக ஆகியிருக்கிறது. அடுத்த ஆண்டு பட்ஜெட்டில்  போதுமான நிதி இந்தியர்களுக்கு ஒதுக்கப்படவில்லை என்பது பொதுவான கருத்து. அதனால் நிதியை இன்னும்  கொஞ்சம் அதிகரியுங்கள்  என்று நாடாளுமன்றத்தின் உள்ளும்  வெளியிலும் பலர் குரல் எழுப்புகின்றனர்.

ஆனால் நம் கேசவன் அவர்களோ  அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட  இப்போதே பதியம் போடுகிற வேலையில்  இறங்கிவிட்டார்  என்பது நமக்குப் புரிகிறது.  அதாவது "கோடரிக்காம்பு" என்பார்களே அந்த வேலை!  என்ன தான் சொல்லுகிறார்?   "போதுமான நிதி இந்தியர்களுக்காக ஒதுக்கப்பட்டிருக்கிறது என்பது தான் அவர் சொல்ல வருவது.  அதற்காக பிரதமர் அன்வாரை அவர் பாராட்டியுமிருக்கிறார். 

இந்தியர்களின் பிரச்சனையை  இவர் அறியவில்லை. மாண்புமிகு பிரபாகரனே மித்ராவுக்குப் போதுமான நிதி இல்லையென்று  கூறியிருக்கிறார்.  இன்னும் பலரும் இதே கருத்தையே சொல்லியிருக்கின்றனர்.  ஆனால் இவரோ நாடாளுமன்றத்தில் சவால் விடுகிறார்.

இவரைப் போன்ற கோடரிக்காம்புகளை     நாம் என்ன செய்வது?  ஒன்றும் செய்ய முடியாத இடத்தில் அவர் இருக்கிறார்.  நமக்குத் தெரிந்ததெல்லாம்  அடுத்த தேர்தல்வரைக் காத்திருக்க வேண்டும். அதைத்தான் செய்ய முடியும்.  இவருக்கு இந்தியர்களின் நிலை தெரியாவிட்டால்  வாயை மூடிக்கொண்டிருக்கலாம்.  அப்படியும் இருக்க முடியவில்லை.  ஆனால் பிரதமரிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும்  என்கிற நிலைக்கு வந்துவிட்டார்!

வெறும் அரசியல் பேசுவதை கேசவன்  நிறுத்த வேண்டும் என்பது தான் நாம் அவரைக் கேட்டுக்கொள்வது.  பார்ப்போம்!

Wednesday, 6 November 2024

அட! நாடாளுமன்றத்திலுமா?

நாட்டின் நிலைமையைப் பாருங்கள். எத்தனையோ உணவகங்கள் எங்கெங்கோ மூடப்படுகின்றன  என்பதை நாம் படித்துக் கொண்டும் கேட்டுக் கொண்டும், கண்முன்னே பார்த்துக் கொண்டும் இருக்கிறோம்.

ஆனால் நாட்டை ஆளும் நாடாளுமன்றத்திலேயே இப்படி ஒரு அதிசயம் நிகழும் என்று நாம் நினைத்துப் பார்த்ததில்லை.  நாடாளுமன்றத்தில்  கூட இப்படியெல்லாம் நடக்குமா என்று நாம் கற்பனைக் கூட செய்தததில்லை.

நாடாளுமன்றத்தில் உள்ள பணியாளர்கள்,  நாடாளுமன்ற உறுப்பினர்கள்  இப்படித்தான்  உணவுகளை உட்கொள்வார்களோ என அறியும் போது நமக்கே அதிர்ச்சியைத் தருகிறது!  நாடாளுமன்றம் என்பது நாட்டை ஆளுகின்ற  அதிகாரப்பீடம். அது எப்படி இருக்க வேண்டும் என்று நாம் சொல்ல வேண்டியதில்லை.  அங்கு உள்ள ஓர் உணவகம் சுத்தமின்றி, சுகாதாரமின்றி இருப்பது வெட்கக்கேடான, கேவலமான ஒரு விஷயம்.

