Sunday 1 December 2019

பிளவுகள் தீருமா...?

பிரதமர் மகாதிர்,  மீண்டும் மீண்டும் பிரதமர் பதவியை அன்வாரிடம் ஒப்படைப்பேன் என்று சொல்லும் போதே ஏதோ வில்லங்கம் இருப்பதாகவே நமக்குத் தோன்றியதில் ஒன்றும் வியப்பில்லை!

அவர் பிரதமர் பதவியை இன்னும் ஒப்படைக்காமல் இருப்பதே பி.கே.ஆர். கட்சியில் பிளவை ஏற்படுத்த வேண்டும் என்னும் நோக்கம் தான் காரணம் என்பது இப்போது நமக்கு வெட்ட வெளிச்சமாகவே தோன்றுகிறது.

ஆமாம், பி.கே.ஆரில் ஏகப்பட்ட பிளவுகள் என்பதாக ஒவ்வொரு நாளும் படித்துக் கொண்டிருக்கிறோம். இந்தப் பிளவுகளுக்குக் காரணம் டாக்டர் மகாதிர் இல்லை என்றாலும் அந்த பிளவுகளின் பின்னணியில் அவர் தான் இருக்கிறார் என்பதும் நமக்குப் புரிகிறது.

இன்றைய நிலையில் அன்வார் இப்ராகிம் ஒன்றும் செய்ய முடியாத நிலையில் இருக்கிறார் என்பது தான் உண்மை.  இன்று அவர் பிரதமர் பதவி ஏற்றால் எல்லாப் பிளவுகளும் பறந்து போகும்! அவர் பதவியில் இல்லாத வரையில் பிளவுகள் இன்னும் அதிகமாகும்.  

கட்சியில் ஏற்பட்டிருக்கும் பிளவுகளுக்குக் காரணமானவர்கள் அன்வார் பிரதமர் ஆகக் கூடாது - வரமாட்டார் என்றே நம்புகிறார்கள்.  இவர்கள் தான் டாக்டர் மகாதிரின் பலம்.   டாக்டர் மகாதிர்,  பதவியை ஒப்படைக்காமல்,  காலத்தை இழுத்தடிப்பதன் மூலம் கட்சியில் இன்னும் பிளவுகள் அதிகமாகும் என நம்புகிறார்.  பிளவுகள் அதிகமாகி பி.கே.ஆர். என்னும் கட்சியே இல்லாமல் போக வேண்டும் என்பது தான் அவரது கடைசி ஆசையாக இருக்க வேண்டும். அதன் மூலம் அன்வார் பிரதமர் ஆக முடியாத ஒரு சூழலை அவர் உருவாக்குகிறார்!

இருந்தாலும் தான் போகும் இடங்களிலெல்லாம் -  வெளி நாடுகளிலுள்ள நிருபர்களைச் சந்திக்கும் போதெல்லாம் -  தான் பிரதமர் பதவியை அன்வாரிடம் தான் ஒப்படைப்பேன் என்று திரும்பத் திரும்ப சொல்லுவதில் ஏதோ உள் நோக்கம் இருப்பதாகவே நமக்குப்படுகிறது! 

பி.கே.ஆர். கட்சியில் பிளவுகள் இன்னும் அதிகமாக வேண்டும் என்பதற்காகவே அவர் இன்னும் பதவியில் இருக்கிறார் என்பது இப்போது உறுதியாகத் தெரிகிறது! அன்வாரிடம் பிரதமர் பதவி இல்லாத வரை அவரால் கட்சியில் ஏற்படும் பிளவுகளை ஒன்றும் செய்ய இயலாது என்பது தான் உண்மை. அது நமக்கும் தெரியும், டாக்டர் மகாதிருக்கும் தெரியும். 

அன்வாரிடம் பிரதமர் பதவி ஒப்படைப்பு என்பது கட்சியில் பிளவுகள் எந்த அளவுக்குப் போகப் போகிறது என்பதைப் பொறுத்துத் தான் அமையும். இன்னும் பிளவுகள் அதிகமாக வேண்டும் என்பதற்காகவே பிரதமர் மகாதிர் இன்னும் காத்துக் கொண்டிருக்கிறார்!

கட்சியில் பிளவுகள் ஏற்பட்டால் ஒழிய பிரதமர் மாற்றம் ஏற்பட வழியில்லை!

No comments:

Post a Comment