Saturday 21 January 2023

ஏன்? ஏன்? ஏன்?

 

                                               மாண்புமிகு  எம்.குலசேகரன்

ஒய்.பி. சார்! அன்றைக்கும் எதிர்ப்புக் குரல்! இன்றைக்கும் எதிர்ப்புக் குரல்! என்னா சார்!  எப்போதும் எதிர்த்துக் கொண்டே இருக்கப் போகிறீர்களோ?

பரவாயில்லை! அநீதியைக் கண்டு கொதிப்பது நமது இயல்பு. நாங்கள் குரல் கொடுப்போம் என்று நினைக்கும் போதே நீங்கள் எங்களை முந்திக் கொள்கிறீர்கள்!

தேசிய கல்வி ஆலோசனைமன்றத்தில் தமிழ் அறிந்த இந்திய கல்வியாளர் ஒருவரை நியமனம் செய்யாதது மிகவும் அதிருப்தியான ஒரு செயல். இதற்கான பழியை கல்வி அமைச்சர் தான் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

அதெப்படி? மலேசிய நாட்டில் முப்பெரும் இனங்கள் வாழ்கின்ற ஒரு நாடு. மலாய், சீனர், இந்தியர் என்பது அனைவரும் அறிவர். இங்கு மலாய்,  சீன, தமிழ்ப்பள்ளிகள் நடைமுறையில் இருக்கின்றன  என்பது இதற்கு முன்னர் மாண்புமிகு  ஃபாட்லினா சிடேக் அறிந்திராவிட்டாலும் இப்போது, அவர் கல்வி அமைச்சர் ஆன பின்னர், கட்டாயம் அறிந்திருக்கவே வேண்டும்.

இப்போது நடந்திருப்பது என்னவென்றால் மாண்புமிகு கல்வி அமைச்சருக்கு இங்கிருக்கும் 528 தமிழ்ப்பள்ளிகள் கண்ணுக்குத் தெரியவில்லை. மேலும் இந்தப்பள்ளிகளில் படிக்கும் 80,000 த்துக்கு மேற்பட்ட இந்திய மாணவர்கள் அவர் கண்களுக்குத் தெரியவில்லை. ஒன்று அவருக்குத் தெரியாமல் இருக்க வேண்டும் அல்லது அவர் தமிழ்ப்பள்ளிகளை அலட்சியப்படுத்தபவராக  இருக்க வேண்டும்.  அலட்சியப்படுத்துவது என்பது அவர் தமிழ்ப்பள்ளிக்ளின் மீது அக்கறை இல்லாதவர் என் நாம் புரிந்து கொள்கிறோம். இது நாள்வரை நடந்த ஆட்சியில் அப்படி ஒரு சூழல் இருந்தது. அதனையே  இன்றைய கல்வி அமைச்சரும் தொடர விரும்புகிறார் என்பது நமக்குப் புரிகிறது.

கல்வி அமைச்சர் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். இதுநாள் வரை நடந்தது ஆட்சி என்பதை விட அது கொள்ளையர்களின் ஆட்சி. கிடைத்தை சுருட்டிக்கொண்டு ஓடிவிடலாம்  என்பது தான் அவர்களின் கொள்கை. மற்றபடி நாட்டின் நன்மை, நாட்டின் நலன் பற்றியெல்லாம் கவலைப்படாதவர்கள்!  கொள்ளையடிப்பவர்கள் ஆட்சி எப்படி இருக்கும் என்பதற்குச் சென்றகால ஆட்சி ஓர் உதாரணம்!

ஆனால் அது போன்ற ஆட்சி இனி வேண்டாம் என்பதால் தான் இப்போது வந்திருக்கிற ஆட்சி மாற்றம். பழையதையே மீண்டும் பாதையாக மாற்றுவதை இனி வருங்காலம் விரும்பாது!

கல்வி அமைச்சருக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள். தமிழ்ப்பள்ளிகள் சம்பந்தமாக எழும் பிரச்சனைகளை அமைச்சர் தலைமையில் தமிழ் கல்விமான்கள் மூலமாகத்தான் பிரச்சனைகள் தீர்க்கப்பட வேண்டும். சம்பந்தமில்லாமல் தமிழை அறியாதவர்கள், தமிழ்ப்பள்ளிகளின் பிரச்சனைகளை அறியாதவர்கள் தீர்க்க முயற்சித்தால்  அதற்கு நிரந்தர தீர்வை எட்ட முடியாது. அதிருப்தி இருந்து கொண்டே இருக்கும்!

மாண்புமிகு எம்.குலசேகரன் போலவே ஏன்? ஏன்? ஏன்? என்று நாமும் கல்வி அமைச்சரைப் பார்த்துக் கேட்கிறோம்!

No comments:

Post a Comment