Tuesday 24 January 2023

வெளி நாட்டவரின் வியாபாரம் !

 

வெளி நாட்டவரின் வியாபாரம் என்று சொல்லும் போது  பெரும் பெரும் நிறுவனங்களைச் சொல்லவில்லை.

நமது நாட்டில் வேலை செய்ய வந்தவர்கள். குறிப்பாக வங்காளதேசிகள், இந்தியர்கள், பாக்கிஸ்தானியர், மியன்மார், நேப்பாளிகள் - இவர்கள் அனைவரும்  இங்கு வேலை செய்ய வந்தவர்கள்.  நமது நாடு மட்டும் அல்ல மற்ற நாடுகளிலும் வேலை தேடி போகுபவர்கள் எல்லா நாடுகளிலும் உண்டு. நம் நாட்டிலும் உண்டு. இதில் ஏதும் அதிசயம் இல்லை.

ஆனால் மற்ற நாடுகளில் இல்லாத ஒன்று நம் நாட்டில் உண்டு. இங்குப் பிழைக்க வந்த வெளிநாட்டவர் பலர் இங்கு வியாபாரம் செய்ய தாராளமாக அனுமதிக்கப்படுகின்றனர்.  அதில் தான் சிக்கல்.  வேறு எந்த ஒரு நாட்டிலும் இது போன்ற சிக்கல் இல்லை!

இன்று நாடு முழுவதிலும் சிறிய, பெரிய வியாபாரங்களில் வங்காளதேசிகள், பாக்கிஸ்தானியர்கள் ஈடுபட்டிருக்கின்றனர். சிறிய வியாபாரங்கள் என்றால் வங்காளதேசிகள், பெரிய வியாபாரங்கள் என்றால் பாக்கிஸ்தானியர்!  இது எப்படி சாத்தியமாகும் என்கிற கேள்வி எழத்தான் செய்கிறது.  அதுவும் குறிப்பாக இந்தியர்கள் செய்கின்ற சிறு சிறு வியாபாரங்கள் அனைத்தையும் அவர்கள் பறித்துக் கொண்டனர் என்று தான் சொல்ல வேண்டும் பாக்கிஸ்தானியரும்  அதே வேலையைத் தான் செய்கின்றனர்!

இப்போது நாம் வெளிநாட்டவர் இங்கு வந்து வியாபாரம் செய்ய முடியுமா என்று பார்த்தால்  முடியாது என்பது நமக்குத் தெரியும். இங்கு மட்டும் அல்ல எல்லா நாடுகளிலும் உள்ள நடைமுறை  அது தான். வெளிநாட்டவர் இப்படி வியாபாரங்களில் ஈடுபட்டால் உள்நாட்டவர்  செய்கின்ற சிறு சிறு தொழில்கள் பாதிக்கப்படும் என்பதற்கு அரசாங்கத்திற்குத் தெரியாமலா போகும்? தெரியும் ஆனால் கண்டு கொள்வதில்லை!  இலஞ்சம் என்று ஒன்று  வந்துவிட்டால் அது அதிகாரிகளின் கண்களை மறைத்துவிடும் என்பது நாம் அறிந்ததுதான். அதுவும் வங்காளதேசிகள் நமது நாட்டைப்பற்றி தேவைக்கு அதிகமகாவே தெரிந்து வைத்திருக்கின்றனர்.  பணத்தை வீசினால் எதுவும் கிடைக்கும் என்பது தான் மலேசியாவைப் பற்றிய அவர்களின் பார்வை!

இப்போது நாட்டின் ஒரு சில இடங்களில் வெளிநாட்டு வர்த்தகர்கள்  மீது நடவடிக்கைகள்  எடுக்கப்பட்டு வருகின்றன. கோலாலம்பூர் மாநாகர் மன்றமும்  எடுக்க ஆரம்பித்திருக்கிறது.  இன்னும் அனைத்து மாநிலங்களிலும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.  ஆனால் இது தற்காலிக நடவடிக்கையா  என்பதும்  தெளிவில்லை!

நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை மட்டும் யாரும் மறுக்க முடியாது!

No comments:

Post a Comment