அப்படியென்றால் நாடாளுமன்ற உறுப்பினர்கள்  சுத்தத்தையோ, சுகாதாரத்தைப் பற்றியோ கவலை இல்லாதவர்கள் என்று தான் நினைக்க வேண்டியுள்ளது.  நாட்டில் இலஞ்ச ஊழலை ஒழித்து, நாட்டை சுத்தம் பண்ண வந்தவர்கள் என்று தான் நாம் இவர்களைப்பற்றி நினைத்து வந்தோம்.  ஆனால் தங்கள் கண்முன்னே சுத்தமற்ற, சுகாதாரமற்ற உணவுகளை உண்பவர்களான இவர்கள் எங்கே நாட்டில் உள்ள அசுத்தங்களை ஒழிக்க முடியும்?  

நாட்டில் நடக்கும் அசிங்கங்களைப் பார்க்கும் போது  இவர்கள் அது பற்றியெல்லாம் கவலைப்படுவார்கள், தீர்த்து வைப்பார்கள்  என்கிற  எண்ணமே நமக்கு  ஏற்பட வாய்ப்பில்லை.   அவர்களைச் சுற்றி நடக்கும் அசுத்தங்களையே  அவ்ர்கள்  கண்டுகொள்ளவில்லை  என்றால்  நாட்டில் நடக்கும் அசுத்தங்களையா அவர்கள் கண்டுகொள்ளப் போகிறார்கள்! 

என்ன தான் சொன்னாலும் நம்மால் சமாதானம் அடைய முடியவில்லை. அந்த இடத்தில் ஒரு சிற்றுண்டிச்சாலை  சுகாதாரமற்ற சூழலில் இயங்குகிறது என்றால்  அதனை நடத்துபவர் யாராக இருக்கும்?  அவரும் ஏதோ ஒரு வகையில் நாடாளுமன்ற உறவுகளாகத்தானே இருக்க வேண்டும்?   வெளியே பல குறைபாடுகள் இருக்கலாம்.  ஆனால் அதிகாரபீடத்தில்  அது இருக்கக் கூடாது.

நமக்கு வருத்தம் தானே தவிர அதைத்தான் இங்குப் பதிவு செய்கிறோம். எக்கேடு கெட்டாவது போங்கள்!

Tuesday, 5 November 2024

இனி 'உலக நாயகன்' வேண்டாம்!

             
தமிழ் சினிமாவின்  முதன்மை  கதாநாயகனாக விளங்கும் கமல்ஹாசன் "இனி  என்னை  உலக நாயகன்" என்று அழைக்க வேண்டாம்  என தனது  X  தளத்தில் அறிவித்திருக்கிறார்.

நம்மைப் பொறுத்தவரை தமிழ் சினிமாவில் இது போன்ற பட்டங்களைப் பெரும்பாலானோர் விரும்பத்தான் செய்கின்றனர்.  இன்றும் இது போன்ற பட்டங்களுக்கு மரியாதை இருக்கத்தான் செய்கின்றது.

ஏற்கனவே 'தல'  இனி எனக்கு வேண்டாம் என்று அஜித்குமார்  கூறிவிட்டார்.  இன்னும் பல கதாநாயகர்களுக்குப் பலவிதமான பட்டங்கள். அது தேவையோ இல்லையோ, பொருத்தமானதோ பொருத்தமற்றதோ  ஆனாலும் அவர்கள் அந்தப் பட்டங்களை விடத் தயாராக இல்லை.  அவர்களிடம் கேட்டால் இரசிகர்கள் மேல் குற்றம் சுமத்துவார்கள்.  "நாங்கள் விரும்பவில்லை, இரசிகர்கள் தான் அதனைப் பயன்படுத்துகின்றனர்" என்று கூறுவதும் உண்டு.

