Saturday, 23 November 2024

மூன்று ஆண்டுகள் தடை!

பள்ளிவாசல்கள் அல்லாத மற்ற வழிபாட்டுத் தளங்களுக்கு  அடுத்து மூன்று ஆண்டுகள்  எந்த நிதி உதவியும் அளிக்கப்படாது என்பது தான் ஆகக்டைசியான பக்காத்தான் அரசாங்கத்தின்  கொள்கையாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அரசாங்கத்தின் முடிவு தான் என்றாலும் சொல்லப்படுவதோ  பிரதமர் அன்வார் தான் இதனைச் செய்கிறார் என்கிற குற்றச்சாட்டு  தொடரத்தான் செய்யும்.  அந்தக் குற்றச்சாட்டிலும் உண்மை இல்லை என்று சொல்லிவிட முடியாது.  அவரின் செயல்பாடுகள் அனைத்தும் இஸ்லாம் சார்ந்தே இருப்பதும்  ஒரு காரணம்.

இனி நிதி இல்லை என்றால் என்னதான் காரணமாக இருக்க முடியும்? நிதிச் சுமை தான் வேறு காரணம் எதுவுமில்லை.  பள்ளிவாசல்கள்  அனைத்தும் அரசாங்கத்தால் கட்டப்பட்டவை. ஒரு செங்கல் கூட  பொது மக்கள் கொடுக்க வேண்டும் என்கிற கட்டாயமில்லை.  அரசாங்கம் செய்யாவிட்டால்  அதனை யாரும் செய்யப்போவதில்லை.  மற்ற வழிப்பாட்டுத் தளங்களின் நிலை வேறு. பொது மக்களின் உதவியோடு தான் பல வழிபாட்டுத் தளங்கள்  இயங்குகின்றன.   நூறு விழுக்காடு அரசாங்க உதவி என்பதாக எதுவுமில்லை.

நூறு விழுக்காடு நிதி உதவி  பெறாத நிலையிலும் கூட பிற வழிப்பாட்டுத் தளங்கள்  இப்போது  பிரச்சனைகளை எதிர்நோக்கத் தொடங்கியிருக்கின்றன.  வருகின்ற மூன்று ஆண்டுகளுக்கு உங்களுக்கு 'நிதி உதவி இல்லை!' என்று அறிவித்துவிட்டது அரசாங்கம்.  இத்தனை ஆண்டுகளில் இது போன்ற அறிவிப்பை எந்தவொரு அரசாங்கமும் இது போன்ற அதிர்ச்சித் தாகவல்களைக் கொடுத்ததில்லை.  

வழக்கம் போல பிரதமர் அன்வார் இந்தியர்களுக்கு எதிரானவர், இந்துக்களுக்கு எதிரானவர்  என்று பழிபோடத்தான் செய்வர். காரணம் இந்தியர்களுக்கு அனைத்தும்  பாதகமாக அமையும் போது  வேறு என்ன சொல்ல  முடியும்? 

இந்த மூன்று ஆண்டு தடை உத்தரவை  மீட்டுக்கொள்ள வேண்டும் என்பதே  நம்முடைய  வேண்டுகோள்.  எங்கெங்கோ கைவைத்தாகி விட்டது  இப்போது  கோவிலிலுமா என்கிற கேள்வி எழத்தான் செய்யும்.  அதற்கு ஏன் இடம் கொடுக்க வேண்டும்?

No comments:

Post a Comment