நாம் யாராக இருந்தாலும் யாரையோ நம்பி வாழ்கின்ற வாழ்க்கை கடைசியில் மகிழ்ச்சியற்றுப் போகும்.
கடவுள் பக்தி உள்ளவர்களாக இருந்தால் முதலில் கடவுளை நம்புங்கள். அதன் பின்னர் உங்களை நம்புங்கள்.
நாம் எதைச் செய்தாலும் அதனைச் செய்து முடிப்போம் என்கிற நம்பிக்கை நமக்கு வேண்டும். நம்முடைய காரியத்தை இன்னொருவர் வந்து செய்து முடிப்பார் என்று நினைப்பது அது தோல்வியில் தான் முடியும் என்பது நமக்கு எப்படி தெரியாமல் போகும்?
நாம் ஒரு செயலை செய்கின்ற போது நம்மால் முடியும் என்கிற எண்ணத்தில் தான் ஆரம்பிக்கிறோம். அதாவது நம்பிக்கையோடு தான் ஆரம்பிக்கிறோம். ஆனால் ஏதோ கொஞ்சம் இடறல் வரும் பொது உடனே தடம் புரண்டு விடுகிறோம். நம்பிக்கை இழந்துவிடுகிறோம். தளர்ந்து விடுகிறோம்.
இது தான் நம்மில் பெரும்பாலானோரின் குணாதிசயமாக விளங்குகிறது. எதைச் செய்தாலும் ஒவ்வொன்றிலும் தடைகள் என்பது இருக்கத்தான் செய்யும். தடைகள் இல்லாமல் எதைத் தான் செய்ய முடியும்? ஒன்றுமே இல்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். ஆனால் அதற்காக 'இனி மேல் தொடர வேண்டாம்' என்று முற்றுப்புள்ளி வைத்தால் நமக்குத் தான் தோல்வி.
நமது முயற்சியின்மையால் இழந்தது பல. எல்லாம் கஷ்டம் கஷ்டம் என்கிற எண்ணத்தோடேயே செயல்பட்டால் எதுவும் ஆகப்போவதில்லை. கஷ்டம் என்பது நமக்கு மட்டுமல்ல. உயிர் இருக்கும் வரை மனிதனுக்குக் கஷ்டம் தான். அதற்காக சும்மா இருந்தவிட முடியுமா? எதுவும் எளிதாக கிடைத்து விடாது. ஒவ்வொன்றுக்கும் முயற்சிகள் தேவை.
நாம் மற்றவர்களை நம்புவதை முதலில் நிறுத்த வேண்டும். ஆலோசனைகள் கேட்பதில் தவறில்லை. நமது நண்பர்களிடம் கேட்கலாம். பலதரப்பட்ட ஆலோசனைகள் வரும். பிறகு நாமே வடிகட்டி எது சிறந்தது என்கிற முடிவுக்கு வரவேண்டும்.
ஆனால் நமது தோல்விக்கு நாமே பொறுப்பு. வேறு யாரும் அல்ல என்பது நமக்குப் புரிய வேண்டிய முதல் பாடம். நமது ஒவ்வொரு செயலுக்கும் நாமே பொறுப்பு! நம்மையே நம்புவோம்! நம்பி செயபடுவோம்!
No comments:
Post a Comment