Wednesday 11 January 2023

தொடர வேண்டாம்!

 

பொதுத் தேர்தல் முடிந்து மூன்று மாதங்கள் ஆகிவிட்டன. எப்படியோ ஒற்றுமை அரசாங்கம் என்னும் பெயரில் அன்வார் இப்ராகிம் தலைமையில் அரசாங்கம் அமைந்துவிட்டது.

இங்கு ஒன்றைக் கவனிக்க வேண்டும்.  இந்த ஒற்றுமை அரசாங்கத்தில் ம.இ.கா. இடம் பெறவில்லை. அதற்குக் காரணம் தேசிய முன்னணியின் அம்னோ கட்சியினரைத் தான் குறை சொல்ல வேண்டும். நம்பிக்கைக் கூட்டணியை அல்ல. அவர்கள் முற்றிலுமாக அம்னோவில் உள்ளவர்களைத் தவிர வேறு யாரையும் அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ளவில்லை! அதன் இரகசியம் என்னவோ நமக்குத் தெரியாது.

அதைப் பற்றி நாம் பேசப்போவதில்லை.  நாம் பேசப் போவதெல்லாம்  தேர்தல் முடிந்துவிட்டது. மூன்று மாதங்கள் ஆகின்றன. இனி நாம் ம.இ.கா.வும்  வேண்டாம். நம்பிக்கைக் கூட்டணியும் வேண்டாம்.

நாம் முற்றிலுமாக நம்பிக்கைக் கூட்டணியின் பக்கம் சாய்ந்துவிட்டோம்.  இனி இந்தியர் பிரச்சனை என்பது நம்பிக்கைக் கூட்டணியின் கையில்.  நமது பிரச்சனை என்னவென்பது அவர்களுக்குத் தெரியும்.  அவர்கள் தான் பிரச்சனைகளைக் கையில் எடுக்க வேண்டும். வேண்டுமானால் திட்டங்கள் போடட்டும். ஆனால் நீண்ட காலதிட்டங்கள் வேண்டாம்.` ம.இ.கா. போட்ட திட்டங்கள் எதுவும் உருப்பெறவில்லை! நீண்ட காலத் திட்டங்கள் என்பது ஓர் ஏமாற்று வேலை. அடுத்த ஐந்த ஆண்டுகளுக்குள் என்ன திட்டங்கள் தீட்டி வெற்றிகரமாகச் செயல்படுத்த முடியும் என்பது தான் இப்போதைய தேவை.

இந்த ஐந்து ஆண்டு காலத்தில் பல பிரச்சனைகளுக்குத் தீர்வு காணுவது நம்பிக்கைக் கூட்டணியின் பொறுப்பு.  தமிழ் கல்வி, உயர் கல்வி,  தனியார் துறை  வேலைவாய்ப்புகள், அரசு வேலைவாய்ப்புகள், தொழில் செய்வதற்கான கடன் உதவிகள் - இவைகள் எல்லாம் உடனடடியாக செய்ய வேண்டியவை. இதற்காக ஆண்டுக் கணக்கில் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.

இந்த நேரத்தில் ம.இ.கா. வைப்பற்றி எந்த விமர்சனமும் வேண்டாம். அவர்களால் முடியாது என்பதால் தான் நாம் அவர்களைக் கை கழுவிவிட்டோம்! திரும்பத் திரும்ப அவர்களைப் பற்றி பேசி வம்பு இழுப்பதால் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை. இப்போது நமது தேவை எல்லாம் நமது நாடாளுமன்ற/சட்டமன்ற உறுப்பினர்களின் அடுத்த நடவடிக்கை என்ன என்பது தான். அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது மக்களுக்குத் தெரிய வேண்டும்.

ம.இ.கா. செய்தது போல எந்த இரகசியமும் நமக்கு வேண்டாம்.  அது அவர்களது பாணி. இரகசியம் என்றால் கொள்ளையடிப்பதைத் தவிர பெரிதாக வேறொன்றும் இல்லை! அது நமக்கும் தெரியும்.

இங்கு நாம் சொல்ல வருவதெல்லாம் ம.இ.கா.வினர் அவர்கள் வேலையை அவர்கள் பார்க்கட்டும். இனி கட்சியைப் பலப்படுத்துவதே தான் அவர்களது வேலை. அவர்களது பிரச்சனைகளில் தலையிட வேண்டாம். நம்பிக்கைக் கூட்டணி தங்களது வேலைகளைச் செய்யட்டும். நாம் அவர்களுடன் ஒத்துழைப்போம். காரணம் இவர்கள் மூலம் நாம் இழந்ததை மீட்டெடுக்க வேண்டும்.

சண்டை சச்சரவு இல்லாமல் நமது பணிகளை நாம் செய்வோம்!

No comments:

Post a Comment