நாட்டை அமைதியாக வைத்திருப்பவர்கள் காவலர்கள். காவல் துறையினர் இல்லாவிட்டால் நாட்டில் சட்டம், ஒழுங்கு என்பதெல்லாம் கனவாகப் போய்விடும்.
அப்படிப்பட்ட காவல்துறையினரைப் பற்றி பொதுமக்களின் கருத்து என்னவாக இருக்கும்? இலஞ்ச, ஊழல் மிகுந்த ஒரு துறை என்றால் அது காவல்துறை தான். இன்று பலவகைகளில் காவல்துறை பழி சுமத்தப்படுகிறது.
உள்நாட்டினரை விடுங்கள் வெளிநாட்டினர் கூட கையில் காசு இருந்தால் மலேசியாவில் எதையும் சாதிக்க முடியும் என நம்புகின்றனர்! காவல்துறை அந்த அளவுக்குப் பேரும் புகழும் பெற்றிருக்கின்றது!
ஆனாலும் காவலர்களைப் பற்றிய கருத்து இப்போது மாற்றமடைந்து வருகிறது சமீப காலமாக பல காவல்துறையினர் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி வருகின்றனர். குற்றம் செய்பவர்கள் யாராக இருந்தாலும் குற்றம் குற்றமே என்று சொல்லுவது போல அவர்களும் தண்டனைக்கு உட்பட்டவர்களே என்று நடவடிக்கைகள் அவர்கள் மீதும் பாய்கின்றன. நல்ல செய்தி தான்.
தேசிய போலிஸ் படையின் துணைத்தலைவர் டத்தோஸ்ரீ அயூப்கான் மைடீன் பிச்சை அவர்களின் அறிவிப்பின்படி ஜனவரி முதல் செப்டம்பர் வரை சுமார் 45 போலீஸ்காரர்களும் அதிகாரிகளும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். 45 பேர் தானா என்று நினைத்தாலும் இது ஆரம்பம் தானே என்பதில் மகிழ்ச்சி கொள்ளலாம் இன்னும் கைது நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன.
அதே சமயத்தில் காவல்துறையினர் அனைவருமே ஊழல்வாதிகள் என்று முத்திரை குத்திவிட முடியாது. இலஞ்சம், ஊழலை விரும்பாத சாதாரண நிலையில் இருப்பவர்களிலிருந்து அதிகாரிகள்வரை பலர் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களில் கறைபடாத காவல்துறையினர் சுமார் 51 பேருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.
ஆக வருங்காலங்களில் காவல்துறையில் பல சீர்திருத்தங்கள் நிகழும் என்று எதிர்பார்க்கலாம். நல்லது நடக்கும் எனவும் எதிர்பார்க்கலாம்.
No comments:
Post a Comment