மாணவர்களுக்கு மகிழ்ச்சி! பெற்றோர்களுக்குப் பிறழ்ச்சி!
கல்வி அமைச்சு அவர்களின் பாரத்தைத் தூக்கி அப்படியே பெற்றோர்களிடம் ஒப்படைத்துவிட்டது! பெற்றோரே! இனி உங்கள் பாடு. ஆசிரியர்கள், அதுவும் தேசிய மொழி பள்ளி ஆசிரியர்கள் கொஞ்சம் அதிகமாகவே சுதந்திரமாக செயல்படுவார்கள்!
ஆனால் தாய்மொழி பள்ளிகளுக்கு இனி சுமைகள் அதிகம். எப்படியாவது மாணவர்களை அடுத்த வகுப்புகளுக்குப் போகும் முன்னர் அவர்களைத் தயார் செய்ய வேண்டும். இப்போதே மாணவர்களைத் தயார் செய்யா விட்டால் எஸ்.பி.எம். தேர்வில் அவர்கள் படுபாதாளத்திற்குப் போக வேண்டி வரும்! அந்தப் பொறுப்பு தாய்மொழி பள்ளிகளுக்கு உண்டு.
மாணவர்கள் கோட்டா முறை அல்லது மெரிட் என்கிற தகுதி முறை எதுவும் நம் மாணவர்களுக்குக் கை கொடுக்காது. நமது மாணவர்கள் தங்களது பாடங்களைப் படித்தே ஆக வேண்டும். கடுமையான உழைப்பைப் போட வேண்டும்.
பள்ளிகளும் முடிந்தவரை ஒவ்வொரு ஆண்டும் நல்லதொரு பாடத் திட்டங்களை வகுத்து செயல்படத்தான் செய்வார்கள். ஆனால் மாணவர்கள் பாடங்களில் கவனம் செலுத்தாமல் இருந்தால் ஆசிரியர்களும் லண்டு கொள்ளமாட்டார்கள்! அதனால் பெற்றோர்கள் பிள்ளைகளின் கல்வியில் அக்கறை காட்டத்தான் வேண்டி வரும். எல்லாப் பழிகளையும் பள்ளிகளின் மீது சுமத்தாமல், "வேலை செய்வதால் எங்களுக்கு நேரமில்லை" என்று சொல்லாமல் பிள்ளைகள் கல்வியில் வெற்றி பெற வேண்டுமென்றால் பெற்றோர்கள் அக்கறை காட்டத்தான் வேண்டும்.
இப்படி ஒரு கல்வி முறை தேவைதானா என்கிற குரல்களும் ஒலித்துக் கொண்டு தான் இருக்கின்றன. கல்வி அமைச்சும் புதிதாக ஒன்றும் செய்துவிடவில்லை. மற்ற நாடுகளில் இது போன்ற கல்விமுறை வெற்றியளித்தால் அதனை இங்கு அறிமுகம் செய்வதால் எதுவும் கெட்டுப் போவதில்லை. நல்லதை நினைத்துத்தான் செய்கின்றனர்.
நல்லதே நடக்கும் என எதிர்பார்ப்போம்!
No comments:
Post a Comment