Wednesday 4 December 2019

பண்பாடற்ற ஒரு மனிதர்...!

தேசிய முன்னணி  நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பேசிய பண்பாடற்ற பேச்சு ஒன்று,  இன்று  இந்து சமயத்தினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது என்பதில் ஐயமில்லை. 

நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என். ராயர்,  நெற்றியில் பூசியிருந்த வீபூதி,  முன்னாள் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சின் பெங்கின் அஸ்தியா  என்று நாடாளுமன்ற உறுப்பினர், தாஜூடின் அப்துல் ரகுமான் கிண்டலடித்திருப்பது  அவர் தனது பதவிக்குத் தகுதியானவர் தானா என்கிற சந்தேகமே நமக்கு எழுகிறது.

நமது நாட்டைப் பொறுத்தவரை இப்படி பிற மதங்களைக் கிண்டலடிப்பவர்கள் என்பது நாம் கேள்விப்படாதது. 

நாம் பல சமயத்தினரிடையே காலங்காலமாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்து, கிறிஸ்துவம்,  பௌத்தம்,  பஹாய், இஸ்லாம் என பல சமயங்கள்.  கிண்டலடிப்பதற்கு எல்லா மதங்களிலும் ஏதோ ஒன்று உண்டு.  ஆனால் சம்பந்தப்பட்டவர்களின் மனம் நோகுமே என்கிற உயரிய பண்பாடு நம்மிடையே உள்ளதால் அப்படியெல்லாம் நாம் செய்வதில்லை.  

இப்படி நான் சொல்லுவது சாதாரண - சராசரியான மக்களிடையே உள்ள பண்பாடு.  மக்களிடையே எந்த குழப்பமும் இல்லை. அவர்கள் சரியாகத்தான் இருக்கிறார்கள். ஆனால் வழக்கம் போல அரசியல்வாதிகள் செய்கின்ற விஷமத்தனமான பேச்சுக்கள் தான் நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்துகின்றன. 

தாஜூடினைப் பற்றி பேச நமக்கு ஒன்றுமே இல்லையா?  அல்லது அவருடைய சமயத்தைப் பற்றி பேச நமக்கு ஒன்றுமே இல்லையா? அல்லது அவருடைய சமயத்தைப் பற்றி யாரும் பேச முடியாது என்கிற துணிவில் அவர் அப்படிப் பேசுகிறாரா?  பேசுகின்ற உரிமை இருந்தால் கூட  பிற மதத்தினர் அப்படி பேச மாட்டார்கள் என்கிற உண்மயை அவர் புரிந்து கொள்ள வேண்டும். 

அவர் அப்படி பேசியதற்கு அவர் நாடாளுமன்றத்திலிருந்து இரண்டு நாள்கள் இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். இப்படி இரண்டு நாள்கள் என்பதெல்லாம் இவரைப் போன்ற தகுதியற்றவர்களுக்குப் போதுமானது அல்ல. 

இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழக் கூடாது என்று நாட்டை ஆளும் பெரும் மன்றமான நாடாளுமன்றம் நினைக்குமானால் ஒன்று அவர்களை முற்றிலுமாக  பதவியில் இருந்து நீக்க வேண்டும். அல்லது நீண்டகால இடை நீக்கம் செய்ய வேண்டும். குறைந்தபட்சம் ஓர் ஆண்டு. இதுவே நமது பரிந்துரை. முற்றிலுமாக இவர்கள் வாயை அடுக்குவதற்கு வேறு வழியில்லை.

பண்பாடற்றவர்களுக்கு இது தான் சரியான வழி!

No comments:

Post a Comment