நமது கமல்ஹாசனை எடுத்துக் கொண்டால் "உலக நாயகன்" என்பது அவருக்குப் பொறுத்தம் தான்.  நடிப்பில் பல எல்லைகளைத் தொட்டவர்.  அவரை மிஞ்ச ஆளில்லை என்பதை நான் சொல்லித்தான் தெரியவேண்டும் என்பதில்லை.  அவருக்கு நிகர் அவர் மட்டும் தான். இப்படி ஒரு முடிவை அவர் ஏன் எடுத்தார் என்பது  நமக்குப் புரியவில்லை. ஆனாலும் அவரின் முடிவை நாம் மதிக்கிறோம்.  இரசிகர்களும் மதிக்க வேண்டும்.

கமல் அரசியலிலும் இருக்கிறார்.   இது போன்ற பட்டங்கள்  அரசியலில் அவருக்குப்  பாதிப்பை ஏற்படுத்தலாம் என்கிற  சாத்தியமும் உண்டு. காரணம் உலக நாயகன் என்கிற போது அது சினிமா சம்பந்தப்பட்டதாகத் தெரியவில்லை.  அதனை எதில் சேர்ப்பது என்பதும் புரியவில்லை. கொஞ்சம் சிக்கலும் உண்டு.  அவர் அரசியலில் இல்லாவிட்டால்  ஒரு வேளை இப்படி ஒரு முடிவை எடுத்திருக்க மாட்டார்.

ஆனாலும் அவரின் வேண்டுகோளை நாம் மதிப்போம். இனி அவர்  கமல் அல்லது கமல்ஹாசனாக இருக்கட்டும்.

Monday, 4 November 2024

அலட்சியம் வேண்டாம்!

நாய்களை அலட்சியமாகப் பார்ப்பவர்கள் உண்டு. அதே சமயத்தில் நாய்களைக் குழந்தைகளாகப் பார்ப்பவர்களும் உண்டு. ஏன்? நாய்களை 'நாய்' என்று சொன்னாலும் கோபப்படுகிறவர்களும் உண்டு.

உண்மையில் நாய்கள் ஓர் அற்புதமான பிராணி. நன்றிக்கு உதாரணம் நாய் தான்.  சமீபத்தில் காலஞ்சென்ற இந்திய தொழிலதிபர் ரத்தன் டாட்டா,    தான் வளர்த்த நாய்க்குக் கூட அதன் வளர்ப்புக்கென ஒரு தொகையை தனது உயிலில்  ஒதுக்கியிருக்கிறார்.

ஆனால் நாய்களின் அருமைத் தெரியாத சில எருமைகள் நாய்களை எப்படியெல்லாம் கொன்று குவிக்கின்றனர் என் அறியும் போது நம்மை அறியாமல் கண்ணீர் வழிகிறது.

அவைகள் தெரு நாய்கள் என்பது நமக்குப் புரிகிறது. அவைகளையும் ஓர் உயிர் என்று தான் பார்க்க வேண்டும். அவைகளைச் சுட்டுத்தள்ளினால்  அப்போதே அவைகளின் உயிர் போய்விடும். வேறு வகைகளில்  அவைகளைச் சித்திரவதைகளுக்கு உட்படுத்துவதும், சாகடிப்பதும், அடித்துக் கொல்லுவதும்  நம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. வன்முறையைக் கையாள்பவர்கள் கொலைகாரர்களாகத்தான்  நாம் நினைக்க வேண்டியுள்ளது.

சமீபத்திய ஒரு நிகழ்வில் நாய்களைக் கொன்று,  அவைகளைப் புதைக்கும் போது,  உயிரோடு  அதன் குட்டிகளையும் கொஞ்சம் கூட ஈவு இரக்கம் பார்க்காமல்,  புதைத்திருக்கின்றனர்.  அவர்கள் அரசாங்க ஊழியர்கள்.  தங்களுக்கு வேறு வழி தெரியவில்லை என்கிறார்கள்.  ஆனால் உயிரோடு உள்ள  ஜீவன்களைப் புதைப்பதற்கு எப்படி மனம் வந்தது என்பது நமக்குப் புரியவில்லை.

தெருநாய்களைக் கொல்லுவதற்கு இது தான் வழியா  வேறு வழிகளே இல்லையா என்பது நமக்கும் தெரியவில்லை.  மற்ற நாடுகள் இதனை எப்படிக் கையாள்கின்றன என்பது நமக்குத் தெரியவில்லை.  ஆனாலும்  சரியான,  நியாயமான வழிகள் இருக்கத்தான் செய்யும்.

