Tuesday 1 December 2020

அடுத்த தேர்தல் தான் எப்போது?

 அம்னோ கட்சியினர் கேட்டுக்  கொண்டதற்கு இணங்க, இன்றைய ஆட்சியில், அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய அனைத்தையும் பிரதமர் முகைதீன் யாசின் நிறைவேற்றி விட்டார் என நமபலாம்.

அம்னோவினர் பல பதவிகளில் அமர்த்தப்பட்டிருக்கின்றனர்.  துணைப்பிரதமர் பதவி வெகு சீக்கிரத்தில் வெட்ட வெளிச்சத்திற்கு வரும். அம்னோவின் அந்த மாபெரும், ஊழல் அற்ற, மனிதர் யார் என்பது இன்னும் சில தினங்களில் தெரிய வரும்.   அடுத்த நிதி ஆண்டில் அரசியல் நியமனங்களுக்காக -  இவர்களுக்காகவே -  கூடுதலான  நிதிகளையும் பிரதமர் ஒதுக்கிவிட்டார்.

ஆனாலும் இவர்கள் இன்னும் கேள்விகள் கேட்டுக் கொண்டு தான் இருக்கின்றனர்! எப்போது தேர்தல் வரும் என்கிற கேள்விகள் தொடர்ந்து எழுந்து கொண்டு தான் இருக்கின்றன.

ஆனால் இவர்களின் கேள்விகள் மனதிலிருந்து வருகின்றனவா அல்லது உதட்டிலிருந்து வருகின்றனவா என்று பார்த்தால் இப்போது அவர்கள் பேசுவது மனதிலிருந்து வரவில்லை என்றே  சொல்லலாம்.

காரணம் உண்டு. இப்போது அவர்கள் கேட்டவை கிடைத்துவிட்டன. இன்றைய அரசாங்கம் ஏறக்குறைய அம்னோ கட்சியின் அரசாங்கம் என்று தாராளாமாகச் சொல்லலாம். அதனால் இப்போது அடுத்த தேர்தல் என்பது அவர்களிடம் கொஞ்சம் பலவீனமாகி  வருகின்றது. அடுத்த  தேர்தல் காலம் வரும் வரை அவர்கள் காத்திருப்பார்கள் என நம்ப இடமிருக்கிறது.

ஆனாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போல தேர்தல்! தேர்தல்! என்று அடிக்கடி சொல்லி வருகின்றனர்! இது சும்மா வாய்ச் சவடால் என்று சொல்லலாம்!

இப்போது மீண்டும் ஒரு திருப்பம்.  கோவிட்-19 தொற்று சீரடைந்து விட்டால் தேர்தல் வைக்கலாம் என்று இப்போது பேச ஆரம்பித்துவிட்டனர்.

இப்போது நமக்கும் ஒரு பயம் வந்து விட்டது. அடுத்த தேர்தல் வரை, அதாவது இன்னும் மூன்று ஆண்டுகளுக்கு, கோவிட்-19 தொடரும் என்று நினைக்கத் தோன்றுகிறது!

இது தான் இப்போதைக்கு நமக்குக் கவலை தரும் விஷயம். கோவிட் 19 - ம் தொடர்ந்து நம்மிடையே இருக்கும்படி அரசாங்கத்தில் உள்ளவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்று நம்பலாம்!

பிரதமர் முகைதீன் முடிந்தவரை தனது நிலையை உறுதிப்படுத்திக் கொண்டு விட்டார். உடனடியாக அரசாங்கம் கவிழும் அபாயமில்லை. அதனால் தேவையெல்லாம் கோவிட்-19 வைத்தே தனது ஆட்சியை நீட்டித்துக் கொள்வார் என்பது உறுதி.

திடீர்த் தேர்தல்  எதுவும் நடக்கப் போவதில்லை என்பது உறுதியாகத் தெரிகிறது. ஆக, உலகிலேயே கோவிட்-19 தொற்று ஒழிக்கப்பட்டாலும் நமது நாட்டில் அந்த தொற்று இன்னும் மூன்று ஆண்டு காலம் நீடிக்கும் என்பதே சரியாக இருக்கும்!

தேர்தல் இப்போது இல்லை!

No comments:

Post a Comment