Sunday 29 January 2023

மீண்டும் குழப்பங்கள் வருமா?

 

                    மலேசிய அரசியலில் மீண்டும் குழப்பம் வருமா?

மலேசிய அரசியலில் மீண்டும் குழப்பம் வருமா என்று அரசியல் விமர்சகர்களால் பேசப்பட்டு வருவது தான் இப்போதைய கடைத்தெரு கல்வீச்சுகள்!

ஆனால் மக்களிடையே ஏதோ ஒரு வகையில்  பிரதமர் அன்வார்  மீது அலாதி நம்பிக்கையுண்டு. "இதுவும் கடந்து போகும்"  என்பது போல இதனையும் அவரால் சமாளிக்க முடியும்  என்று மக்கள் நினைக்கிறார்கள். ஏன் என்னைப்போன்ற சாதாரணர்களே அப்படித்தான் நினைக்கிறோம்!

ஆமாம் அன்வாரின் அரசியலுக்கு இப்போது என்ன ஆபத்து வந்துவிட்டது? நேரடியாக அப்படி ஒன்றும் தெரியவில்லை என்றாலும் மறைமுகமாக  வேலைகள் ஆரம்பமாகிவிட்டன என்று தான்  பேசப்படுகின்றது.

சமீபத்தில் நடைபெற்ற அம்னோ மாநாட்டில் சில முக்கியமான நபர்கள் முற்றிலுமாக தூக்கப்பட்டிருக்கின்றனர்! இன்னும் சிலர் சில ஆண்டுகளுக்குக் கட்சியிலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கின்றனர்! அதில் மிக மிக முக்கியமானவர் என்றால் அது ஹிஷாமுடின் ஹுசேனாகத்தான்  இருக்க முடியும்! மிக ஆபத்தான மனிதர் என்று நம்பப்படுபவர். இவரும் முன்னாள் பிரதமர் முகைதீனும் ஒன்று சேர்ந்தால்  நாட்டில் எல்லா விதக்குழப்பத்தையும் ஏற்படுத்தும் திறன் பெற்றவர்கள்! யாரும் எதிர்பாராத திசையிலிருந்து அம்பை எறிபவர்கள்!

சமீப தேர்தலில் பெரிகாத்தான்  நேஷனல் பெரிய அளவில் வெற்றிபெற்றதற்கு அவர்கள் அள்ளி வீசிய பணம் தான் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்!

முகைதீன் எந்தக் காலத்திலும் எதைப்பற்றியும் கவலைபடாத ஒரு மனிதர். அவரது நலன் ஒன்றே அவருக்குப் பிரதானம்!  அவர் மீண்டும் பிரதமர் பதவிக்கு வரவேண்டும் என்பதில் குறியாய் இருப்பவர்! அவரது கட்சியிலோ அல்லது அவரது கூட்டணி கட்சியிலோ வேறு யாரும் வந்துவிடக் கூடாது என்பதில் மிகக் கவனமாக கண்காணித்து வருபவர்! மக்களுக்கு என்ன நேர்ந்தாலும் அதைப்பற்றி கவலைபடாதவர்!  பிரதமருக்கு உள்ள தகுதி அவருக்கு இல்லை என்றால் அதனை அவர் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை!

அம்னோவில் நேர்ந்த களையெடுப்பு அது பல வழிகளிலும் எதிரொலிக்கும் என்று சொல்லப்படுகிறது.  இன்னும் சில மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல்கள் வரப்போகின்ற நிலைமையில் அதன் முடிவுகள் எப்படி இருக்கும் என்று கணிக்க முடியாது. முகைதீன் எந்த அளவுக்கு பண அரசியலில் ஈடுபடுவார்  என்பது பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். தேர்தல் சட்டங்கள் கடுமையாக்கப்பட்டால் பண அரசியல் பெரிய அளவில் எடுபடாது என்று சொல்லலாம்.

மீண்டும் குழப்பங்கள்  வந்தாலும் அவை தயவு தாட்சண்யமின்றி  தீர்க்கப்படும் என நான்புகிறோம்!

No comments:

Post a Comment