எல்லாமே உயிர்கள் தாம். தெருநாய்கள் எப்படி உருவாகின்றன? இன்று கொஞ்சி கொஞ்சி வளர்ப்பவர்கள்  கொஞ்சம் நாள்களில் அந்த நாய்களைத் தெருவில் விட்டுவிடுகிறார்கள்.  பாவம்! அந்த நாய்கள் தெருவுக்கு வந்ததும் பசி பட்டினியால் வாடுகின்றன.

நாய்கள் தானே  என்கிற அலட்சியம் வேண்டாம். கொஞ்சம் பொறுப்போடு  பார்த்துக் கொள்ளுங்கள்.  இதைத்தவிர வேறு என்ன சொல்ல?  அரசாங்க ஊழியர்களே கொஞ்சம் மனிதாபிமானத்தோடு  நடந்து கொள்ளுங்கள். 

Sunday, 3 November 2024

என்னடா இதே பொழப்பா போச்சு!

ஸ்ரீவடகார பத்ர காளியம்மன் நிர்வாகத்தினர் நில அலுவலகத்தில் மகஜர் அளிக்கின்றனர்

நம் நாட்டில் அரசாங்கத்தில்  பணிபுரிபவர்கள் பலர் கசமுசா வேலை செய்வதில் நிபுணத்துவம் பெற்றவர்களாகவே இருக்கின்றனர்!  அதுவும் குறிப்பாக இந்து  கோவில்கள் என்றால் அவர்களுக்கு கற்கண்டு மாதிரி. சீனர்களின் கோவில்களோ, பள்ளிவாசல்களோ  அவர்களின் கண்களுக்குத் தெரிவதில்லை.  அப்படி ஒரு எளிமையான  கணக்கை அவர்கள் போட்டு வைத்திருக்கின்றனர்!  மற்றவர்களின் கோவில்களில்  கை வைத்தால் செருப்படி விழும் என்பதை அவர்கள் தெரிந்து வைத்திருக்கின்றனர்.

இன்று நம் நாட்டில் பிரச்சனைகள் உள்ள கோவில்களைப் பார்த்தால்  எல்லாமே ஏதோ ஒரு வகையில் மாநில,   நில அலுவலகங்கள் தான் சம்பந்தப்பட்டிருக்கின்றன.  கோவில்களை உடைப்பதில் இவர்களுக்கு ஏன் அவ்வளவு அக்கறை?  துட்டு கிடைத்தால் எவனும் எதையும் செய்வான்! அது தான் தெரிந்த கதையாயிற்றே!  

இன்றைய நிலையில் இந்தியர்கள் பெரும்பாலும் பிரதமர் அன்வாரை ஆதரிப்பவர்களாக இல்லை.  எதை எதையோ பேசுகிறார் ஆனால் உயர்கல்வியில் இத்தனை இந்திய மாணவர்களை   அதிகரித்திருக்கிறேன், இத்தனை புதிய இந்திய வியாபாரிகளை  உருவாக்கியிருக்கிறேன் என்று அவரால் சொல்ல முடியவில்லை.   காரணம் அவர் செய்யவில்லை.

அரசாங்க அதிகாரிகள் செய்கின்ற தவறுகள் எல்லாம்  பிரதமர் மீது தான் விழுகின்றன.  கோவில் இடிப்பா, தமிழ் பள்ளிகளின் ஏதேனும்  பிரச்சனைகளா, வேலை வாய்ப்புகள் இல்லையா மக்கள் என்ன சொல்லுகிறார்கள்? அன்வார் பதவிக்கு வந்த பிறகு தான்  இப்படியெல்லாம் நடக்கின்றன என்று சொல்லுவதை  தவிர்க்க முடியவில்லை.   அவருக்குச் சம்பந்தம் இல்லாமல் இருக்கலாம்  ஆனால் அவர் தான் இந்தியர்கள் மத்தியில் குற்றவாளி ஆகிறார்.

