மித்ரா அமைப்பின் தலைவர் டத்தோ ரமணன் நல்லதொரு செய்தியை வெளியிட்டிருக்கிறார்.
மாணவர்களுக்கு, குறிப்பாக பல்கலைக்கழக மாணவர்கள் பலருக்குப் பரவலாக பயன் அடைந்திருக்கிறனர். அது போல பல பாலர்பள்ளிகளுக்கும் உதவிகள் அளிக்கப்பட்டிருக்கின்றன. மருத்துவ செலவுகளுக்கும் - டைலிஸீஸ் - நொயாளிகள் பலர் பயன் அடைந்திருக்கின்றனர். இது இதோடு முற்றுப்புள்ளி அல்ல இன்னும் தொடரும் என எதிர்பார்க்கலாம்.
அனைத்தும் நல்ல நோக்கத்தோடு தான் உதவிகள் அளிக்கப்பட்டிருக்கின்றன. கலவிக்காக கொடுக்கப்படுகின்ற உதவிகள் அனைத்தும் முதலீடுகள். நமது வருங்கால சந்ததியினரின் முன்னேற்றத்திற்கான முதலீடுகள். எதனையும் குறைத்து மதிப்பிட முடியாது. டைலீஸீஸ் மருத்துவ செலுவுகள் உயிரைக் காப்பதற்கான செலவுகள். அவசியம் தேவை.
இந்த செலவுகள் அனைத்தும் அவசியம்; அனாவசியம் என்று சொல்ல இயலாது. ஆனால் சில தயக்கங்களோடு தான் இந்தக் குற்றச்சாட்டை முன் வைக்கிறேன். ஆரம்ப காலத்திலிருந்தே "மித்ரா" என்றால் வர்த்தகர்களின் தரத்தை உயர்த்த வேண்டும் என்கிற நோக்கம் தான் முதன்மையாக இருந்தது. அதுவும் சிறு, குறு தொழிலுக்கான ஒரு வங்கியாக இயங்க வேண்டும் என்பது தான் அப்போது வர்த்தகர்களுக்கு வாக்குறுதி அளிக்கப்பட்டது.
ஆனால் இப்போது அது பற்றி டத்தோ ரமணன் வாய் திறப்பதில்லை. ஒரு பக்கம் சிறு தொழில் செய்வோரை "மித்ரா" அலட்சியப்படுத்துகிறது என்று கூட சொல்லலாம். இப்போதும் பலர் கேள்வி எழுப்பிக் கொண்டு தான் இருக்கின்றனர். நம் இளைஞர்கள் பலர் சிறு சிறு தொழில்கள் செய்து கொண்டிருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது. அவர்களில் பலர் "மித்ரா" வின் உதவியை எதிர்பார்க்கின்றனர்.
ஆனால் இங்குள்ள பிரச்சனை, என்னவென்றால் மித்ரா வெளியே போய், அறிந்து, ஆராயந்து யாருக்கும் கடன் கொடுக்கத் தயாராக இல்லை கடன் தேவைப்படுவோருக்கோ அவர்களுடைய அலுவலகம் எங்கிருக்கிறது என்று கூட தெரியவில்லை! இதையெல்லாம் தெரிந்தும் அவர்கள் மனு செய்யலாம் என்றால் ஏகப்பட்ட கெடுபிடிகள். ஏகப்பட்ட விண்ணப்பத் தாள்கள். அவைகளை பூர்த்தி செய்யவே சில மணி நேரங்கள் எடுக்கும்!
இந்த விண்ணப்பத் தாள்கள் எளிமையாக இருக்க வேண்டும். சீக்கிரத்தில் பூர்த்தி செயவதாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் தொழில் செய்பவர்களுக்கான கடன் என்றுமே கிடைக்கப் போவதில்லை. வழக்கம் போல ஏதோ குற்றம் குறைகளைச் சொல்லிக் கொண்டே போக வேண்டியது தான்.
கடைசியாக, ஒவ்வொரு நாடாளுமன்றத்திற்கும் ஏன் மித்ராவிலிருந்து பணம் போக வேண்டும்? அதையும் கொஞ்சம் விளக்கி விடுங்கள். மற்றபடி இப்போதைக்கு மன நிறைவு தான்!
No comments:
Post a Comment