நன்றி: வணக்கம் மலேசியா
மித்ரா அமைப்பு இப்போது பின்னுக்குத் தள்ளப்பட்டு இனி தெக்கூன் முன்னுக்குத் தள்ளப்படுகிறதோ என்கிற எண்ணத்தை ஏற்படுத்துகிறது சமீபத்திய நடவடிக்கைகள்.
தொழில் முனைவர் மேம்பாடு மற்றும் கூட்டுறவு அமைச்சர் டத்தோ எவோன் பெனெடிக் அவரது துணை அமைச்சர் டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன் இருவரும் சந்தித்து உரையாடிருக்கின்றனர்.
அந்த உரையாடலின் போது டத்தோ ரமணன் அவர்கள் இப்போது இந்தியர்களின் தொழில் முனைவர் மேம்பாட்டிற்காக தெக்கூன் மூன்று கோடி வெள்ளி ஒதுக்கியிருக்கிறது என்பதோடு அதனை இன்னும் அதிகரிக்க வேண்டும் என்பதாகப் பெசியிருப்பதாகவும் தெரிகிறது.
டத்தோ ரமணன் அவர்களின் பரிந்துரையை வரவேற்கிறோம். மூன்று கோடி வெள்ளி என்பது போதாது தான். இத்தனை ஆண்டுகள் தெக்கூன் பற்றி பலர் அறிந்திருக்கவில்லை. அதனால் அந்தப் பணம் இந்திய தொழில் முனைவர்களுக்குச் சரியாக சென்று சேரவில்லை என்பதையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். ஆனால் இப்போது மித்ராவில் ஏற்பட்டிருக்கும் சச்சரவினால் தெக்கூன் பலரின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
ஆனாலும் டத்தோ ரமணன் அவர்களுக்கு நாம் ஞாபகத்திற்குக் கொண்டுவருவது: இந்தப் பணம் இந்திய தொழில் முனைவோருக்கு மட்டுமே இருக்க வேண்டும். அந்தத் தொகை அதிகரிக்கப்பட்டாலும் அப்படித்தான் இருக்க வேண்டும். அதாவது நூறு விழுக்காடு தொழில் முனைவோருக்காவே இருக்க வேண்டும்.
உண்மையைச் சொன்னால் இப்போது தெக்கூன் மட்டுமே இந்திய தொழில் முனைவோருக்குக் கைகொடுக்கும் என்கிற நிலை ஏற்பட்டிருக்கிறது. மித்ராவைப் பற்றி நம்மால் எதனையும் கணிக்க முடியவில்லை. முன்னாள் ஒற்றுமைத்துறை அமைச்சர் செய்த சில அடாவடித்தனங்களால் அந்த அமைப்பு பிரதமர் துறைக்கு மாற்றப்பட்டது. இப்போது மீண்டும் ஒற்றுமைத்துறை அமைச்சு என்றால் அதற்குக் கடைசி காலம் நெருங்குகிறதோ என்று நினைக்கத் தோன்றுகிறது.
நம்முடைய ஆலோசனை எல்லாம் கடனுதவி வெவ்வேறு வகையில் நமக்குக் கிடைக்கத்தான் செய்கின்றன. நாம் தான் அதனைத் தேடிப் போக வேண்டும். இப்போதைய தொழில் முனைவோர் அனைவரும் மலாய் மொழியில் பாண்டித்தியம் பெற்றவர்களாக இருக்கின்றனர். கொஞ்சம் சிரத்தை எடுத்தால் எல்லாமே சாத்தியந்தான்.
முயற்சி செய்யுங்கள். முயற்சி திருவினையாக்கும்! வாழ்த்துகள்!
No comments:
Post a Comment