Friday 13 January 2023

இது தான் கொண்டாட்டமா?

 

                                            நன்றி: வணக்கம் மலேசியா

இந்த செய்தியைப் படிக்கும் போது யாரை நொந்து கொள்வது என்பது நமக்குப் புரியவில்லை.

பரத் குமார் என்னும் அந்த 19 வயது இளைஞருக்கு இப்படி ஆகும் என்று அவரது குடும்பத்தினர் கனவில் கூட நினைத்திருக்க மாட்டார்கள். அந்த ஏழை குடும்பத்தைக் கரை சேர்க்க வேண்டிய இளைஞன் இப்படி ஒன்றுமில்லாமல் போனானே என்று நினைக்கும் போது மனம் கசந்து போகிறது.

என்ன செய்ய? இளைஞர்கள் இப்படி பொறுப்பில்லாமல் நடந்து கொள்கிறார்களே? சினிமா நடிகர்களுக்கு. உலகெங்கிளுமே, விசிறிகள் இருக்கத்தான் செய்கிறார்கள். இல்லையென்று சொல்ல முடியாது. தமிழ் நடிகர்கள் மீதும் எல்லாகாலங்களிலும்  அதீதமான பற்றுள்ள இரசிகர்கள் இருக்கத்தான் செய்தனர்; இருக்கவும் செய்கின்றனர்.  எதுவும் புதிதல்ல.

அப்போதும் அப்பா அம்மா சொல்லைக் கேட்காமல் நடிகர்களை நம்பி கெட்டுப் போனவர்கள் இருந்தனர், இப்போதும் இருக்கின்றனர். அவர்களை யார் என்ன செய்வது? அவர்களாகப் பார்த்து திருந்தாவிட்டால் அப்புறம்,   இதோ,  இந்த இளைஞர் காட்டிய வழிதான்!

அதிலும் நடிகர் அஜித் குமார் தனது ரசிகர்களுக்குப் பலமுறை அறிவுரைகளை அள்ளிக் கொட்டியிருக்கிறார். "உங்கள் குடும்பத்தைக் கவனியுங்கள். உங்கள் வாழ்க்கையை மேம்படுத்துங்கள்" என்று பலமுறை சொல்லியிருந்தும் அவர்கள் காதில் போட்டுக்கொள்வதாகத் தெரியவில்லை.

இப்போது நாம் யாரைக் குற்றம் சொல்வது?  நடிகர்கள் மேல் எந்தக் குற்றமும் இல்லை. அதுவும் அஜித்குமாரோ தனக்கு எந்த ரசிகர் மன்றமும் வேண்டாம் என்று ஒதுக்கித் தள்ளியவர்.

அந்த இளைஞனின் குடும்பமோ இப்போது முற்றிலுமாக அஜித்குமார் ஏதாவது தங்களுக்கு உதவமாட்டாரா என்று தான் நினைப்பார்கள்.  அது  இயல்பு தான். ஆனால் அது கட்டாயம் இல்லை என்பது அவர்களுக்கும் தெரியும்.

இன்றைய ரசிகர் கூட்டம் இந்த இளைஞனுக்கு நடந்த விபத்தை ஒரு பாடமாக எடுத்துக்கொள்ள வேண்டும். நமக்குப் பிடித்த கதாநாயகனின் படங்களைப் பார்க்கலாம்! ரசிக்கலாம்! ஓகோ என்று புகழலாம்! அது போதும்!

அந்தக்  கதாநாயகர்கள் போலவே  நமது வாழ்க்கையும் 'ஓகோ' என்று அமைய வேண்டும். அது தான் அவர்களுக்கும் பெருமை! நமக்கும் பெருமை!

கொண்டாட்டங்கள் பெருமை சேர்க்க வேண்டும்! துணிவு என்று சொல்லி சரிந்து விடக்கூடாது!


No comments:

Post a Comment