Saturday 28 January 2023

பள்ளிகளில் இனப்பாகுபாடு!

 


பள்ளிகள் என்பது வருங்காலத் தலைமுறையை - அறிவார்ந்த சமூகத்தை - இனப்பற்று - நாட்டுப்பற்றோடு வாழ வழிகாட்டுவது பள்ளிகள் தான்.

நாட்டில் தேசியப் பள்ளிகள், சீனப் பள்ளிகள், தமிழ்ப்பள்ளிகள் என்று மூன்று வகையாக பிரிந்திருந்தாலும்  இந்த மூன்று வகைப் பள்ளிகளிலுமே எந்த இனத்தவர் வேண்டுமானாலும் கல்வி கற்கலாம், தடையில்லை. தடை சொல்ல யாருக்கும் உரிமையில்லை.  எல்லா மொழிப் பள்ளிகளுமே நாட்டின் ஒருமைப்பாட்டை  நோக்கித்தான் மாணவர்களை அழைத்துச் செல்லுகின்றன. அதில் ஏதும் ஐயப்பாடு இல்லை. 

ஆனால் ஒரு சில விஷயங்கள் இந்திய, சீன பெற்றோர்களுக்கு மகிழ்ச்சியளிக்கவில்லை என்பதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். இளம் சிறாரிடையே பாகுபாட்டை வளர்ப்பது நிச்சயமாக அது தாய் மொழிப்பள்ளிகளிலிருந்து வரவில்லை. எல்லா இனங்களும் சேர்ந்து கல்வி கற்கும் தேசிய பள்ளிகளிலிருந்து தான் வருகின்றன! 

இது ஒன்றும் புதிதாக - இன்றோ நேற்றோ - பேசப்படுகின்ற பிரச்சனை அல்ல. நீண்ட காலம், இந்தக் குற்றச்சாட்டு,  தேசிய பள்ளிகளின் மேல்  தான் சுமத்தப்படுகின்றது. 

ஆனால் மலாய் ஆசிரியர்களோ, மிக எளிதாக, எந்தக் கவலையுமின்றி,  பொறுப்புணர்ச்சியுமின்றி அதனை -  தாய் மொழிப்பள்ளிகளின் மீதே திருப்பி விடுகின்றனர்!  அவர்கள் குரல் பலமாக ஒலிப்பதால் நாம் சொல்லுவதை கேட்பாரில்லை என்கிற நிலை தான்!

தேசிய மொழிப்பள்ளிகளில் சீன, இந்திய மாணவர்கள் பலவாறாக புறக்கணிக்கப்படுகின்றனர்.  ஆசிரியர்களே,   இந்திய மாணவர்கள் என்றால் ஒரு குழுவாக ஒதுக்கி வைத்து விடுகின்றனர்.  நன்றாக படிக்கிறார்களோ இல்லையோ "நீங்க எல்லாம் ஒன்னு!"  என்று அவர்கள் மீது அக்கறை காட்டுவதில்லை. அதே வேளை சிலருக்கு  அனைவற்றிலும் முன்னுரிமை கொடுக்கின்றனர்! அது கல்வி மட்டும் அல்ல, விளையாட்டு போன்ற மற்ற துறைகளிலும் இது நடக்கத்தான் செய்கிறது!

இந்த புறக்கணிப்பின் ஊச்சம் தான் சமீபத்தில் ஜோகூர்பாருவில் நடந்த நிகழ்வு. சீனப்புத்தாண்டு கொண்டாடத்தின் போது எஸ்.பி.எம்.  மலாய் மாணவர்களுக்கு என்றே தனியாக வகுப்பு எடுத்தது! அவர்களைப் பொறுத்தவரை அது ஒன்றும் புதிதல்ல. எல்லா ஆண்டுகளிலும் நடைபெறும் நிகழ்வு தான்.  இந்த ஆண்டு எப்படியோ  அது கசிந்துவிட்டது!  அது தவறாக நடந்தாலும் அதனை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் அவர்களுக்கில்லை!

இது போன்று பிரித்துப் பிரித்துப் பார்ப்பது தான் இன்றைய நமது கல்வி முறை. ஒரு பக்கம் இப்படி செய்வதும் இன்னொரு பக்கம் தாய்மொழிப்பள்ளிகள் தான் பிரிவினையை வளர்க்கின்றன என்று சொல்லுவதும் கதை தான்! வேறு என்ன?

No comments:

Post a Comment