Saturday 14 January 2023

தேவையான ஒன்று தான்!

 

இன்று மக்காவ் மோசடி கும்பல் என்றாலே மலேசியர்கள் பயப்படும்படியான ஒரு  சூழல் ஏற்பட்டுவிட்டது!

அதனைத் தீர்க்க முடியுமா, முடியாதா என்று ஒரு பக்கம் விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. இது நாள்வரை இந்த மோசடிக் கும்பலிடமிருந்து காவல்துறையினரால் மக்களைக் காப்பாற்ற முடியவில்லை.

இந்த மோசடி பல ஆண்டுகளாகவே நடந்து கொண்டிருந்தாலும் இப்போது தான்  காவல்துறையிடமிருந்து ஒருசில நடவடிக்கைகள் ஆக்கப்பூர்வமான  முறையில் செயல்பட ஆரம்பித்திருக்கிறது. .  தாமதம் தான் என்றாலும் பாதகமில்லை! நல்லது எப்போது நடந்தாலும் நல்லது தான்!

இணைய மோசடிகளை உடனடியாக காவல்துறை கவனத்திற்குக் கொண்டுவர நிகழ்வு நடந்த மறு நிமிடமே அல்லது 'நான் ஏமாந்து போனேன்!' என்று நினைத்த மறு நிமிடமே மேலே கொடுக்கப்பட்டிருக்கும் 997 எண்ணுடன் தொடர்பு கொள்ளலாம். ஒரு சில நிகழ்வுகளை காவல்துறை உடனடியாகவும் கண்டுபிடிக்கலாம் அல்லது  தாமதமும் ஆகலாம்.  ஆனால் புகார் தெரிவிப்பது நமது கடமை. அதனைத் தவறாமல் செய்ய வேண்டும்.

கடந்த  ஜனவரி 14-ம் தேதி முதல்  997 சேவைமையம் 24 மணி நேரமும் செயல்பட்டுக் கொண்டிருக்கும் என்பதாக காவல்துறை அறிவிக்கிறது.

இணைய மோசடி நாட்டில் மிகப்பரவலாக இப்போது நடந்து கொண்டிருக்கிறது. இதில்  எத்தனை மோசடிகள் கண்டு பிடிக்கப்பட்டிருக்கின்றன என்பது சரியான விவரங்கள் இல்லை. நாம் எவ்வளவு தான் கவனமாக இருந்தாலும்  மோசடி செய்பவர்கள் பலவிதமான யுக்திகளைப் பயன்படுத்தி மக்களை ஏமாற்றி விடுகின்றனர்.

இவர்களின் மோசடிகளிலிருந்து மக்கள் விடுபட வேண்டும் என்பதே நமது எண்ணம். அவர்கள் எங்கிருந்து, எந்தக் கோணத்திலிருந்து செயல்படுவார்கள் என்று நம்மால் யூகிக்க முடியவில்லை. ஒன்றை மட்டும் தேர்ந்தெடுத்து அவர்கள் ஏமாற்றினால் அவர்களைக் கண்டுபிடித்து விடலாம். ஆனால் அப்படியல்ல! வெவ்வேறு யுக்திகள்!

இப்போது காவல்துறை சில முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது. நாமும் நமது ஒத்துழைப்பை அவர்களுக்குக் கொடுப்போம். 

புகார் மையம் தேவையான ஒன்று. அதனைப் பயன்படுத்துவது நமது கடமைகளில் ஒன்று!


No comments:

Post a Comment