Friday 30 April 2021

எனது தொழில் சாம்ராஜ்யத்தை நோக்கி .......! (45)

தொழில் செய்பவன் வீழ்வதில்லை


தொழில் செய்பவன் வீழ்ச்சி அடைவதில்லை. ஏன் அவனுக்கு வீழ்ச்சி என்பதில்லை!

ஆனால் அதற்காக வீழ்ச்சி அடையாமலா இருக்கிறார்கள்? வீழ்ச்சி என்றாலும். தோல்வி என்றாலும் அது நடந்து கொண்டு தான் இருக்கும். நாம் நமது தொழிலை ஒன்றும் நடவாதது போல் தொடர்ந்து கொண்டு தான் இருக்க வேண்டும்.

வீழ்ச்சி என்றால் நாம் எங்கோ, எதிலோ சரியாகச் செய்யவில்லை என்பதைத் தவிர வேறொன்றுமில்லை! இப்போது அது நமக்குக் கண் முன்னாலேயே தெரிகிறது! அது போதும். அது தான் நமது தேவை. இனி நாம் அதனைச் சரிசெய்து கொண்டு நமது தொழிலைத் தொடர வேண்டியது தான்.

வீழ்ச்சி என்பதெல்லாம் நமக்குப் பாடங்கள். வீழ்ச்சி என்று ஒன்று இல்லாவிட்டால், தோல்வி என்று ஒன்று இல்லாவிட்டால், சறுக்கல் என்று ஒன்று இல்லாவிட்டால் நாம் எங்கே தவறு செய்தோம் என்பது நமக்குத் தெரியாது, நமக்குப் புரியாது!

நமது தவறுகளைப் புரிய வைக்கவே நமக்கு வீழ்ச்சிகள் வருகின்றன; வர வேண்டும். அந்த வீழ்ச்சிகள் எதனால் வருகின்றன, எங்கே நாம் தவறு செய்தோம், யாரை நம்பி நாம் மோசம் போனோம்,  ஏதாவது கீழறுப்பு வேலைகள் நடந்தனவா போன்ற கேள்விகள் எழ வேண்டும். அப்போது தான் நமது கேள்விகளுக்குப் பதில்கள் கிடைக்கும். ஒரு சில விஷயங்களை நாம் அலட்சியப்படுத்தி விட முடியாது.

வீழ்ச்சி என்பது தொழிலில் இல்லை. அது பாடம்.  சில பாடங்களை நாம் சொந்த காசு போட்டுப் படிக்கிறோம். சில பாடங்களை நாம் அனுபவங்கள் மூலம் படிக்கிறோம். தொழிலில் நாம் செய்யும் தவறுகள் வீழ்ச்சிகள் அல்ல.  அவை பாடங்கள். பாடங்களைப் படிப்பதற்கு வீழ்ச்சி என்று சொல்ல முடியுமா?  எல்லாமே நமது மனதில் தான் இருக்கிறது! வீழ்ச்சி என்றால் அது வீழ்ச்சி!  வீழ்ச்சியில்லை என்றால் அது வீழ்ச்சி இல்லை. அப்படித்தான் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

எல்லாவற்றையும் எதிர்மறை கண் கொண்டு பார்க்காதீர்கள். எது நடந்தாலும் "அது நன்மைக்கே!" என்கிற மனநிலை நமக்கு இருக்க வேண்டும். அது தான் நேர்மறை.

மீண்டும் சொல்லுகிறேன். தொழில் செய்பவனுக்கு வீழ்ச்சி என்பது இல்லை. தற்காலிகமாக ஏற்படுகின்ற சில வீழ்ச்சிகளை, சில இடர்பாடுகளை,  சில தடங்கல்களை  வீழ்ச்சி என்று சொல்லி, பெரிதுபடுத்தி தொழிலை விட்டே  ஓடி விடாதீர்கள் என்பதே எனது வேண்டுகோள்.

எல்லாருமே, வணிகத்துறையில் ஈடுபட்டவர்கள்  அனைவருமே, வீழ்ச்சியைச் சந்தித்தவர்கள் தான். அது ஒரு தற்காலிகத் தடங்கள், அவ்வளவு தான்!  அது தொடர வேண்டும்!

வீழ்ச்சி என்று சொல்லி வீழ்ந்து விட வேண்டாம்!

No comments:

Post a Comment