Thursday 19 January 2023

அப்படியெல்லாம் நடக்காது, தம்பி!

 

நம் இந்திய இளைஞரிடையே உள்ள பிரச்சனை என்ன? 

சொந்தமாக தொழில் செய்ய வேண்டும் என்னும் ஆசை இப்போது நமது இளைஞரிடையே  அதிகரித்துக் கொண்டு வருவது நமக்கு மகிழ்ச்சியே! 

வரும்போதே ஏதோ பெரிதாகச் சாதித்துவிட வேண்டும் என்கிற ஆசை இருக்கலாம். தவறில்லை. எல்லாருமே சாதனைகள் புரிய வேண்டும் என்று தான் நினைக்கிறோம்

ஆனால் இவர்கள் நினைப்பு இன்னும் அதிகம்! தொழில் ஆரம்பித்து இரண்டு, மூன்று மாதங்களில் பணத்தை அள்ளிக் குவிக்க வேண்டும் என்கிற எண்ணத்தோடு வருவது தான் பேராபத்து!

அப்படியெல்லாம் நடக்க வழியில்லை தம்பி! அதனை நீ முதலில் புரிந்து கொள்ள வேண்டும். இரண்டு மூன்று மாதங்களில் எதையும் சாதித்துவிட முடியாது.

பணத்தை வேண்டுமானால் வாரி இறைக்கலாம்.  பணம் உள்ளவர்களும் தொழில் செய்ய வருகிறார்கள். பணம் இல்லாதவர்களும் தொழில் செய்ய வருகிறார்கள். நோக்கம் என்னவோ ஒன்று தான். பணம் சம்பாதிக்க வேண்டும் என்பது மட்டும் தான்.

ஆனால் இதற்கெல்லாம் மேல் நாம் முதலில் அனுபவத்தைப் பெற வேண்டும். அனுபவம் என்பது சும்மா வந்து விடாது. தொழில் செய்ய செய்யத் தான்  நமக்கு அனுபவம் கிடைக்கும். அனுபவம் இல்லாவிட்டாலும் நாம் செய்கின்ற தொழில் மூலம் அனுபவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். நாம் செய்கின்ற தொழில் மூலமே நமக்கு அனுபவம் கிடைத்துவிடும். 

நமது இளைஞர்கள் பலர் உடனடியாக இலாபம் வரவேண்டும் என்று எண்ணுகின்றனர். இலாபத்தை மறந்து விடுங்கள். நட்டம் ஏற்படாமல்  தொழில் செய்தாலே நீங்கள் சரியான பாதையில் செல்லுகிறீர்கள் என ஏற்றுக் கொள்ளலாம். அல்லது குறைவான இலாபத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறீர்கள் என்றால் கூட அதுவும் சரியான பாதை தான்.

இலாபம் என்பதெல்லாம் உடனடியாக வருவதில்லை. படிப்படியாகத்தான், தொழில் வளர வளர, இலாபமும் அதிகரிக்கும். எந்தத் தொழிலும் உடனடியாக அள்ளிக்கொட்டி விடாது.

தொழில் செய்ய வேண்டும் என்று ஆர்வம் உள்ள இளைஞர்கள் பணமே பிரதானம் என்று நினைத்துக் கொண்டு வராதீர்கள். ஒரு சில இளைஞர்கள் "இரண்டு மூன்று மாதங்கள் வியாபாரம் செய்து பார்ப்போம்!  சரிப்படவில்லை என்றால்  மீண்டும் வேலைக்குப் போய்விடுவோம்" என்கிற எண்ணத்தில் வருகிறார்கள். இந்த மனப்பான்மை தொழிலுக்குச் சரிப்பட்டு வராது.  அரைமனதோடு வருபவர்கள் நம்பிக்கை இல்லாமல் வருகிறார்கள். வந்த வேகத்தில் போயும் விடுகிறார்கள்!

தொழில் என்பது சும்மா தட்டிவிட்டு  ஓடிவிடுவதல்ல! அது ஒரு நீண்ட கால பயணம்.  அது தொடர்ந்து பயணிக்க வேண்டும். பலதலைமுறைகள்  பயணிக்க வேண்டும். அதைத்தான் சீனர்கள் செய்கின்றனர். அதைத்தான் தமிழ் முஸ்லிம்கள் செய்கின்றனர். அதைத்தான் குஜாராத்தியர்கள் செய்கின்றனர். அதைத்தான் தமிழர்களும் செய்ய வேண்டும்.

தொழில் செய்ய வருபவர்கள் அப்படி ஒரு நீண்டகால திட்டத்தோடு வரவேண்டும். தொழிலில் நாம் வளர்ந்து வருகிறோம். தொடர்வோம்!

No comments:

Post a Comment