Monday 19 April 2021

எனது தொழில் சாம்ராஜ்யத்தை நோக்கி...........! (34)

புத்தகங்கள் தொழிலை புரிந்து கொள்ள உதவும்


எனது ஆரம்பகால அனுபவங்கள் அனைத்தும் புத்தகங்கள் மூலமாகத் தான் கிடைத்தன. நான் வேலை செய்து கொண்டிருந்த  காலத்தில் உடனடியாக என்னால்  வியாபாரத்தில் ஈடுபட இயலவில்லை.

அந்த காலக்கட்டத்தில் புத்தகங்களே எனக்குத் துணையாக இருந்தன.  வியாபாரத் துறையில் முன்னேறியவர்கள் பற்றிய புத்தகங்கள் அவர்களுடைய வாழ்க்கை  வரலாறுகள் இவர்களைப் பற்றித்தான் நான் அதிகமாகப் படித்தேன்.

வியாபாரத் துறையின்  ஏற்ற இறக்கங்கள், தோல்வி வெற்றிகள் இவைகள் எல்லாம் எனக்குத் தேவையாக இருந்தன. அவர்களுடைய அனுபவங்கள் எனக்குப் பாடமாக  அமைந்தன. இன்று வியாபாரத் துறையில்  பெரும் கோடிசுவரர்களாக இருப்பவர்கள் அவர்களது ஆரம்பகாலம் பல  தோல்விகளைக் கொண்டது தான்.  

இந்த இன்றைய கோடிசுவரர்களின் வாழ்க்கை வரலாறுகள் முக்கியமாக இரண்டு பாடங்களை எனக்குப் போதித்தன. ஒன்று: விடாமுயற்சி. எந்த காரணத்தைக் கொண்டும் நீங்கள் ஏற்றுக் கொண்ட தொழிலிலிருந்து பின் வாங்காதீர்கள். தொடர் முயற்சிகள், தொடர் போராட்டங்கள் நம்மைத் தொடர்ந்து கொண்டு தான் இருக்கும். நிலைத்து நின்று போராடித் தான் அனைவரும் வெற்றி பெற்றார்கள்.  இரண்டு: தோல்விகள் இல்லாமல் வெற்றிகள் இல்லை. ஏதோ ஒரு கட்டத்தில் இவர்கள் அனைவருமே தோல்வியைத் தழுவியிருக்கிறார்கள். ஆனால் அந்த தோல்விகளை அவர்கள் தோல்விகளாக ஏற்றுக் கொள்ளவில்லை. தொடர்ந்து வெற்றியை நோக்கிய பயணமாகவே தங்களது தொழிலைக் கொண்டு சென்றிருக்கிறார்கள்.

நான் தொழிலில் பயணித்த நாள்களில் அந்த இரண்டு கொள்கைகளையும் புறக்கணிக்கவில்லை. என்ன நடக்கும் என்பதை முன்னமையே நான் அறிந்திருந்தேன். அதனால் எதுவும் எனக்குப் புதிதாக இல்லை. விடாமுயற்சியை  நான் விட்டுவிடவில்லை. தோல்விகளையும் மாற்றி அமைத்துக் கொண்டேன்.

இது போன்ற வாழ்க்கை வரலாறுகள் நமக்கு அனுபவங்களைக் கற்றுக் கொடுக்கின்றன. மற்றவர்களின் அனுபவங்கள் நமக்குப் பாடமாக அமைகின்றன.

ஒன்றுமே தெரியாமல், ஒன்றுமே அறியாமல் தொழில் செய்கிறேன் என்பதை விட குறைந்த பட்சம் இது போன்ற புத்தகங்கள் மூலமாவது அனுபவங்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.

நேரடி அனுபவம் பெற்றவர்கள் பாராட்டுக்குரியவர்கள். அந்த வாய்ப்பு அவர்களுக்குக் கிடைத்திருக்கின்றது. அப்படி கிடைக்காதவர்கள் புத்தகங்கள் மூலம் ஓரளவு அதனைப் பெறலாம். அதுவே  நமது நோக்கம்

அனுபவப்பட்டவர்களின் வாழ்க்கை நமக்குப் பாடங்கள்.  உலகப்  பணக்காரர்கள் அனைவருமே வெற்றி, தோல்வியைக் கண்டவர்கள். அவர்களுக்கும் நமக்கும் உள்ள ஒரே வித்தியாசம்: அவர்கள் பின் வாங்கவில்லை! நாம் புறமுதுகிட்டு ஓடிப்போனோம்! வெற்றியும் நம்மை விட்டு ஓடிபோய்விட்டது!

புத்தகங்கள் நமக்குச் செல்வங்கள், பயன்படுத்திக் கொள்வோம்!

No comments:

Post a Comment