Monday 7 August 2023

நமது எதிர்காலம் முக்கியம்!

 

ஓர் உண்மையை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

தேர்தல் என்றால் ஏதோ  'வந்தோம் போனோம்'  என்பதல்ல.  அது நமது வருங்காலம்.  நமது சமுதாயத்தின் வருங்காலம். அது நமது ஜனநாயகக் கடமை என்று சும்மா கடமைக்காக  யாருக்கோ வாக்கை  அளிப்பதல்ல.

அது நமது பொறுப்புணர்ச்சியைக் காட்டக் கூடியதாக இருக்க வேண்டும். தொடர்ந்து நாம் குடிகாரச் சமுதாயம் என்று முத்திரையோடு தான் வாழ வேண்டும் என்கிற  எண்ணம் நமக்கிருந்தால் அது எளிது. எந்தவொரு சிந்தனையும் நமக்குத் தேவை இல்லை.  எவனாவது மதுபானம் வாங்கிக் கொடுத்தால் அவனுக்கே வாக்களிக்கலாம்!

நமக்கு எல்லாகாலங்களிலும்  குடிகார முத்திரை மட்டும் அல்ல 'எஸ்டேட்காரன்' என்கிற முத்திரையும் உண்டு.  நமது வாக்குகளை நம்பி வாழும் அரசியல்வாதிகளே நம்மை 'எஸ்டேட்காரன்' என்று சொல்லி கேவலப்படுத்துகிறார்கள்.  இது சமீபத்தில் கூட நடந்தது.

நாம் எல்லாவற்றையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.  நமது தாய் மொழிக்கல்வி, கல்வியில் நமது எதிர்காலம்,  நமது பொருளாதார உயர்வு - இவகளையெல்லாம் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

கடந்த காலங்களிலும் நாம் பெரும் அளவில் ஏமாற்றப்பட்டோம். அதில் நமது தலைவர்களின் பங்கும் உள்ளது. அதை விடுவோம்.

ஆனால் இப்போது நாம் ஏமாறத் தயாராக இல்லை.  அறிவார்ந்த ஒரு சமூகத்தை  காலங்காலமாக ஏமாற்றுவது இயலாத காரியம்.  ஏமாந்ததை மறவோம். இனி  ஏமாறாமல் இருக்க உறுதி பூணுவோம்.

நம்மிடையே கோடரிக்காம்புகள் நிறையவே  உள்ளனர். அது ஒரு துரோகக் கும்பல். இனத் துரோகிகள். காட்டிக் கொடுக்கும் கயவர்கள். எல்லாகாலங்களிலும் நமது ஒற்றுமையைக் குலைக்கும் குள்ள நரிகள். அவர்களுக்கு அரசாங்கம் மூலம் ஏதோ  விருதுகள்  கிடைக்கிறது என்றால்  அவர்கள்  சமுதாய நலனையே மறந்துவிடுவார்கள்.

நம் அறுபதற்கு மேற்பட்ட ஆண்டுகள்  பயணம் கீழ்நோக்கியே சரிந்து கொண்டே வந்திருக்கிறது. இது தான் ஆச்சரியம்.   "நாங்கள் அதைச் செய்தோம்! இதைச் செய்தோம்" என்று மார்தட்டினாலும்  பொருளாதாரத்தில் மட்டும்  நாம் மார்தட்ட முடியவில்லை! நம்மை முதலீடாக வைத்து தலைவர்கள் தான்  இப்போது மார்தட்டிக் கொண்டிருக்கிறார்கள்!

போனது போகட்டும். இனிமேலாவது விழிப்படைவோம். இன்றைய பிரதமர் அன்வார் இப்ராகிம்  இந்திய சமுதாயத்திற்கு நம்பிக்கை நட்சத்திரமாக இருக்கிறார். அவரை இந்த சமுதாயம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.  கட்சித் தலைவர்கள் வாய்மூடி மௌனியாக இருந்தால் சமுதாயமே நேரடியாகக் களத்தில் இறங்க வேண்டும்.

இன்றைய நிலையில் நமது ஆதரவு அன்வார் பக்கம் தான் இருக்க வேண்டும்! நமது அசைக்க முடியாத ஆதரவை அவருக்குத் தருவோம்!

No comments:

Post a Comment