Friday 20 January 2023

இங்கும் அது நடக்க வேண்டும்!

 

          கார் பெல்ட் போடத் தவறிய பிரிட்டீஷ் பிரதமர் ரிஷு சுனாக்

"இது தாண்டா போலீஸ்!" என்று  காவல்துறையினர் மார்தட்டிக் கொள்ளலாம்.  காலரை இழுத்துவிட்டுக் கொள்ளலாம்.

ஆனால் நடந்தது என்னவோ நம் நாட்டில் அல்ல. நடந்தது வெள்ளைக்காரன் வாழும் பிரிட்டனில் அல்லது பிரித்தானியாவில்!

நம் நாட்டில் நடக்குமா என்று நாமும் ஏக்கத்தோடு ஏங்கிக் கொண்டிருக்கத்தான் வேண்டுமோ?   "இல்லை! இல்லை! நடக்கும் பார்!"  என்று சொல்லும் காலம் வரும் என்று நம்பிக்கையோடு இருப்போம்.

சமீபத்தில் நமது பிரதமர் கூட்டமொன்றில் பேசும் போது "நானே தவறு செய்தாலும் என் மீது நடவடிக்கை எடுக்கலாம்!" என்று பகிரங்கமாகவே  கூறியிருக்கிறார்.  இதுவரை எந்த ஒரு பிரதமரும் இப்படி சொன்னதில்லை! அதனால் அவர் சொன்னதையே "என்னா பெருந்தன்மை!"   என்று நாம் திருப்தியடைந்து விட்டோம்! மற்றபடி இதெல்லாம் கவைக்கு உதவாத பேச்சு  என்று  என்றோ  நாம் ஒரு முடிவுக்கு வந்துவிட்டோம்!

போன ஆண்டு வந்த ஒரு செய்தி என்று நினைக்கிறேன். அப்பன் நாடாளுமன்ற உறுப்பினன். மகனுக்குப் போலிஸ் பாதுகாப்பு! இது தான் இங்குள்ள காவல்துறையின் நிலை! இந்தச் செய்தி எப்படியோ கசிந்துவிட்டது. அவ்வளவு தான். மற்றபடி கசியாத செய்தி இன்னும் எத்தனையோ இருக்கலாம்.  அது பொது மக்களின் வெளிச்சத்துக்கு  வரவில்லை.  வந்திருந்தால் இணையதளவாசிகள் பின்னி பெடல்  எடுத்திருப்பார்கள்!

ஆனாலும் என்னவோ கொஞ்சம் நம்பிக்கை தருகிறது.  பிரதமர் அன்வார் வந்த பிறகு  வேலைகள் எல்லாம் சீராக நடந்து கொண்டிருக்கின்றன. "திடாப்பா!"  என்கிற போக்கு  குறையத் தொடங்கியிருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். இது தொடர வேண்டும் என்பது தான் நமது நோக்கம்.

பொதுவாக எல்லா நாடுகளிலும் நாம் பார்ப்பதெல்லாம் தலைவன் சரியான பாதையில்  போனால் மக்களும் தலைவனைத்தான்  பின்பற்றுவார்கள. நல்ல தலைவன் இருந்தால் நல்ல மக்கள் இருப்பார்கள்.  இலஞ்சம் வாங்கும் தலைவனால்  நாடே இலஞ்சம் தான் வாங்கும்! அதனை நாம் பார்த்தோம்.

பிரிட்டன் பிரதமர் காரில் பயணம் செய்யும் போது பாதுகாப்பு பட்டையை அணியவில்லையென்பதால்  அவர் மீது அவர்கள் நாட்டு காவல்துறை நடவடிக்கை எடுத்ததாக செய்திகள் வெளியாயின. காவல்துறையின் நடவடிக்கை என்பதே நாமெல்லாம் அண்ணாந்து பார்க்க வேண்டிய ஒரு செய்தியாயிற்று!

நமது நாட்டிலும் இது போன்ற செய்திகள் இனி வரக்கூடும் என்பதை நம்மால் யூகிக்க முடிகிறது. காரணம் எல்லா அநீதிகளிக்கும் ஒரு முற்றுப்புள்ளி உண்டு. அதற்கு எந்த நாடும் விதிவிலக்கல்ல. நமது நாட்டிற்கு இப்போது தான் நேரம் காலம் கூடி வந்திருக்கிறது! 

நாட்டின் வளம் நீதி நேர்மை நாட்டில் தலைவர்கள் மூலமாகத்தான்  வர வேண்டும். நமக்கும் வருகின்ற காலம் வந்துவிட்டது என நம்பலாம்.

No comments:

Post a Comment