Thursday 26 January 2023

புதிய பதவியை ஏற்கிறார் அருள் குமார்!

                                     நீலாய் சட்டமன்ற உறுப்பினர் அருள் குமார்

நீலாய் சட்டமன்ற உறுப்பினரும்,  நெகிரி செம்பிலான் ஆட்சிக்குழு உறுப்பினருமான அருள் குமார் ஜம்புநாதன் பதவி மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார் 

ஒன்று தெரிகிறது. வரும் சட்டமன்ற தேர்தலில் அவருக்கு இடமில்லை  என்பது உறுதியாகிறது. அந்த ஏமாற்றத்தைச் சரிகட்டவே இந்தப் புதிய பதவி அவருக்குக் கொடுக்கப்படுகிறதா என்பது தெரியவில்லை!

ஆனாலும் நம்மிடையே ஒரு கேள்வி உண்டு.  வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் அருள் குமார் தேர்ந்தெடுக்கப்பட்ட  அவரின் நீலாய் சட்டமன்றம் யாருக்குக் கொடுக்கப்படும் என்பது  நமக்கு முக்கியம்.

அதற்குக் காரணம் உண்டு. போர்ட்டிக்சன் நாடாளுமன்றத் தொகுதி காலங்காலமாக இந்தியரின் தொகுதி என்று ஒரு நிலை இருந்தது. ஆமாம், அம்தக் காலத்தில் மாண்புமிகு மகிமா சிங் தொட்டு அது இந்தியரின் தொகுதியாகவே கருதப்பட்டு வந்தது. ஆனால் இடையே இன்றைய பிரதமர் அன்வார் இப்ராகிம் அங்கு ஒரு இடைத்தேர்தலை நடத்தி அவர் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார். அப்போது அங்கு  நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர் பாலகோபாலன்.  அது இந்தியர் தொகுதி என்றாலும் அன்வார் என்றவுடன் யாரும்  எதிர்ப்பைக் காட்டவில்லை. அது வருங்கால பிரதமரின் தொகுதி என்கிற ஒரு எண்ணம் இந்தியரிடையே இருந்தது. 

ஆனால் 15-வது பொதுத் தேர்தலின் போது அன்வார் வேறு தொகுதியில் (தம்பூன், பேராக்) போட்டியிட்டு வெற்றிபெற்றார். ஆனால் காலங்காலமாக இந்தியர் தொகுதி என்று வர்ணிக்கப்பட்ட போர்ட்டிக்சன் தொகுதியை அன்வார் அதனை மலாய்க்காரர் தொகுதியாக மாற்றிவிட்டுப் போய்விட்டார்! அப்படியென்றால் ஒரு நாடாளுமன்ற தொகுதி இருந்ததும் போய்விட்டது!

இப்போதும் அதுவே நடக்கலாம் என்கிற ஐயம் ஏற்படத்தான் செய்கிறது. அதாவது  இந்தியரின்  ஒரு சட்டமன்ற தொகுதி  குறைக்கப்பட்டு வேறு யாருக்கோ கை மாறப்போகிறது  என்று நம்மால் கணிக்க முடிகிறது!  அந்தோணி லோக் சும்மா ஒருவரை தனது அரசியல் செயலாளராக வைத்துக்கொள்ள அவர் என்ன அரசியல் அறியாதவரா?

நமது கவலையெல்லாம் ஒரு நாடாளுமன்றம் நமது கையைவிட்டுப் போய்விட்டது. இப்போது ஒரு சட்டமன்றம் கையை விட்டுப் போகப்போகிறது. அந்த சட்டமன்றம் இந்தியருக்குக் கொடுக்கப்பட்டால் நமக்கு மகிழ்ச்சி தான். ஆனால், வழக்கமாக சொல்லுவது போல, இது அரசியல். எதுவும் நடக்கலாம்.   தொடர்ந்து நம்மீதே கைவைப்பதை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

மாண்புமிகு அருள்குமார் அவர்களுக்கு நமது வாழ்த்துகள்!

No comments:

Post a Comment