அதுவும் கோவில் பிரச்சனைகள் ஏராளம்.  இப்போது தான் அவைகள் பெரிதுப் படுத்தப்படுகின்றன.  அன்வார் கோவில்களுக்கு எதிரானவர்  என்கிற  தோற்றத்தை ஏற்படுத்துகின்றனர். காரணம் அவரின் ஒரு சில நடவடிக்கைகள்  அப்படியெல்லாம் சொல்ல வைக்கின்றது.

நமக்கும் சீ! இதென்னடா பிழைப்பு என்று சொல்ல வைக்கிறது.  எப்போது பார்த்தாலும் இந்தியர்களை எதிரிகள் என்கிற தோற்றத்தையே ஏற்படுத்துகிறார்களே! என்ன செய்ய?

Saturday, 2 November 2024

ஆஸ்ரமங்களா இவை?

இப்போது நாடெங்கிலும் பலவித ஆஸ்ரமங்கள். தேவை தான் என்பதில்  ஐயமில்லை. ஆனால் நல்ல நோக்கத்தோடு  அவைகள் செயல்படும் போது நமக்கும் மகிழ்ச்சியளிக்கிறது.  பணத்தை  நோக்கமாகக் கொண்டு செயல்படும் ஆஸ்ரமங்களும் உள்ளன.  ஒன்றிண்டு அல்ல பல உள்ளன. எப்படி தான் போனாலும் கடைசியில் பணம் தான்!

ஆகக் கடைசியாக கெடாவில்  உள்ள வயது முதிர்ந்தவர்களுக்கான ஓர் ஆஸ்ரமத்தில் நடந்தவைகளைப் பார்த்திருப்போம். வயதானவர்கள், மனநலம் குன்றியவர்கள்  நடக்க இயலாதவர்கள் என்றும் பாராமல்  அவர்களைச் சங்கலியால்  கட்டிப்போட்டும் அடித்தும் துன்புறுத்தியும் வந்திருக்கின்றனர்.  இதனைக் கண்காணிக்க வேண்டியவர்கள்  கண்ணை மூடிக்கொண்டு காணிக்கையை மட்டும் பெற்றுக்கொண்டு வந்திருக்கின்றனர் என்று தோன்றுகிறது!

ஆனால் அதன் இறுதிக் காட்சிகள் தான் நம்மைப் பதற வைக்கின்றது.   அதனை நடத்தி வந்தவன்  அந்த ஆஸ்ரமத்தில் இருந்த 21 பேரையும் வீதியில் விட்டுவிட்டு ஓடிப்போனான்!  எப்படியோ நல்ல உள்ளங்கள் அவர்களுக்கான மாற்று ஏற்பாடுகளைச் செய்து அந்த முதியவர்களை நிம்மதியான ஒரு இடத்தில் தங்க ஏற்பாடுகள் செய்திருக்கின்றனர்.

ஆஸ்ரமங்கள் நடத்துவது என்பது சாதாரண காரியமல்ல.  கொஞ்சமாவது இரக்கம் வேண்டும். பணம் தான் நோக்கம் என்றால்  இரக்கம் எல்லாம் பறந்து போகும்!

அதனால் தான் சீனர்கள் பணம் வாங்கிக்கொண்டு சேவை செய்கின்றனர். ஏதும் குறைகள் இருந்தால்  அவர்களை நாம் தட்டிக் கேட்கலாம். அவர்கள் குறைகள் இல்லாமல், பிரச்சனைகள் இல்லாமல் பார்த்துக் கொள்கின்றனர். சீனர்கள் முதியோர் இல்லங்களைக் கட்டணங்கள் வாங்கிக் கொண்டு நடாத்துகின்றனர்.  அதனைக் குறை சொல்ல ஒன்றுமில்லை.

