Sunday 9 April 2023

தலைசுற்றுகிறதே தலைவா!

 


தலை சுற்றுகிறதே தலைவா! இப்படி ஒரு செய்தியை நாம் எதிர்பார்க்கவில்லை!

காலங்காலமாக பல மோசடிகளைச் செய்து வந்த ம.இ.கா. காரன் கூட இப்படி அகப்பட்டுக் கொள்ளவில்லையே! அது அவர்களது அனுபவத்தைக் காட்டுகிறது! அனுபவமற்ற உங்கள் பணியாளர்கள் இப்படி கையும் களவுமாக அகப்பட்டுக் கொண்டார்களே!

யாராக இருந்தாலும் ஊழல்களை நம்மால் ஆதரிக்க முடியாது. அதைத்தான் பிரதமர் அன்வார் தனது அரசாங்கத்தில் ஊழல்களுக்கு வாய்ப்பில்லை  என்று கூறி வருகிறார். இருந்தும், அது தெரிந்தும், இப்படி நடந்திருக்கிறதே என்று அறியும் போது, சராசரி மலேசியன் என்னும் வகையில் மனம் கனக்கத்தான் செய்கிறது.

எடுத்த எடுப்பில், மனிதவள அமைச்சில் இப்படி ஒரு நிலையா என்று மனம் வேதலையுறுகிறது.  இப்போதைக்கு நாம் யாரையும் குற்றம் சொல்லவில்லை. சொல்லவும் முடியாது.  விசாரணைக்குப் பின்னர் தான் முழுவிபரங்களும் தெரியவரும். அமைச்சர் மீது எந்தக் குற்றச்சாட்டும் எழவில்லை.  அவரது பணியாளர்கள் மீது தான் குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன.  அவர்கள் கைதும் செய்யப்பட்டிருக்கின்றார்கள். சட்டம் தனது கடமையைச் செய்யும். செய்யத்தான் வேண்டும்.

ஆனாலும் பழி பாவம் என்னவோ அமைச்சர் மீது விழுவதைத் தடுக்க முடியவில்லை. அது அவர் சார்ந்த அமைச்சு.  செய்திகளில் அமைச்சர் தான் முன்னிலைப்படுத்தப்படுகிறார்! அது மனதுக்குக்  கஷ்டமாகத்தான் இருக்கிறது. நல்ல சேவையாளர் என்று பெயர் எடுத்தவர். இப்படி ஒரு நிலையா அவருக்கு  என்று எண்ணமால் இருக்க முடியவில்லை. அவருடைய பணியாளர்கள் செய்த தவறினால் இன்று அவர் தலை குனிந்து நிற்க வேண்டிய சூழல் ஏற்பட்டுவிட்டது. அவர் மட்டுமா? இந்திய சமூகமே தலைகுனிய வேண்டிய நிலைமை தான்.

இந்தியர்கள் சார்பில் அமைச்சரவையில்  பங்கு பெரும் இந்திய அமைச்சர்கள் நமது இனத்தின் கௌரவத்தைக் காப்பாற்றுவது அவர்களின் கடமை. முன்பிருந்த கட்சி "நமக்கு என்னடா கௌரவம்!"  என்று அலட்சியம் காட்டியது போல இப்போதும் தொடர்வதை நாம் விரும்பவில்லை.  நாம் விரும்பமாட்டோம்.

நாம் என்ன தான் எழுதினாலும் பேசினாலும் ஊழல் என்று வரும்போது  அதனை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. யாராக இருந்துவிட்டுப் போகட்டும். நம்மால் அதனை ஆதரிக்க முடியாது. நம் இனத்தவன் என்பதற்காக நாம்  ஊழலை ஆதரித்துவிட முடியாது.

எது எப்படியிருந்தாலும் அமைச்சர் சிவகுமாரின் இந்த ஊழல் செய்திகளினால் அவரின் நம்பகத்தன்மை குறைந்துவிட்டது. இந்திய சமூகத்தில் யாரையும் நம்ப முடியவில்லையே என்கிற நிலை மீண்டும் ஏற்பட்டதாகவே நினைக்கிறோம்.

ஆரம்பமே தலைசுற்றுகிறதே தலைவா! என்ன செய்ய?

No comments:

Post a Comment