Monday 23 January 2023

இது எப்படி சரியாக வரும்?

 

இனி வருங்காலங்களில் ஊராட்சி மன்றங்களில் ம.இ.கா.வினருக்கு வாய்ப்புகள் வழங்குவது சரியாக வருமா?

ம.இ.கா.வின் தேசியத் தலைவர்,  டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் அவர்கள்,  நடந்து முடிந்த பொதுத்தேர்தலுக்குப் பின்னர்,  புதிய அமைச்சரவை அமைத்த பின்னர், அவரே வருங்காலங்களில் இந்தியர்களின் பிரச்சனைகளை ம.இ.கா. கண்டு கொள்ளாது, இனி அது பி.கே.ஆர். கட்சியின் வேலை  என்று கூறியாதாக பத்திரிக்கைகளில் அறிக்கைவிட்டார்.   தொடர்ந்து அவர் நாங்கள் ம.இ.கா,வில் உள்ள இந்தியர்களின் நலனில்  மட்டும் அக்கறை காட்டுவோம்  என்பதாகவும் கூறியிருக்கிறார்.

ம.இ.கா. வில் உள்ள இந்தியர்களின் மீது  தான் நாங்கள் அக்கறை காட்டுவோம் என்று அவர் கூறியிருப்பது நம்மைக்  கொஞ்சம் யோசிக்க வைக்கிறது.

ஊராட்சி மன்றங்களின் நியமனம் என்பது குறிப்பிட்ட இனத்தவருக்கு மட்டும் பணிபுரிய அல்ல. எல்லா இனத்தவருக்கும் தான். அது  மட்டுமல்ல. இந்தியர் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை   மேல்மட்டத்துக்கு எடுத்துச் செல்லுவதும்  அவர்களின் வேலை.

இப்படி ஒரு நிலையில் ம.இ.கா.வினர் ஊராட்சி மன்றங்களில் நியமிக்கப்பட்டால்  இவர்களின் பொறுப்பு என்னவாக இருக்கும்?  இவர்கள் சேவை எவ்வாறு அமையும்? சீனர், மலாய் மக்கள் என்றால் அவர்களுக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை. இந்தியர்கள் என்றால் அப்படியல்ல. அவர்கள் ம.இ.கா. அங்கத்தினராக இருக்க வேண்டும். அவர்களுக்கு மட்டும் தான் அவர்கள் சேவை செய்ய வேண்டும் என்று பணிக்கப்பட்டிருக்கிறார்கள்! அப்படியென்றால் அவர்களை ஆதரிக்காதவர்களின் நிலை என்ன? 

இன்றைய நிலையில் ம.இ.கா.வை ஆதரிக்காத இந்தியர்கள் எண்பது விழுக்காட்டுக்கு மேல் என்று சொல்லப்படுகிறது. அப்படி பார்த்தால் ம.இ.கா. ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் எண்பது விழுக்காட்டினருக்குச் சேவை செய்ய முடியாத நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்! சரி, அந்த இருபது விழுக்காடு இந்தியர்கள் கூட எத்தனை பேர் ம.இ.கா. அங்கத்தினர்கள்? இப்படி பல சிக்கல்கள் உண்டு.

இப்படி ஒரு சூழலில் ம.இ.கா.வினரை ஊராட்சி மன்ற உறுப்பினர்களாக சேர்ப்பது யாருக்குப் பயன்? முறைப்படி  பார்த்தால் அவர்கள் மக்களுக்குப் பயனாக இருக்க வேண்டும்.  ம.இ.கா.வினரை நியமிப்பதால் யாருக்கும் பயன் இல்லை! அவர்களுக்கு அது ஏதோ அலங்காரப்  பதவியாக மட்டுமே இருக்கும்!  மற்றபடி எந்தப் பயனும் இல்லை!

ம.இ.கா. தலைவர்கள், முன்னாள் பிரதமர் முகைதீனின் பெரிகாத்தான் நேஷனல்  ஆட்சியைத்தான் விரும்புகின்றனர். அவர்களின் ஆட்சிக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர் என்றும் சொல்லலாம்.  அவரது கட்சி ஆட்சியில் இருந்த போது ம.இ.கா. பெரும் பயன் அடைந்தது. அதனால் அவர்கள் மீண்டும் முகைதீன் ஆட்சிக்கு வரமாட்டாரா என்று அக்கறை காட்டுவதில் இயல்பு தான்!

எது எப்படி இருப்பினும் ஊராட்சி மன்றங்கள் பி.கே.ஆர். கட்சியைச் சேர்ந்தவர்களைத்தான் நியமனம் செய்ய வேண்டும். இப்போதைக்கு ம.இ.கா. வினருக்குக் கொடுப்பது பிரச்சனைகளைத்தான் உருவாக்கும்!

No comments:

Post a Comment