Wednesday 1 June 2022

வெற்றியின் ஆரம்பம் தோல்வி!

 

தோல்வி தான் வெற்றியின் முதல்படி என்பதை நாம் நிறையவே கேள்விப்பட்டிருக்கிறோம்; படித்திருக்கிறோம்.

ஆனால் அதைவிட  தோல்வி தான் நீங்கள் செய்த முதல் முயற்சியின் கைமேல் பலன்! அந்த தோல்வி உங்களை முடக்கிப் போட்டு விட்டால்  நீங்கள் தொடர் தோல்வியாளர் என்பதில் போய் முடியும். அடுத்த முயற்சியில் ஈடுபட்டால் உங்கள் பயணம் வெற்றியை நோக்கிய பயணம் என்று எடுத்துக் கொள்ளலாம்.

முயற்சிகள் தோல்வி அடையலாம். ஆனால் முயற்சிகள் முடங்கி விடக்கூடாது. தொடர் முயற்சிகள் தான் வெற்றியை நோக்கி நகரும் தன்மையுடையது.

முதல் முயற்சியில் வெற்றி பெறுபவர்கள் அரிதிலும் அரிது. பெரும்பாலான வெற்றியாளர்கள் பல முயற்சிகளுக்குப் பின்னர்  தான் வெற்றிக்கனியைத் தொட்டவர்கள். இன்று கோடி கோடியாக குவித்து வைத்திருப்பவர்கள் அனைவருமே தொடர் முயற்சியின் காரணமாக குவித்து வைத்தவர்கள் தாம்.

முதன் முயற்சியிலே வெற்றி என்பதைச் சுட்டிக்காட்ட யாரும் இல்லை. பல தோல்விகளுக்குப் பின்னர் தான் வெற்றி என்பதைச் சுட்டிக்காட்ட ஏகப்பட்ட பேர் இருக்கின்றனர்.

நமது நாட்டைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் ஆதி குமுணன் பற்றி அறியாதவர்கள் என்றால் மிகச் சிலரே இருப்பர்.  ஆதி அவர்கள் பத்திரிக்கைத் துறையில் ஒரு நிருபராக தனது வாழ்க்கையைத் தொடங்கியவர். பின்னர் நன்பர்களோடு சேர்ந்து வானம்பாடி என்னும் வார இதழை ஆரம்பித்தார்.  கடைசியாக நாளிதழ் ஒன்றை சொந்தமாக வெளியிட்டு பெரும் வெற்றி பெற்றார். அவர் இன்று இருந்திருந்தால் மலேசிய தமிழ் நாளிதழ்கள் அனைத்துக்கும் சொந்தக்காரராக  மாறியிருப்பார்! மலேசிய எழுத்துலகின்  ஜாம்பவான் அவர்.

அவர் வெறும் எழுத்தாளர் மட்டும் அல்ல  ஒரு பத்திரிக்கைக்கும் சொந்தக்காரராக - பத்திரிக்கை அதிபராகவும் இருந்தவர். பத்திரிக்கை நடத்தும் கலையை மிகச் சரியாகப் புரிந்து வைத்திருந்தவர். 

மலேசிய பத்திரிக்கை உலகில் - எழுத்துலகில் -  எத்தனையோ பிரபலங்கள் இருந்திருக்கிறார்கள்.  ஆனால் அவரால் மட்டுமே சொந்த நாளிதழை நடத்த முடிந்தது. அங்கு, அந்த உச்சத்திற்குச் செல்ல எத்தனையோ இன்னல்கள், இடர்கள், தடைகள், அதிகார வர்க்கத்தின் தலையீடு என்று அனைத்தையும் கடந்து வந்துதான் அவரால் அந்த உச்சத்தை தொட முடிந்தது.

தோல்விகளோடு அவர் நின்றுவிடவில்லை. மீண்டும் அடுத்து.......மீண்டும் அடுத்து..... என்று தொடர் போராட்டம், தொடர் முயற்சி  தான் அவர் வெற்றிக்குக் காரணம்.

தோல்வி என்பதாக ஒன்றுமில்லை! அது தான் வெற்றியின் ஆரம்பம்!

No comments:

Post a Comment