Sunday 8 January 2023

சிறுபான்மை, ஆனால் ஏகப்பட்ட கட்சிகள்!

 

                                         சிறுபான்மை உரிமை செயல் கட்சி (மிரா)

நமது நாட்டைப் பொறுத்தவரை மூன்று பெரும் இனத்தவர்களில்  நாம் மூன்றாவது பெரும்பான்மை இனத்தவர்கள்.  சுமார் 32,00,000 இலட்சம் இந்தியர்கள் இந்நாட்டில் வாழ்வதாக கூறப்படுகின்றது. மலாய்க்காரர்களும், சீனர்களும்  முதலாவது இடத்திலும் இரண்டாவது இடத்திலும் இருக்கின்றனர்.

ஆனாலும் ஒரு சிறுபான்மை இனத்தினருக்கு கணக்கில் அடங்கா சிறு சிறு கட்சிகள் நிறையவே உண்டு! இத்தனை கட்சிகளும் இந்தியர்களுக்கு என்ன தான் சேவைகள் செய்திருக்கின்றன என்று கேட்டால் அவர்களுக்குக் கோபமே  வந்துவிடும்! அதெல்லாம் நாம் கேட்கக் கூடாது!

தேர்தல் காலங்களில் நிறைய புதிய புதிய இயக்கங்கள்  அரசியல் கட்சிகள் தீடீரென உதயமாவதை நாம் பார்த்திருக்கிறோம்.  இயக்கங்கள் என்றால் ஏதோ  நிகழ்ச்சிகள் என்று சொல்லி பணம் சம்பாதிப்பதை நாம் பார்க்கிறோம்.

புதிய கட்சிகள் ஆரம்பிக்கிறார்களே இவர்களுக்கு என்ன இலாபம்? உண்டு. வசதி உள்ளவர்  அல்லது செல்வாக்கு உடையவர் அல்லது கொஞ்சம் பணம் படைத்தவர் - இவரைப் போன்றவர்கள்  கட்சி ஆரம்பிப்பதில் சில நடைமுறைகளையெல்லாம் தாண்டி எளிதாக தலைமைப் பீடத்திற்கு எளிதாகச் சென்றுவிடுவார்கள்!  கீழிருந்து  மேல்  நிலைக்குச் செல்ல இந்தச் சிறிய கட்சிகள் அவர்களுக்கு ஊன்றுகோலாக இருக்கும்! 

ஒரு கட்சியை ஆரம்பித்த பின்னர் ஆளுங்கட்சியுடன் இணைந்து கொள்வார்கள். அப்படி இணைந்து கொளவதன் மூலம்  தலைவர் சில சுகபோகங்களை அனுபவிப்பார்.  ஒரு வேளை தேர்தலில் போட்டியிட வாய்ப்புக் கிடைக்கலாம்! செனட்டர் பதவி கிடைக்கலாம்! டத்தோ போன்ற பட்டங்கள் கிடைக்கலாம்! அரசாங்க நிறுவனங்களில் பதவிகள் கிடைக்கலாம்!

கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் ஒன்று புரியும். இந்த சிறு கட்சிகளின் தலைவர்கள் எந்த ஒரு கட்சியிலும்  அடிமட்டத்திலிருந்து சேர்ந்து பணியாற்றவில்லை. கட்சிக்காக உழைக்கவில்லை.  மற்றவர்களுடன் போட்டி போட்டு எந்த பதவிக்கும் வரவில்லை. அதெல்லாம் நீண்ட நாள் உழைப்பு என்பது அவர்களுக்குத் தெரியும். அதனால் அவர்கள்  கட்சி ஆரம்பித்து பதவிகளையடைவது  எளிது என்பதைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்! மற்றபடி அவர்களுக்கு எந்த கொள்கையும் இல்லாதவர்கள்!

ஆக இப்போது புரிந்திருக்க வேண்டும். ஏன் திடீர் திடீரென கட்சிகள் புதிது புதிதாக முளைக்கின்றன என்பதற்கான காரணங்கள்! சிறுகட்சிகள் - ஏன் இவர்களை சிறுகட்சிகள் என்கிறோம் என்றால் - இவர்களால் கட்சிகளை வளர்க்க முடியாது - அதோடு வரவு செலவு அனத்தும் தலைவரே பார்த்துக் கொள்வார்! அவர்கள் வளர விரும்புவதில்லை! யாரும் போட்டிக்கு வந்துவிடுவார்களோ என்கிற பயம் வேறு!

பெரிய கட்சிகள் இவர்களை அண்ட விடக்கூடாது என்பது தான் நாம் விடுக்கும் அறைகூவல்!

No comments:

Post a Comment