ஆனால் இந்தியர்கள் தொண்டு என்கிற  பெயரில் இலவசமாக செய்கிறோம் என்கிற பெயரில்  பணத்தை நோக்கி தான் பயணம் செய்கின்றனர். நிறைய உதவிகள் கிடைக்கின்றன. அதனால் அவர்களின் குடும்பமே ஆஸ்ரமத்தை நடத்துகின்றனர். இதெல்லாம் நமக்குக் கிடைக்கும் கசப்பான அனுபவங்கள். அரசாங்கம் கொடுக்கும் உதவிகளையும் பெற்றுக்கொள்கின்றனர்.  தேவையான உணவுகளையும் அவர்களுக்குக் கொடுப்பதில்லை. 

இது தான் இன்றைய ஆஸ்ரமங்களின் நிலை! நல்லவர்கள் நடத்தும் ஆஸ்ரமங்களை வாழ்த்துவோம்.

Friday, 1 November 2024

வீட்டு பணிப்பெண்கள்

                   
                                           வீட்டு பணிப்பெண்
பொதுவாகவே பல மலேசியர்களின்  வீடுகளிலே  பணிப்பெண்களின்  சேவை மிக முக்கியம்  என்கிற நிலைமையில் தான்  இருக்கின்றனர். காரணம் இவர்களில் பலர் - கணவன் மனைவி -  இருவருமே வேலை செய்து பிழைக்க வேண்டிய சூழல் தான்  நிலவுகிறது.

நாம் அதுபற்றி குறை ஏதும் சொல்லப் போவதில்லை.  ஆனால் வேலை செய்து பிழைக்கும் இவர்கள் தான் தங்களின் வீடுகளில்  வேலை செய்யும் வேலைக்காரப்  பெண்களிடம் எப்படியெல்லாம் அதிகாரம் பண்ணிக்கொண்டு  அட்டுழியம் புரிவதை செய்திகளில் பார்க்கிறோம்.  

நமக்கு வருத்தம் தான்.  நீங்கள் ஒரு நிறுவனத்தில் பணி புரிகிறீர்கள். உங்களின் நலன் காக்க சங்கங்கள்  உண்டு.  தொழிலாளர் அமைச்சு உள்ளது.  உங்களுக்குப் பிரச்சனைகள் வரும் போது  உங்கள் சங்கங்கள் உங்களுக்காகப் போராடும்.

ஆனால் இப்படி வேலையில் இருக்கும் உங்களுக்கு  உங்கள் வீட்டில் பணி புரியும் வேலைக்கார பெண்களுக்கு  நீங்கள் எந்தவொரு சலுகைகளும் கொடுப்பதில்லை.  சலுகைகளை விடுங்கள்.  அவர்களுக்கான ஊதியம் கூட கொடுப்பதில்லை.  உணவும் கொடுப்பதில்லை.  ஏன் அவர்களை மனிதர்களாகக் கூட  மதிப்பதில்லை. அவர்களோ வெளிநாட்டவர்கள்.  அவர்களுடைய கடப்பிதழை வாங்கி வைத்துக் கொள்கிறீர்கள்.  அவர்களை அப்படியே முடக்கிவிடுகிறீர்கள்.  அவர்களை உங்களுக்கு அடிமையாக்கி விடுகிறீர்கள்.  அவர்கள் சோம்பேறிகள் என்று முத்திரையும் குத்திவிடுகிறீர்கள். உடம்பில் காயத்தை ஏற்படுத்தி விடுகிறீர்கள்.

இப்படியெல்லாம் செய்ய உங்களுக்கு உரிமையில்லை என்றாலும்  அதைத்தான் விரும்பி செய்கிறீர்கள். காரணம் அவர்கள் உங்கள் அடிமைகள்  என்கிற முடிவுக்கு நீங்கள் வந்துவிடுகிறீர்கள்.  ஆனால் நேரம் எப்போதும் உங்களுக்குச் சாதகமாக இருக்கப்போவதில்லை.  மாட்டிகொண்டால் உங்கள் பாடு அதோபாடு தான்!

அரசாங்கத்திற்கு நமது வேண்டுகோள் எல்லாம் இந்த நவீன முதலாளிகளைக்  கடுமையான தண்டனைகளுக்கு உட்படுத்த வேண்டும். அவர்கள் பணிப்பெண்களே வேண்டாம் என்கிற அளவுக்குத் தண்டிக்க வேண்டும்.