Friday 6 January 2023

அசுத்தமான உணவகங்கள்!

 

                                        அசுத்தமான உணவு தட்டுகள்

பெரும்பாலான உணவகங்கள் விலைகளை ஏற்றிவிட்டன. நாம் அதனைப் புரிந்து கொள்கிறோம். பல உணவகங்கள் மூடப்பட்டுவிட்டன. நமக்குப் புரிகிறது.  கோவிட்-19  தொற்று வந்த பின்னர் பல பல பிரச்சனைகள் உருவாகிவிட்டன. உணவகங்களே அதிகம் பாதிக்கப்பட்டன. வேலைக்கு ஆளில்லை.  அவர்களுக்குச் சம்பளம் கொடுக்க முடியவில்லை.  வேலையில்லாத நிலையில் உணவகப் பணியாளர்கள் பலர் தங்களது தாயகம் திரும்பிவிட்டனர்.

இப்போது தான் உணவக உரிமையாளர்களால் கொஞ்சம் மூச்சுவிட முடிகிறது. வாடிக்கையாளர்கள் வந்து கொண்டிருக்கின்றனனர். ஆனால் இப்போது பிரச்சனை மாறிவிட்டது. குறைவான வேலையாட்களை வைத்துக் கொண்டு தொழிலைச் செய்ய வேண்டி உள்ளது.

ஆனாலும் அந்தப் பொறுப்பு வியாபாரிகளுடையது. வேலையாட்கள் குறைவு.   அவர்கள் மீண்டும் வேலையாட்களை அதிகரிக்க வேண்டும். அது அவர்களுடைய பொறுப்பு. 

விலைகளைல்லாம்  அதிகரித்துவிட்டன. அதனால் உணவு விலைகளையும் ஏற்ற வேண்டிய கட்டாயம்.  எல்லாம் சரி தான். எல்லாவற்றையும் ஏற்றிவிட்டு வாடிக்கையாளர்களுக்குக் கொடுக்கும் உணவுகளின் தரம்  ஒரு பக்கம் குறைந்து போய்விட்டது. தரம் குறைந்த உணவுகளைக் கொடுத்துவிட்டு, விலைகளையும் ஏற்றிவிட்டு, தரமற்ற உணவு பாத்திரங்களைப் பயன்படுத்தி உணவு பரிமாறுவது என்பதில்  எந்த நியாயமும் இல்லை.

சமீபகாலமாக உணவகங்களில் ஏகப்பட்ட குளறுபடிகளைக் காண்கின்றோம். நிறைய குறைபாடுகள்.  வாடிக்கையாளர்கள் முதலில் விலையைப் பார்க்கின்றனர். ஆமாம், பார்க்கத்தான் வேண்டியுள்ளது. அந்த அளவுக்கு  விலையேற்றம். இப்போதெல்லாம் விலைகளைக் கணிக்க முடியவில்லை.  முன்பு ஐந்து வெள்ளி என்றால் இப்போது முப்பது வெள்ளிக்கு எகிறிவிட்டன! விலையற்றத்தை ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் இந்த அளவுக்கா என்கிற மலைப்பு நமக்கு ஏற்பட்டு விடுகிறது!

சரி, அதனையும் கொடுத்துவிட்டு வருகிறோம். ஆனால் எந்த அளவுக்குச் சுத்தம் கடைப்பிடிக்கப்படுகிறதா என்றால் அதுவுமில்லை! சுத்தமற்ற உணவு பிளேட்டுகள், கீறல்விட்ட பிளேட்டுகள்! சமையல்கட்டுகளில் பயன்படுத்தும் சுகாதாரமற்ற தட்டுகள், சட்டிகள், பானைகள்! சமைக்கும் இடத்திலேயே கழிவறைகள் - இப்படி ஒர் பக்கம்  அசிங்கமான  காட்சிகள்!

என்ன செய்ய? இப்படித்தான் நமது உணவகங்களின் கண்கொள்ளாக் காட்சிகளைக் கண்கூடாகப் பார்த்து சகித்துக் கொண்டிருக்கிறோம்! ஆனாலும் இது தொடர்கதையாக தொடரக் கூடாது என்பது தான் நமது தாழ்மையான வேண்டுகோள்.

சுகாதாராமற்ற உணவகங்கள் என்றால் இங்கு நாம் எந்த இனம் என்று பார்ப்பதில்லை. ஆனால் நாம் இந்திய உணவகங்களைப் பற்றியே அதிகம் பேசுகிறோம். காரணம் நாம் தான் அவரகளின் முக்கியமான  வாடிக்கையாளர்கள். அதனால் தான் அவர்கள் அதிகம் கல்லடி படுகிறார்கள்.

ஒரு சில உணவகங்கள் செய்கின்ற தவறுகளினால் நாம் எல்லா உணவகங்களையும் குற்றம் சொல்ல வேண்டியுள்ளது. தவறு தான்.  வேறு வழியில்லை!

ஒரு பெரிய குறை என்னவென்றால் உணவகங்கள் சுகாதார அதிகாரிகளால் சரியாக கண்காணிக்கப்படுவதில்லை என்பது மட்டும் அல்ல  அங்கும் பணத்தைக் கொடுத்து சரிப்படுத்தும் வேலையும் நடந்து கொண்டுதான் இருக்கிறது! அதனால் தான் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை!

No comments:

Post a Comment