Monday 10 February 2020

வாருங்கள்! நாமும் முன்னேறுவோம்! (42)

பங்கு மார்க்கெட்டில் முதலீடு செய்யலாமா?

பங்கு மார்க்கெட்டைப் பற்றி  இரண்டே கருத்துக்கள் தான். ஒன்று: கோடிக்கோடியாக கொட்டலாம்!  அல்லது  தெருக் கோடியில் நிற்கலாம்!

எனக்குத் தெரிந்த இரண்டு நபர்கள் தெருக்கோடிக்கு வந்தவர்கள்!

பங்கு மார்க்கெட் அந்த அளவுக்கு மோசமானதா? இல்லை என்று தான் நான் சொல்லுவேன். ஆழம் தெரியாமல் காலை விடுவதே நமது பழக்கமாகப் போய்விட்டது/ அதனால் தான் பலத்த அடி விழுகிறது!

உடனடியாக பலன் பெற வேண்டும் என்றால் உங்களுக்கு மரணடி விழலாம். நீண்ட கால முதலீடு என்றால் நிச்சயமாக நீங்கள் இலாபத்தைப் பார்க்கலாம். பங்கு மார்க்கெட் என்பது நீண்டகால முதலீடு.

எனது வயதான நண்பர் ஒருவர் அவருடைய இளமைக் காலத்தில்  எஸ்ஸோ பங்கு ஒன்று வாங்கினார். அவர் வாங்கிய போது அதன் விலை ஏறக்குறைய  முப்பது வெள்ளி இருக்கும்.  என்ன செய்வதென்று தெரியாமல் அவர் அப்படியே போட்டு வைத்திருந்தார்.  அவருடைய வயதான காலத்தில் அது ஆயிரம் வெள்ளி வரை உயர்ந்துவிட்டது. பிறகு அவருடைய மகன் பெயருக்கு மாற்றிவிட்டார்.

எனது இளமையான நண்பர் ஒருவர் நல்ல வங்கி வேலையில் இருந்தவர். அவருக்கு மாற்றம் வந்த போது வேலையை ராஜினாமா செய்து விட்டார். ஊழியர் சேமநிதி பணம் சுமார் நான்கு இலட்சம் வெள்ளி இருந்தது. அது போதும் தான் கோடிஸவரனாகி விட முடியும் என்று நினைத்தார். கடைசியில் தெருக்கொடிக்கு வந்து விட்டார்!  அவர் புத்திசாலியாக இருந்திருந்தால் மூன்று இலட்சத்தை குடும்பத் தேவைகளுக்காக ஒதுக்கிவிட்டு ஒரு இலட்சத்தில் தனது ஆட்டத்தைக் காட்டியிருக்கலாம். ஒரு இலட்சம் போனாலும் "போனால் போகட்டும் போடா!" என்று டாட்டா காட்டியிருக்கலாம்! இப்போது ஒன்றுமில்லாமல் பிள்ளைகளின் தயவில் காலத்தை கடத்திக் கொண்டிருக்கிறார்!

பங்கு மார்க்கெட் என்பது சூதாட்டம் அல்ல. அது ஒரு நீண்ட கால முதலீடு.  நாம் முதலீடு செய்யும் நிறுவனங்களைப் பற்றி நன்கு அறிந்திருக்க வேண்டும். ஓரளவு நிறுவனங்களைப் பற்றியான அறிவு நமக்கு இருக்க வேண்டும்.

பெரும்பாலான் நிறுவனங்கள் சீனர்களின் கட்டுப்பாட்டில் தான் உள்ளன. அவர்களுக்குத் தான் எங்கு ஒட்டல், உடைசல்கள் உள்ளனன என்பது தெரியும்.  தேவையான நேரத்தில் தேவையான செய்திகள் அவர்களது வாடிக்கையாளர்களுக்கு அதாவது சீனர்களுக்குப் போய் சேர்த்து விடும். நாம் எதனையும் அறியாமல் இருப்போம்! அப்படியே நம்மை உட்கார வைத்து விடுவார்கள்!

பங்கு மார்க்கெட் என்பது நல்ல முதலீடு. அது சுதாட்ட மையம் அல்ல.  அதிகப் பணம் இருந்தால் ஆடலாம்!  கொஞ்சம் பணம் இருந்தால் அது நமக்கேற்ற இடமல்ல!

பங்கு மார்க்கெட்டில் முதலீடு செய்யலாமா? செய்யலாம். அது நீண்ட கால முதலீடாக இருக்க வேண்டும்!

No comments:

Post a Comment